ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 5, 2014

இந்த உடலுக்குப்பின் இன்னொரு உடல் வேண்டாம், அழியா ஒளி சரீரம் பெறுவோம்

நம் உடலிலிருந்து (சிவத்திலிருந்து) வெளிப்படும் சொற்கள் அதன் உணர்ச்சிகள் தனுசு. ஒரு அம்பைப் பாய்ச்சியவுடனே அது ஊடுருவி காயத்தை ஏற்படுத்தும்.

ஆகையால், புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும், ஒவ்வொரு உடலிலும் விளைந்த உணர்வின் தன்மை சிவ தனுசு. இப்படி உடலுக்குள் சிவ தனுசாக மாறுகின்றது.

மனித உடலுக்குள் நோயானபின் வேதனையுடன் சொன்னால் அது தனுசு. கேட்போர் உணர்வுகளில் அது பாய்ந்து அந்த உணர்ச்ச்சியைத் தூண்டுகின்றது. நல்ல குணங்களை அங்கே வீழ்த்துகின்றது. இது சிவ தனுசு.

தவளையைப் பாம்பு விழுங்கும்போது, தவளை தன்னைப் பாதுகாக்க எண்ணுகின்றது. அப்பொழுது தவளை தன்னைப் பாதுகாக்க பாம்பின் உணர்வை எடுத்து பாம்பாக மாறுகின்றது.

இப்படி ஒவ்வொன்றும் அதனதன் உணர்வை எடுக்கின்றது.

இதே மாதிரித்தான் நாம் எண்ணிய உணர்வுகள் நம் உடலில் இருக்கும்பொழுது அதனதன் அணுவாக வளர்க்கச்செய்து தன் அருகில் இருக்கக்கூடிய நல்ல குணங்களைச் செயலற்றதாக மாற்றுகின்றது.

நாம் ஒரு வீட்டில் குடியிருக்கின்றோம். பக்கத்து வீட்டுக்காரர் வேதனை வெறுப்புடன் இருந்து அடிக்கடி சொன்னால், நாம் அதைக் கேட்டால் அது சிவ தனுசு. அது நமக்குள் அந்த வேதனையையும் வெறுப்பையும்தான் உருவாக்கும்.

என்ன உதவி செய்தாலும்.., இப்படிப் பேசுகின்றார்களே என்று இந்த உணர்வுகள் அதன் வழிதான் அது நமக்குள் வளர்க்கச்செய்யும்.

வயலில் களைகள் தோன்றும்போது, நல்ல பயிர்களின் சத்தை களைகள் எடுத்துக்கொள்வதால் பயிர் வாடுகின்றது.

இதே மாதிரி நம் உடலில் வேதனை, வெறுப்பு, சலிப்பு, சங்கடம், கோபம், குரோதம் இவைகளெல்லாம் நமக்குள் களைகளாகத் தோன்றிவிடுகின்றது.

அதனால் நம் நல்ல அணுக்களை வளர விடுவதில்லை. இதுவெல்லாம் சேர்ந்து நமக்குள் ஒன்றாகச் சேர்க்கப்படும்போது என்ன ஆகும்?

நாம் ஆரம்பத்தில் புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் எப்படி விஷத்தை வடிகட்டும் உறுப்புகளைப் பெற்று மனிதனாக வளர்ந்தோமோ, அதை மாற்றிவிட்டு விஷத்தைச் சேமிக்கும் நிலைகளாகி
உயிர் உடலைவிட்டு வந்தவுடன்
எந்த உணர்வு கலந்து உடலானதோ
அத்தகைய விஷமான உடலுக்குள் இழுத்துச் சென்றுவிடும்.

அதன் உணர்வைக் கருவாக்கி நம்மைக் கீழான பிறவிகளுக்கு அழைத்துச் சென்றுவிடும்.

இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளைச் சேர்த்து, வாழ்க்கையில் வரும் விஷமான உணர்வுகளை நீக்கி ஒளியின் உணர்வாகக் கருவாக்கி, அழியா ஒளிச் சரீரம் பெற நாம் தியானிப்போம்.

இந்த மனித உடலுக்குப்பின் இன்னொரு உடல் பெறாது, பிறவியில்லா நிலை அடைந்த
அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில்
நாம் அனைவரும் இணைந்து வாழ்வோம்.