ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 29, 2016

மார்க்கம் + கண்டவன் - மார்க்கண்டேயன் – எந்தக் குழந்தை வேண்டும்...?

(அகஸ்தியன்) துருவன் தன் ஐந்தாவது வயதில் மகா சித்து பெற்றான் என்று சொல்வார்கள்.

ஏனென்றால், அந்த ஐந்தாவது வயதில் துருவனின் தாய் தந்தையர் இறந்த பின் அவன் துருவத்தை நோக்கித் தவமிருந்தான் என்றும் சொல்வார்கள்.

அதே சமயத்தில் அவன் பதினாறாவது வயதை எட்டப்படும் பொழுது அக்கால மக்கள் அவனுக்குத் திருமணத்தை முடிக்கின்றார்கள். ஆக, வசிஷ்டர் அருந்ததி என்பார்கள். அதாவது அருந்ததி என்ற மனைவியைத் தனக்குள் இணைக்கின்றான்.

விண்ணுலக ஆற்றலை அகஸ்தியன் கண்டாலும். அந்தப் பதினாறாவது வயதிலிருந்து கணவனும் மனைவியும் ஒன்றாகச் சேர்த்து தன் மனைவிக்கும் அது பெறவேண்டும் என்று எண்ணிப் பாய்ச்சுகின்றான்.

அவனின் மனைவியும் இந்தச் சக்தியைத் தனக்குள் பெற்று மீண்டும் அது தன் கணவனுக்குப் பெறவேண்டும் என்ற உணர்வைப் பாய்ச்சுகின்றது.

இப்படி அவர்கள் இருவருமே ஒருவருக்கொருவர் உயர்ந்த நிலைகளில் எண்ணி வரப்படும் பொழுதுதான் “சாவித்திரி எமனிடமிருந்து தன் கணவனை மீட்டினாள்..,” எனும் நிலையாகப் பிறவியில்லா நிலையை அடைந்தனர்.

அவர்கள் இரு உணர்வும் ஒன்றாகி, இரு மனமும் ஒன்றாகி, இரு உயிரும் ஒன்றான நிலைகள் கொண்டு அவர்கள் எடுத்துக் கொண்ட உணர்வுகள் ஒளியாக மாறி இன்றும் விண்ணுலகில் வரும் உணர்வை ஒளியாக மாற்றிக் கொண்டுள்ளார்கள்.

அதற்காகத்தான் சிறு குட்டிக் கதைகளைப் போட்டுக் காட்டி மார்க்கண்டேயன் என்று காட்டுகின்றார்கள்.

(விண் செல்லும்) “மார்க்கத்தைக் கண்டவன்” - மார்க்கண்டேயன்.

உனக்கு எந்தக் குழந்தை வேண்டும் என்று கேட்கப்படும் பொழுது எனக்கு என்றும் பதினாறு என்ற நிலைகளில் (விண்ணிலே ஒளியாக வாழும்) அந்தக் குழந்தைதான் வேண்டும் என்ற நிலைகளை காவியப் படைப்பில் தெளிவாகச் சுட்டிக் காட்டுகின்றார்கள்.

நாம் தெரிந்து கொண்டோமா..,? சற்று சிந்தியுங்கள்.

இவ்வாறு பதினாறாவது வயதில் அவர்கள் இருவரும் தனக்குள் எடுத்துக் கொண்ட பின் கணவனும் மனைவியும் ஒன்றிய நிலைகள் கொண்டு துருவ மகரிஷி என்ற நிலை அடைந்து துருவ நட்சத்திரமாக ஆனார்கள்.

ஆகவே, என்றும் பதினாறு என்று இளமைப் பருவமாக வளர்ந்து கொண்டேயிருப்பது துருவ நட்சத்திரம். அதனைப் பின்பற்றிச் சென்றவர்கள் சப்தரிஷி மண்டலம்.

அந்த அகஸ்தியனை[ப் பின்பற்றிச் சென்றவர்கள் அனைவருமே என்றும் பதினாறு என்ற நிலையில் இன்றும் வளர்ச்சி பெற்றுக் கொண்டேயுள்ளார்கள்.

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அந்த அகஸ்தியமாமகரிஷி வாழ்ந்த காலங்களில் அந்த மலைப் பகுதியில் பெற்ற மக்கள்தான் பெரும்பகுதியானோர் அவருக்குப் பின் சப்தரிஷி மண்டலத்தை அடைந்தார்கள்.

அதற்குப் பின் சிறுகச் சிறுகக் குறைந்து அங்கே போவதே நின்றுவிட்டது. அந்த எல்லையை அடையும் “மார்க்கங்களைத்தான்” நமது குருநாதர் காட்டிய வழியில் உங்களுக்குச் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.