ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 11, 2016

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் தென் பகுதியில் வாழ்ந்த அகஸ்தியனின் பாதச் சுவடிகளில் பதிவான உணர்வின் ஆற்றல்கள்

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியன் அவன் விண்னை நோக்கி ஏகுவதும் இந்தச் சூரியனைப் பார்ப்பதும் அங்கே நடக்கும் நிகழ்ச்சிகளைப் பார்ப்பதும் அதன் தொடர் வரிசையாக மற்ற நட்சத்திரங்கள் உமிழ்த்துவதையும் இந்தப் பிரபஞ்சத்திற்குள் பரவும் நிலையும் அவன் சக்தி வாய்ந்த நிலைகளில் உற்றுப் பார்க்கும் நிலைகள் அவனுக்குள் வருகின்றது.

அகஸ்தியன் இதைப் போன்ற உணர்வுகளை அவன் நுகர்ந்து நுகர்ந்து அந்த உணர்வின் தன்மைகளை அவனுக்குள் வளர்க்கும் தன்மை பெறுகின்றான்.

பிற மண்டலங்களிலிருந்து (பேரண்டத்திலிருந்து) 27 நட்சத்திரங்கள் எப்படி இதைக் கவர்கின்றது? அது தனது உணர்வின் ஒளிக் கதிர்களை எப்படிப் பரப்புகின்றது?

சூரியன் அதை எவ்வாறு கவர்கின்றது?

அது வரும் பாதையில் மற்ற கோள்கள் எப்படி அதை இடைமறித்துத் தான் சுழலும் நிலைகளில் துருவப் பகுதியில் நுகர்கிறது? தன் சுழற்சியால் வெப்பமாவதும் அது நுகர்ந்த உணர்வுகள் கொண்டு கோள்கள் எப்படி விளைகின்றது? என்ற பேருண்மைகளை அகஸ்தியன் தனக்குள் கவர்கின்றான். அவனுக்குள் அது விளைகின்றது.

தனக்குள் அப்படி விளைந்த உணர்வின் எண்ணங்களைப் பரப்புகின்றான். அவன் பரப்பிய எண்ணங்களைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வைத்துக் கொண்டேயுள்ளது.

அகஸ்தியனின் தாய் தந்தையர் கண்ட உணர்வுகளும், இவனில் விளைந்து வெளிப்பட்ட உணர்வுகளும் இவை அனைத்தையும் சூரியனின் காந்தச் சக்தி கவர்ந்து வைத்து அலைகளாக இன்றும் பெருகிக் கொண்டுள்ளது.

அவன் வாழ்க்கையில் கண்டுணர்ந்த நிலைகளை அந்த அகஸ்தியன் இளமைப் பருவத்தில் பெற்றது அனைத்தும் நீங்கள் அனைவரும் பெற முடியும். அதைப் பெறுவதற்குத்தான் இந்த உபதேசமே.

ஏனென்றால், அகஸ்தியன் சில பகுதிகளில் அவன் நடந்து சென்ற பாதச் சுவடுகளும் அவர் உடலிலே விளைந்த உணர்வுகளும் தரையில் இங்கே பதிந்துள்ளது.

பதிந்திருந்தாலும் எங்கே அவரின் பதிவுகள் இருக்கின்றதோ அங்கெல்லாம் அவரிடமிருந்து வெளிப்பட்ட உணர்வலைகள் சுழன்று கொண்டுதான் இருக்கின்றது.

அந்த இடத்தில் தான் உங்களுக்கும் இந்த உபதேசத்தை உணர்த்தி உணர்வின் நினைவாற்றலை அந்த அகஸ்தியன் வாழ்ந்த காலத்திற்குச் (பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்) செலுத்தச் செய்கின்றோம்.

இந்த உணர்வுகள் பதிவாக்கிவிட்டால் அந்த அகஸ்தியன் இளம் பருவத்தில் பெற்ற அந்த ஞானத்தை நீங்கள் பெற முடியும். அந்த ஆற்றலையும் பெறமுடியும் என்பதைத்தான் யாம் உணர்த்திக் கொண்டுள்ளோம்.

எமது குருநாதர் காட்டிய அருள் வழியில் இந்தக் காட்டு பகுதியெல்லாம் வரச்சொல்லி நடக்கச் செய்து அகஸ்தியன் உணர்வுகள் எவ்வாறெல்லாம் பதிந்திருக்கின்றது என்றும் மற்ற கொடூர மிருகங்களிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்வதற்கு குருநாதர் காட்டிய உபாயத்தின் துணை கொண்டு அதையே அந்த உணர்வை நினைவு கொண்டு இப்பகுதிகளில் (பாபநாசம்) முதல் காலங்களில் யாம் சுற்றுப்பயணம் வந்தது தான்.

