ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 5, 2015

சாப்பிடும்போது இனம்புரியாமல் கோபம் வந்து கணவன் மனைவிக்குள் ஏன் பகைமை வருகிறது?

நாம் மனித வாழ்க்கையில் நல்லதைப் பெறவேண்டும் என்று ஏங்கி இருக்கின்றோம். நாம் மற்றவர்களை பண்புடன் பார்க்கப்படும் பொழுது, உதாரணமாக இரு மனிதர்கள் ஒருவருக்கொருவர் காரசாரமாக ஏசிப் பேசிக் கொண்டிருக்கின்றார்கள் வைத்துக் கொள்வோம்.

அவர்கள் கோபமாகப் பேசும் நிலைகளை நாம் உற்றுப் பார்த்தால் நம் கண்ணின் கருவிழி அந்த மனிதனை நம் எலும்புக்குள் இருக்கும் ஊனுக்குள் ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாக்குகின்றது.

ஆனால் பதிவானபின், அந்த மனிதனின் உடலிலிருந்து வரக்கூடிய உணர்வை, அவர் வெளிப்படுத்தும் உணர்ச்சிகளை நமது கண்ணின் காந்தப் புலனறிவு கவர்கின்றது. அதை நுகரச் செய்கின்றது.

அதை நுகர்ந்தபின், அந்தக் கார உணர்ச்சிகள் உமிழ்நீரிலும், நம் ரத்தங்களிலும் இது கலக்கின்றது.

இப்படி, கோபமாகப் பேசும் உணர்வுகளை ஆண்கள் வேடிக்கை பார்த்துவிட்டு வீட்டிற்கு உணவு உட்கொள்ள வந்தால் என்ன ஆகும்? அந்த எரிச்சலூட்டும் உணர்வுகளை நுகர்ந்ததால் அந்த உணர்வுகள் உமிழ்நீராக மாறிவிடுகின்றது.

ஆக, உணவு உட்கொள்ளும் பொழுது சுவை கெட்டுப் போகின்றது. இப்படி சுவை கெட்ட உணர்வுகள் ஆகாரத்துடன் கலக்கபடும் பொழுது, காரமாகி, எரிச்சலாகின்றது.

அதனால், வெறுப்பும் வேதனையும் அடையும் பொழுது அதுவும் கலக்கின்றது. நாம் நுகரும் உணர்வுக்குள் இந்த இரண்டும் கலந்துவிட்டால்
ஆகாரம் சரியாக ஜீரணம் ஆகாது.
சிறிது நேரத்தில் நெஞ்சு கரிக்கத் தொடங்கும்.
ஜீரணிக்கும் சக்தி இழந்தபின் புளிக்கத் தொடங்கும்.

ஆகாரம் செல்லும் அன்னக் குழாய்களில் இருக்கும் பாதுகாப்புக் கவசத்தை இந்த புளிப்பின் சத்து இழக்கச் செய்துவிடுகின்றது. ஆகவே, நெஞ்சு கரிக்கின்றது. ஆனால், நாம் தவறு செய்யவில்லை.

இதைப் போல நாம் உணவாக உட்கொள்ளும் நிலைகளில் நம்மையறியாமலே இந்த உணர்வுகள் நமது ரத்த நாளங்களில் கலந்துவிடுகின்றது.

இப்படிக் கலந்தபின், கார உணர்ச்சியை ஊட்டும் இந்த உணர்ச்சிகள் நாம் உணவு உட்கொள்ளும் பொழுதெல்லாம் இனம்புரியாதபடி கோபம் வரும். இந்த உணர்ச்சிகள் அடிக்கடி அஜீரணத்தை உண்டாக்கும்.

அதனால் நம் உடலில் நல்ல அணுக்கள் பலவீனமடையும், சிந்திக்கும் ஆற்றல் குறையும். சிந்திக்கும் ஆற்றல் குறையும் பொழுது கோபம் அதிகரிக்கும். கோபத்தின் நிலையில் செல்லப்படும் பொழுது வெறுப்பு உணர்வு வரும்.

இந்த உணர்வுகளை மனைவியிடம் வெளிப்படுத்தும் பொழுது, இந்த உணர்வு மனைவி உணர்ச்சிகளிலும் தடைப்படுகின்றது. ஆக, ஒரு கணம் பட்ட இந்த உணர்வுகள் இதைப் பார்க்கும் பொழுதெல்லாம் பய உணர்வுகள் தோன்றும்.

பயம் ஏற்பட்டுவிட்டால் சமையல் செய்யும் பொழுது பொருள்களைச் சமமாகக் கலக்கும் தன்மை மறைந்துவிடும். அப்படி மறைந்துவிட்டால் ஒரு சமயம் கணவனால் ஏற்படுத்தப்பட்ட இந்த வேகம் இந்த உணர்வுகள் கணவன் மனைவிக்குள் பகைமை உணர்வுகள் உருவாக்கப்பட்டுவிடுகின்றது.

ஆக, கணவன் மனைவிக்குள் வெறுப்பின் உணர்வுகள் கலக்கப்பட்டு வெறுப்பின் உணர்ச்சிகளை உருவாக்கும் அணுக்களை இந்த உடலில் உருவாகத் தொடங்கிவிடுகின்றது.

அந்த வெறுப்பின் அணுக்கள் நமக்குள் உருவாகிவிட்டால் நம் உடலில் நல்ல அணுக்களைச் செயலற்றதாக மாற்றும் தன்மை வருகின்றது. இது நாளடைவில் ரத்தக் கொதிப்பாக மாற்றுகின்றது.

இதைப் போன்ற நிலைகளை தியானமிருப்போர், அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வை ரத்த நாளங்களில் கலக்கப்படும் பொழுது
அந்தக் கார உணர்ச்சிகளைத் தணித்து
சிந்தித்துச் செயல்படும் நிலைகள் வருகின்றது.

அதாவது, இந்தக் கார உணர்ச்சிகள் நமக்கு ஏன் தோன்றுகின்றது? கோபம் நமக்கு ஏன் வந்தது? என்ற உணர்வை நமக்கு நாமே அறிந்துகொள்ளும் ஆற்றல் வரும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளைக் கவர்ந்து சுவாசித்து கண்ணின் நினைவு கொண்டு நம் உடல் உறுப்புகள் முழுவதும் உள்முகமாகச் செலுத்துதல் வேண்டும்.

தியானத்தின் மூலம் நம் உடலில் இருக்கும் அனைத்து அணுக்களிலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை இணைக்கச் செய்யவேண்டும்.

இப்படி செய்யும்போது நம்மையறியாமல் தூண்டும் அந்த உணர்ச்சிகளை அடக்கி, தியானத்தால் சிந்திக்கும் ஆற்றல் நமக்குள் பெருகும்.