ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 1, 2016

தீமைகளை நாம் அனாதையாக்கிப் பழக வேண்டும்...! - "சதுர்த்தி"

தீமையோ, பகைமையோ, வேதனையோ இவை அனைத்தையும் நாம் நுகரப்படும் பொழுது நாம் நுகர்ந்த உணர்வுகள் கருவாகி இரத்த நாளங்களில் சேர்க்கப்படுகின்றது, சேமிக்கப்படுகின்றது.

அது சேமிப்புக் கிடங்காக இருக்கின்றது.

அதனின் உணர்வின் தன்மை நினைவாற்றல் பெருகப்படும் பொழுது அது அணுவாக மாறி உணவுக்காக ஆசையைத் தூண்டும் பொழுது அந்த உணர்வுகளே நமக்குள் இயக்கப்பட்டு அந்த உணர்வின் இயக்கமாக நாம் இயங்குவதும் அதை நுகர்ந்த உணர்வு அந்த அணு தனக்குள் உறைவிடமாக உருப்பெற்றுவிடுகின்றது.

அணு உருவானால் அது தன் பசிக்காக ஏங்கும் பொழுது உயிர் காற்றிலிருந்து அதே இனமான சத்தை எடுத்து அந்த அணுவிற்கு உணவாகக் கொடுக்கும்.

நம் உடலுக்குள் இத்தகையை அணுக்கள் வளர்ந்தால் வேதனை என்ற நிலையை உருவாக்கி மனிதனல்லாத உருவிற்கு நம்மை அழைத்துச் சென்றுவிடும்.

இதைப் போன்ற நிலைகளில் நமக்குள் உருப்பெறாமல் தடுத்திட வேண்டுமல்லவா? அதைத்தான் சாஸ்திரங்கள் கூறுகின்றது.

சிவன் இராத்திரி, தீப ஒளி, விஜய தசமி, விநாயகர் சதுர்த்தி இதைப் போன்று ஒவ்வொரு நிலைகளிலேயும் மனிதன் அந்த உன்னத உணர்வின் தன்மையைத் தனக்குள் பெருக்கும் வழியைக் காட்டினார்கள் ஞானிகள்.

அதே சமயத்தில் நாம் ஒன்று சேர்த்து வாழும் நிலையையும் நமக்குள் அறியாது சேர்ந்த பகைமையை அழிக்கும் நிலையாக அதை நீக்கிடும் நிலைகளை “வைகுண்ட ஏகாதசி” என்றும் உருவாக்கிக் கொடுத்துள்ளார்கள் ஞானிகள்.

அனைவரும் நலம் பெறவேண்டும் என்றும் அனைவரும் அருள் ஒளி பெறவேண்டும் என்றும் இந்த உணர்வை எடுத்தால் மற்ற பகைமை உணர்வுகள் நமக்குள் வளராது தடுக்கப்படுகின்றது.

எல்லோரும் ஏகாந்தமாக இருக்க வேண்டும் என்று அனைவரும் எண்ணும் பொழுதுதான் நமக்குள் அந்த ஏகாந்த சக்தி உருவாகின்றது.

வைகுண்ட ஏகாதசி அன்று அதிகாலையில் நான்கு மணிக்கு ஏகாந்தமடைந்த அந்த அருள் உணர்வின் தன்மையை நாம் நுகர்ந்தால் அந்த உணர்வின் தன்மை வளர்ச்சியடையப்படும் பொழுது பகைமை என்ற உணர்வுகள் நமக்குள் நுழையாது தடைப்படுத்துகின்றது.

அதன் வழி தான் குரு காட்டிய அருள்வழியில் அதிகாலையில் துருவ தியானத்தை எடுக்கும் பழக்கத்தை ஏற்படுத்துகின்றோம்.

ஒவ்வொருவரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும், எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும், எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெறவேண்டும் என்று உங்கள் உடலுக்குள் உள்முகமாக அந்தச் சக்திகளைப் பாய்ச்சச் செய்கின்றோம்.

அந்தச் சக்தி கணவன் மனைவிக்குப் பெறவேண்டும், மனைவி தன் கணவனுக்குப் பெறவேண்டும் என்றும் குழந்தைகள் தங்கள் தாய் தந்தையருக்குப் பெறவேண்டும் என்று இத்தகைய வலுவை சேர்த்துக் கொள்தல் வேண்டும்.

அதே போன்று நாங்கள் பார்க்கும் அனைவரும் எங்களைப் பார்க்கும் அனைவரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று மற்றவர்களுக்கும் இந்த அருள் உணர்வுகளைப் பெறச் செய்தல் வேண்டும்.

ஒவ்வொரு நாளும் இந்தக் காலை துருவ தியானத்தில் இதைப் போன்று ஒவ்வொருவரும் செய்தல் வேண்டும்.

அப்பொழுது நாம் ஒவ்வொருவரும் ஈர்க்க மறுக்கும் அந்தத் தீமையான பகைமையூட்டும் உணர்வுகள் அனைத்தும் அனாதையாகின்றது. நாம் ஈர்க்கும் சக்தியை இழந்துவிட்டால் தீமையின் உணர்வுகள் தனித்து நிற்கும்.

காலையில் சூரிய உதயமாகும் பொழுது தனித்துப் பிடிப்பில்லாத நிலைகளைச் சூரியன் அதைக் கவர்ந்து விண்வெளியிலே அழைத்துச் செல்லும். பூமியில் சூனியமான இடங்கள் காற்றலைகள் இல்லாது அசைவில்லாது இருக்கும் இடங்களுக்கு அழைத்துச் சென்றுவிடும்.

ஆனால், அசைவில்லாத இடங்களுக்கு அழைத்துச் சென்றாலும் கடல் அலைகள் ஈர்க்கும் தன்மை வரும் பொழுது அதனின் உணர்வின் தன்மை கொண்டு கீழே இறங்கினால் இதைக் கவர்ந்து கடலுக்குள் அமிழ்த்திவிடும்.

ஆகவே, இந்தப் பரமான பூமியும் பரிசுத்தமாகின்றது.

நமக்குள் தீமையை நுகராத தன்மையும் வருகின்றது. அந்த அருள் உணர்வின் தன்மை நமக்குள் வளர்க்கப்படுகின்றது.

இப்படி இந்தப் பன்னிரெண்டு மாதங்களில் எதை எதை நாம் நுகர வேண்டும்? தீமைகள் நமக்குள் சேராது எப்படித் தடுக்க வேண்டும்? என்ற பேருண்மையைத் தெளிவாகக் காட்டப்பட்டது.