ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 21, 2014

ஒருவர் நம்மிடம் போக்கிரித்தனம் செய்தால் அவ்ர் செயலை எப்படித் தடுப்பது என்று தெரிந்து கொள்ளுங்கள்

உயிரினங்களில் எப்படி உடல் மாற்றமடைகிறது? உடல்கள் மாறி மாறி நாம் எப்படி மனிதனாக வந்தோம்? என்பதனை அறியச் செய்வதற்காக குருநாதர் எம்மை மிக மிகக் கஷ்டத்தில் ஆழ்த்தினார்.

கஷ்டங்கள் நேரும் பொழுதெல்லாம் எப்பொழுது இவரைவிட்டுத் தப்பித்து ஓடிவிடுவோம் என்ற நினைவு வரும். அந்த நேரத்தில் மேஜிக் மாதிரி சில அற்புதங்களைச் செய்து என் மனதைத் திருப்பிவிடுவார்.

இது போன்று என்னயறியாமலேயே பல நிலைகளை நம் குருநாதர் செய்தார். உங்களை அது போன்று காட்டில் கஷ்டபடச் செய்யவில்லை.

கரடிகளும், புலிகளும் நாட்டுக்குள்ளேயே இருக்கின்றது. மனிதன் உடலுக்குள்ளும் இந்த உணர்வின் தன்மை அதிகமாகி மனிதன் வாழமுடியாத நிலைகளில் தாக்குகிறது.

அப்பொழுது அந்த உணர்வுக்கு இரையாகி விடுகின்றோம். அதன் நிலைக்குச் சென்றுவிடாமல் இந்த உணர்விலிருந்து நாம் மீள வேண்டும்.

ஒவ்வொரு மிருகங்களுக்கும் ஒவ்வொரு குணம் உண்டு.
நரி ராஜதந்திரமாக இருக்கும்.
புலி தன் வீரியத்தன்மை கொண்டு செயல்படும்.

ஆடு மாடுகள், காட்டில் மேய்ந்து கொண்டிருக்கும் போது, சிறிது நேரம் நாம் உற்றுப்பார்த்தோம் என்றால் இவன் ஏதோ செய்கிறான் என்று ஓடிவிடும் அல்லது நம்மைத் துரத்திக்கொண்டு வரும்.

ஒருசமயம் குருநாதர், காட்டெருமை கூட்டத்தை வேடிக்கைப் பார்க்கச் செய்தார்.
அது முட்டிவிடுமோ.., முட்டிவிடுமோ.. என்று எண்ணி
உற்றுப் பார்த்துக்கொண்டு இருக்கும்போது
எம்மைத் துரத்தி வந்துவிட்டது.

அப்பொழுது, குருநாதர் நீ தப்ப வேண்டும் என்றால் அந்த மரத்தின் பின்னால் போய்விடு என்று சொல்லிவிட்டார்.

மரத்தின் அருகில் யாம் நின்று கொண்டிருந்த சமயம், காட்டெருமை வேகமாக வருவதைப் பார்த்து மரத்தின் பின் ஒதுங்கிக்கொண்டேன். வேகமாக வந்து முட்டியதில் அந்த மரமே கதிகலங்கியது.

மரத்திலிருந்து பிஞ்சு, காய்கள் எல்லாம் உதிர்கின்ற அளவுக்கு அழுத்தமாகத் தாக்கியது. அதனுடைய உணர்வுகள் வலுவான நிலையில் முட்டி, தன்னைக் காத்துக்கொள்ள இது மாதிரி தாக்க வருகிறது.

இதுபோன்று நாம் என்ன செய்ய வேண்டும் என்றால், யாராவது கோபமாக அதட்டித் திட்டினார்கள் என்றால் நீங்களே தெரிந்து அதை உணர்ந்து கொள்ளுங்கள்,
ஈஸ்வரா.., என்று உயிரை எண்ணி
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும்,
எங்கள் உடல் முழுவதும் பெறவேண்டும் என்று
அவர்கள் உணர்வை நமக்குள் வராதபடி தடுத்துவிடவேண்டும்.

அவ்வாறு தடுத்துவிட்டு, சரி., அவர்கள் செய்தார்கள் அவர்களாகவே உணர்வார்கள் என்று விட்டுவிட்டால் இந்த உணர்வு அவர்களுக்குள் சென்று தீயதை மாற்றி நல்லதாக அவர்களுக்குள் விளையும்.

ஏனென்றால் இந்த உயிர் நாம் எதை எண்ணுகின்றோமோ அதை உருவாக்கிவிடுகிறது.
இந்த உடல் நமது அல்ல, அவனுடையது.
உணர்வால் அறியக்கூடிய உணர்ச்சி நமக்கு உண்டு.

ஆக, எண்ணியதை உருவாக்கிக் கொடுப்பது அவன் (உயிரின்) வேலை. ஒவ்வொன்றிலும் நாம் நல்லதைச் சேர்த்து எண்ணும்போது அதே உணர்வு நம்மை மாற்றுகின்றது.

சலிப்பு சங்கடம் என்று அதிகமானால் அதை பலவீனப்படுத்த வேண்டுமென்றால் ஓம் ஈஸ்வரா குருதேவா என்று புருவ மத்தியில் துருவ நட்சத்திரத்தை எண்ணி இணைத்துவிடவேண்டும்.