ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 4, 2014

நாம் எதன் வழியில் இயங்குகின்றோம்? வாழுகின்றோம்? - ஞானகுரு

கோபமான உணர்வுகளை நுகர்ந்தோமென்றால் அடிக்கடி கோபம் வந்து ஒருவரை தாக்கவேண்டும் என்ற உணர்ச்சியே வருகின்றது. எதைச் சொன்னாலும் தாக்கவேண்டும் என்றுதான் உணர்வு வருகின்றது.

வேதனையை எண்ணினால் என்ன வாழ்க்கை..? என்று சோர்வடையச் செய்கின்றது.

இதே மாதிரி எந்தெந்த உணர்வுகள் நம் ரத்தங்களில் கலக்கின்றதோ அந்த வேதனையான அணுக்கள் வேதனையை எடுத்து வளரத் தொடங்குகின்றது.

இப்படி எத்தனை வகை குணங்களை நாம் நுகர்ந்து அறிந்தோமோ அத்தனையும் நம் இரத்தத்தில் உண்டு.

நமது பூமியில் காற்றில் உள்ளதை அந்தந்த உணர்வு கொண்ட வித்துக்கள் கவர்ந்து செடி கொடி மரமாக வளர்கின்றது.

இதே மாதிரித்தான் ஒரு மனிதன் கோபப்பட்ட உணர்வுகளை (ஈஸ்வரலோகத்தில்) உயிர் இருக்கும் இடத்தில் உருவாக்கி, (இந்திரலோகத்தில்) நம் உடலில் இரத்தத்தில் கருவாக்கி உருவாக்கி அந்த அணுவின் தன்மை உருவாகும் பொழுது பிரம்மலோகம்.

அதன் இனத்தை அது பெருக்கும் என்று தெளிவாகக் கூறுகின்றது நமது சாஸ்திரங்கள்.

அந்த அணுவாக உருவாகிவிட்டால் உயிர் எப்படி இயக்கமாக இருக்கின்றதோ, ஈசனாக இருக்கின்றதோ அதைப்போன்று அந்த அணுவின் தன்மை துடிப்பு ஆகும்பொழுது விஷ்ணுவாகின்றது. அதன் ஈர்ப்பு காந்தமாகின்றது.

இதுதான் விஷ்ணுவின் மறு அவதாரம் சீதாராமன். நமது உயிர் நுகர்ந்த உணர்வை அணுவாக மாற்றும்பொழுது அது உயிரின் மறு அவதாரமாக சீதாராமனாகின்றது.

சீதா என்றால் சுவை.
காரமும் சுவைதான் விஷமும் சுவைதான்.
ஆகவே, நாம் நுகர்ந்த உணர்வுகள் எதுவோ
அந்த உணர்ச்சியின் எண்ணங்களாக நமக்குள் வரவைத்து
அந்த எண்ணத்தின் வழிதான்
நாம் இயங்குகின்றோம், வாழுகின்றோம்.

அதனால்தான் விஷ்ணுவின் மறு அவதாரம் சீதாராமன் என்று சொல்லுகின்றார்கள் ஞானியர்கள்.

எந்த சுவையோ அதற்குத்தக்க உணர்ச்சிகள் எண்ணங்களாக வருவதும்,
அந்த உணர்ச்சிக்கொப்ப அணுக்கள் மாறுவதும்,
அந்த உணர்ச்சிக்கொப்ப செயல்கள் மாறுவதும்,
அந்த உணர்ச்சிக்கொப்ப நம் எண்ணங்களும் மாறுகின்றது.

இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். ப்படி உருவான இந்த நிலைதான் விஷ்ணுவின் மகன் பிரம்மா என்பது.

இந்த வேதனை, வெறுப்பு, கோபம், குரோதம் போன்ற எத்தனை வகையான எண்ணங்களை எண்ணுகின்றோமோ அதன் உணர்வுப்படி உடலாகும்பொழுது பிரம்மம். எந்த குணத்தின் தன்மை கொண்டு அணுவாகின்றதோ பிரம்மாவின் மனைவி சரஸ்வதி.

கோபமான உணர்வை எடுத்தால் அதனின் ஞானப்படி (சரஸ்வதி) அந்த அணு அதன் உணர்ச்சிகளை இயக்கி அது அதன் வழியில் செயல்படும்.

இப்படி, நமது உடலில் பலவிதமான எண்ணங்கள் சேர்ந்து
அந்த உணர்ச்சிக்கொப்ப மனிதனை உருவாக்கி,
நம் உடலில் எந்தெந்த உணர்ச்சிகள் இருக்கின்றதோ
அதன் வழி அவ்வப்போது அந்த எண்ணங்களை தோன்றச்செய்து
அந்த அணு ரத்தத்தில் அதன் சத்தைக் கலக்கச்செய்து விளைகின்றது.
அதன் அணுவின் மலம் நம் உடலாகின்றது. (சிவம்)