ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 27, 2013

தீமை செய்யும் அணுக்களை, நன்மை பயக்கும் அணுக்களாக மாற்றும் வழி

ஒருவன் தீமையை செய்கிறான் என்றால்,
அவனிடம் உள்ள தீமையின் உணர்வுகளை வீழ்த்துவதற்குப் பதில்,
தீமை செய்தவனின் உடலையே சாய்த்துவிடும் நிலை வருகிறது
என்று தெளிவாகக் காண்பித்தருளினார்,  நமது குருநாதர்.

தீமை தரக்கூடியவைகளாக இருந்தாலும், மனிதன் அவைகளை, தனக்குச் சாதகமாக மாற்றிக் கொள்ளும் வல்லமை வாய்ந்தவன். 

அதே போன்று, தீமை செய்வோரின் உணர்வுகள் நமது உணர்வில் கலந்துவிட்டால், அந்தத் தீமையை விளைவிக்கும் உணர்வுகள், நமக்குள் விளையாது தடுத்து,  சமப்படுத்தும் நிலை பெறவேண்டும்.

மகரிஷிகள், தம்மிடத்தில் தீமையின் உணர்வுகள் வந்து மோதும்பொழுது அவைகளை செயலற்றதாக்கி, தீமையின் உணர்வுகளை ஒடுக்கி, அவைகளுடைய செயலாக்கங்களை மாற்றி, தம்முள் நல்லுணர்வினை,  வலிமை மிக்கதாக மாற்றியவர்கள்.

அவர்களைப் போன்று, நாம் நம்முள் தீமையின் உணர்வுகளை ஒடுக்குகின்ற பொழுது,  ஒருவன், நமக்கு எத்தகைய தீமைகளை செய்து கொண்டிருந்தாலும்,  அது நம் உடலுக்குள், தீமை விளைவிக்கும் அணுக்களை உருவாக்குவதில்லை.

மகரிஷிகளின் அருளுணர்வுகள், நமது உடலில் கலக்கப்படும் பொழுது,  நமது உடலில் தீமைகளை உருவாக்கும் அணுக்கள் விளைந்திருப்பினும், அவைகளை,  நமக்குள் நன்மை பயக்கும் அணுக்களாக மாற்றுகின்றன.

உதாரணமாக,  உடலுக்கு ஆரோக்கியம் தரும் நல்ல மருந்துடன்,
சிறிது விஷத்தைக் கலக்கப்படும் பொழுது,
விஷம் நல்ல மருந்திற்கு ஊட்டச்சக்தியாக மாறுகின்றது.
எந்த மருந்தை, சிறிது விஷத்துடன் கலந்து கொடுக்கின்றோமோ,
அந்த விஷம் ஊடுருவி,
இந்த நல்ல மருந்தின் தன்மையை, உடலெங்கும் பரவச் செய்கின்றது.

நோய்வாய்ப்பட்ட மனிதனின் உடலில், மருந்தினைச் செலுத்தும் பொழுது, மருந்துடன் கலந்துள்ள விஷம், மருந்தினை எடுத்துச் சென்று, உடலில் உள்ள வேதனையை உருவாக்கும் உணர்வின் அணுக்களை உணவாக உட்கொண்டு, தன் இனத்தை உருவாக்கும் தன்மையால், நல்ல மருந்தின் தன்மை அடர்த்தியாகி, வேதனையை உருவாக்கும் அணுக்களை, வளரவிடாமல் தடுக்கச் செய்கின்றது, மருந்துடன் கலந்துள்ள விஷம்.

ஆக, இதைப் போன்று ஞானிகள் காண்பித்த வழியில்,
அருள்ஞானியின் உணர்வை, நம் எண்ணத்துடன் கலந்து,  நாம், எத்தகைய தீமையின் உணர்வைக் கண்டறிந்தோமோ, அப்பொழுது,
மகரிஷியின் ஆற்றல் மிக்கசக்தி நாம் பெற வேண்டும், 
ன்ற உணர்வினை இணைத்து,
நமது உடலுக்குள் செலுத்திவிட்டால்
அருள் ஞானியின் உணர்வுகள்
இந்த விஷமான நிலையை ஒடுக்கிவிட்டு,
நமக்குள் வலுக் கொண்ட நிலையாக  மாறுகின்றது.

இந்த உண்மைகளை, எமது குருநாதர் எமக்கு உணர்த்தி, எம்முள் உணர்ச்சிகளை தூண்டச் செய்து, எமக்குள், இதனின் நினைவின் ஆற்றலை பதியச் செய்து, துருவமகரிஷிகளின் ஆற்றலை நீ பருகு என்றார்.

யாம் காட்டினுள் இருந்தபொழுது, பல உயிரினங்கள் தன் பசியைத் தணிப்பதற்காக மற்ற உயிரினங்களைத் துரத்துவதும், மற்றவைகள் அஞ்சி ஓடுவதும், சிக்கிக் கொண்டவைகள் ஓலமிடுவதும் போன்றவைகளைக் கண்டு,  யாம் அச்சப் படும் நிலை உண்டானது.

அவைகள் செய்த துயர நிலைகளால், துயரத்தை உருவாக்கும் அணுக்கள் எமக்குள் எப்படி விளைகின்றது என்றும், இதை உடனடியாக மாற்றுவதற்கு யாம் எவ்வாறு செயல்பட வேண்டும்? என்றும், எமக்கு குருநாதர் உபதேசித்தார்.

ஆக, மகரிஷிகள் தமக்குள் வளர்த்துக்கொண்ட உணர்வை, உன்னிடத்தில் வளர்த்துக்கொண்டால், மற்றொன்றைக் கொன்று புசிக்கும் அந்த உயிரினங்கள், உன்னைப் பார்த்தாலும், உன்னுள் வளர்த்துக் கொண்ட உணர்வின் மணம் கண்டு, அது அஞ்சி ஓடும். ஆக, அச்சுறுத்தும் உணர்வுகள் உனக்குள் வந்தாலும்,  அதை அடக்கி ஒளியாக உனக்குள் மாற்றுகின்றாய்.

எதனின் உணர்வை உனக்குள் அடக்குகின்றாயோ, அதனின் உணர்வுகள் உனக்குள் வலு பெறும்பொழுது, வெளிப்படும் நுண்ணிய அலைகளை நுகரும் ஆற்றல், மற்ற உயிரினங்களுக்கு உண்டு.

இதனை நுகரும் உயிரினம், இவன் நம்மை அடக்கி விடுவான், என்ற உணர்வு கொண்டு அது அஞ்சி ஓடும் என்ற நிலைப்படுத்தி, அதை நிதர்சனமாக காண்பித்தார் குருநாதர்.

ஆகவே, நாம், மகரிஷிகளின் அருள்சக்தி என் உடல் முழுவதும் படர்ந்து என் உடலில் உள்ள ஜீவான்மா, ஜீவ அணுக்கள் அனைத்தும் பெறவேண்டும் ஈஸ்வரா, என்று எண்ணி ஏங்கி தியானிக்க வேண்டும்.

 நம்மில் கேட்டுணர்ந்த உணர்வின் தன்மை கொண்டு, மகரிஷிகளின் அருள் உணர்வுகளை எண்ணி,  நமக்குள் இருக்கும், துன்புறுத்தும் உணர்வின் அணுக்களுடன், மகரிஷிகளின் அருள்சக்தியை இணைக்கப்படும் பொழுது, அது நம்முள் தீமைகளைக் கவர்ந்திடும் நிலைகளை மாற்றி,  அருள் மகரிஷிகளின் இனங்களை, கவர்ந்திடும் நிலை வருகின்றது.

இப்படி, மகரிஷிகளின் அருளுணர்வுகளை நம்முள் இணைக்கப்படும் பொழுது, நமக்குள், தீமைகளை அடக்கிடும் தன்மை வருகின்றது. நம்முள் அஞ்சிடும் நிலை மாறுகின்றது. தெளிந்த மனதின் தன்மை, நம்மில் உருவாகின்றது. எமது அருளாசிகள்.