சூனியமாக இருந்த ஆதியிலிருந்து இந்தப் பேரண்டம் எவ்வாறு உருவாகி வந்தது என்று அகஸ்தியன் கண்ட நிலைகளை நம் குருநாதர் எம்மிடம் காட்டினார்.

ஆரம்பத்தில் தென் பகுதியில் தோன்றிய அந்த அகஸ்தியன் தன் இளம் வயதிலேயே பேரண்டத்தின் பேருண்மைகளை உணரும் பருவம் வந்தது.

இந்தப் பேரண்டம் இருண்ட உலகமாக இருக்கும் பொழுது விஷத்தின் தன்மை எப்படி உருவாகின்றது? அந்த விஷத்தின் தன்மை அணுக்களாக எப்படிப் பெருகுகின்றது? என்பதையெல்லாம் கண்டுணர்ந்தவன் அகஸ்தியன்.

இன்று சூரியன் இருக்கின்றது. அதிலிருந்து அணுக்களாக வெளி வருகின்றது.

ஆனால், ஆதியில் சூரியனே இல்லாத பொழுது அது ஆவிகளாக மாறுகின்றது. ஆவிகளாக இருக்கப்படும் பொழுது அது அடர்த்தியாகி மேகங்கள் எப்படி இருக்கின்றதோ இதைப் போல அக்காலங்களில் மேகங்களாக எப்படித் தொடர்ந்துள்ளது என்ற நிலையையும் உணர்ந்தான் அகஸ்தியன்.

இது அகஸ்தியர் தன் வாழ்க்கையில் அவனுக்குள் விளைந்த உணர்வுகள் அது “முன்னோக்கிச் சென்று” இன்று அண்டத்தின் ஆற்றல் எப்படி என்ற நிலையை அவனால் அந்த விஷத் தன்மையின் ஆற்றல் கொண்டு இந்த வலிமை பெற்றதனால் காண முடிந்தது.

அந்த வலிமையான எண்ண அலைகளால் இந்த உலகம் எப்படி உருவானது? இந்தப் பிரபஞ்சம் எப்படி உருவானது? சூரியன் எப்படி உருவானது? என்று கண்டறியும் ஆற்றலும் அவனுக்குள் வருகின்றது.

இந்த ஆற்றல் அவனுக்குள் எப்படி வந்தது என்ற நிலையை இங்கே குருநாதர் அதை உபதேசித்தருளினார். இந்த உணர்வின் நிலையைப் பதிவாக்கி மீண்டும் அதை நினைவாக்கி அந்த அலையின் ஆற்றலை நீ எப்படிப் பருக வேண்டும் என்பதையும் உபதேசித்தார்.

அதன் வழி கொண்டுதான் உங்களுக்கு இப்பொழுது சொல்வது.

பேரண்டத்தில் சூரியனோ, நட்சத்திரங்களோ, கோள்களோ இல்லாத பொழுது இருண்ட நிலைகள் ஒரு அடர்த்தியான நிலை வரும் பொழுது ஒரு சிறு வெப்பமாகின்றது.

வெப்பத்தால் ஒரு ஆவி மாதிரித் தோன்றுகின்றது. ஆவிகளாக உருவான பின் அடர்த்தியின் தன்மை நாளாகும் பொழுது அது நஞ்சாக எப்படி மாறுகின்றது? என்று அகஸ்தியன் கண்டான்.

இதை இன்று விஞ்ஞான அறிவில் எப்படி திரவகத்தை ஊற்றிய பின் அதனுடன் சேர்ந்த பின் எப்படி எப்படியெல்லாம் மாறுகின்றது என்று காணுகின்றார்களோ அதே போன்று குருநாதர் பேச வைத்து உணர்வினை இயக்கச் செய்து அந்த அகஸ்தியன் உணர்வைத் தனக்குள் கவர்ந்து அவன் கண்டுணர்ந்த தொடர்பை நீ எப்படிப் பெறவேண்டும் என்ற நிலையை குருநாதர் உணர்த்தினார்.

அதன் தொடர் வரிசை கொண்டு பார்த்தேன்.

அவ்வாறு நான் பார்த்த, கண்டுணர்ந்த, எனக்குள் விளைய வைத்த அந்த உண்மையின் உணர்வுகள் அனைவரும் எளிதில் பெற முடியும் என்பதற்குத்தான் இங்கே பாபநாசத்தில் வருடம் தோறும் கூட்டமைப்பாக அமைத்து அந்த அகஸ்தியனின் ஆற்றல்களைப் பெறச் செய்கிறோம்.
தென்னாடுடைய சிவனே போற்றி, 
எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி