ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 26, 2014

நாம் எந்த ஆயுள் மெம்பராக இருக்க வேண்டும்?

பிறருக்கு தர்மம் செய்கின்றேன் என்று சொல்வார்கள். அவர்கள் வேதனைகளில் ஆயுள் மெம்பராகச் சேர்ந்து அவர்களைக் காப்பாற்றப் போகின்றேன் என்று சொல்வார்கள்.

அந்த வேதனைகளில் ஆயுள் மெம்பராகச் சேர்ந்து, அந்த வேதனைகள் எல்லாம் இவருக்குள் விளைந்து யார் மேல் பற்று கொண்டாரோ அவரின் உடலுக்குள் செல்வார். அந்த உடலுக்குள் சென்று அந்த ஆயுள் மெம்பராகிவிடுவார்.

நாம் எந்த ஆயுள் மெம்பராக இருக்க வேண்டும்? துருவ நட்சத்திரத்தின் ஆயுள் மெம்பராகச் சேர்ந்தால் தீமையை நீக்கிவிடும்.

தர்மம் செய்வது தப்பா? என்று கேள்வி கேட்காதீர்கள். 

தர்மம் செய்யவேண்டும். அதே சமயத்தில் தீமை நமக்குள் வராதபடி துருவ நட்சத்திரத்தின் ஆயுள் மெம்பர்களின் கூட்டத்துடன் இருக்க வேண்டும்.

நீங்கள் காசு கொடுத்து தர்மம் செய்தாலும், அவனுக்கு நல்ல ஒழுக்கம் இல்லையென்றால் அவன் சாப்பிட்டுவிட்டு குறும்புத்தனம் செய்வான். பார்த்தால் நமக்கு வேதனை வரும்.

நல்லது செய்தாலும், அதில் ஒருவர் தவறு செய்யும் பொழுது, “இப்படிச் செய்கின்றார்களே” என்று இரண்டு மடங்கு நாம் வேதனைப்படுவோம்.

அப்பொழுது வேதனையின் உணர்வுகளைப் பெற்றுக் கொள்வதற்கு ஆயுள் மெம்பராகச் சேர்கின்றார்கள். ஆகவே, எந்தத் தர்மத்தைச் செய்தாலும் வேதனை என்ற உணர்வுகளைச் சுத்தப்படுத்தும் உணர்வுகள் நமக்குள் வரவேண்டும்.

நாம் பரிவு கொண்டு பண்பு கொண்டு
பிறரைக் காக்கும் நிலை இருந்தாலும்
வெறுப்படையும் வேதனைப்படும் உணர்வுகளை எடுத்து
நம்மைப் படுபாதாளத்திற்குத் தள்ளும் நிலையிலிருந்து விடுபடவேண்டும்.

அதற்காகத்தான் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களுக்குள் பதிவு செய்கின்றேன். பதிவு செய்ததை நீங்கள் மீண்டும் எண்ண வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து உடலில் உள்ள ஜீவ அணுக்கள் ஜீவ ஆன்மாக்கள் பெறவேண்டும் என்று உடலுக்குள் நினைவைச் செலுத்திப் பழக வேண்டும்.

இவ்வாறு செய்தோம் என்றால் யாரால் நமக்குக் கோபம் வந்ததோ அவர்களுக்குச் சிந்திக்கும் தன்மை வரும்.

நாங்கள் சிந்தித்துச் செயல்படும் தன்மை பெறவேண்டும், எங்கள் பார்வை எல்லோருக்கும் நன்மை பயக்க வேண்டும் என்ற இந்த உணர்வை நாம் எடுத்துக் கொண்டோம் என்றால்
நமக்குள் வரும் வேதனை, கோபம், ஆத்திரம்
போன்ற உணர்ச்சிகளைத் தடைப்படுத்தி
நோய் வராது நம்மைக் காக்கும்.