ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 12, 2023

சுயநலம் எதுவாக இருக்க வேண்டும்…?

எண்ணத்தால் உருவாக்கப்பட்டது தான் இந்த மனித உடல் “இராமேஸ்வரம்…” ஆனாலும்…

1.மனிதனாக உருவான பின் தீமைகளை நீக்கிய உணர்வுகளைப் பெற வேண்டும் என்று எண்ணத்தால் அதை நுகர்ந்து
2.உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் அனைத்தையும் ஒன்றாக இணைத்தால் ஒளி உடல் பெற முடியும்.

அதாவது… எண்ணத்தால் தான் இந்த உணர்வின் தன்மை மனிதனாக உருவாக்கப்பட்டது. அதே எண்ணத்தால் இருளை நீக்கி ஒளி என்ற உடலைப் பெற்றது தான் “துருவ நட்சத்திரம்…”

அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை அனுதினமும் காலையில் எடுத்து நம் உடலில் உள்ள இரத்தநாளங்களில் பெருக்கிப் பழகுதல் வேண்டும்… அந்தக் கணக்கைக் கூட்டுதல் வேண்டும்.

சிவன் ஆலயத்தில் நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்கப்பிள்ளை என்பது போல் நாம எதை எல்லாம் சுவாசிக்கின்றோமோ அதை நமது உயிர் உருவாக்கி விடுகின்றது… உருவாக்கிய பின் உடலாக மாற்றுகின்றது.

மனிதனாக உருப்பெற்ற பின்… இந்த உடலில் வெறுப்பு வேதனை சலிப்பு சங்கடம் கோபம் ஆத்திரம் போன்ற குணங்கள் அதிகரித்து விட்டால் அந்தக் கணக்கின் பிரகாரம்… இந்த உடலுக்குப் பின் வேதனைப்படுத்தியே மற்றொன்றை உணவாக உட்கொள்ளும் அடுத்த உடலை இந்த உயிர் அமைத்துவிடும்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் விடுபடுவதற்குத்தான்
1.இராமேஸ்வரத்தைக் காட்டினார்கள்…
2.அங்கே துருவ நட்சத்திரத்தினை நாம் நேரடியாக பார்க்கும்படி வைத்தார்கள் ஞானிகள்.

விநாயகர் ஆலயம் இருக்கும் இடங்களிலே அங்கே மரங்களை வைத்து விட்டால் நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தைப் பார்க்க முடிவதில்லை… அல்லது கட்டிடங்கள் இருந்தாலும் அதைப் பார்க்க முடிவதில்லை.
1.ஆக… தனித்து அந்தக் கடல் பாகம் இருக்கப்படும் பொழுது
2.துருவ நட்சத்திரத்தை நாம் தெளிவாகப் பார்க்க முடியும்.

“நேரடியாகப் பார்த்து…” அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலில் இருக்கக் கூடிய ஜீவ அணுக்கள் ஜீவான்மாக்கள் பெற வேண்டும் எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கி அணுக்கள் அனைத்திலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று நாம் நமக்குள் சேர்க்க முடியும்

ஒவ்வொருவரும் தன் உடலுக்குள் “துருவ நட்சத்திரத்தின் சக்தியைச் சேர்க்க வேண்டும்…” என்பதற்குத் தான் அந்த இடத்தை ஞானிகள் தேர்ந்தெடுத்தார்கள்.

ஆக… மனிதனாக உருவாக்கிய உயிரை நினைவு கொண்டு… உயிரை ஈசனாக மதித்து… ஒளியின் உணர்வைப் பெறச் செய்வதற்குத் தான் இத்தனையும் விளக்கமாகச் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

1.நீங்கள் எல்லோரும் உயர்ந்த நிலை பெற வேண்டும் என்ற எண்ணங்களை
2.நான் (ஞானகுரு) எண்ணும் பொழுது எனக்கு அந்தப் பலன் கிடைக்கிறது.
3.இது என்னுடைய சுயநலம்…!

ஒருவர் இடைஞ்சல் செய்கின்றார்…! என்றால் அதை நீக்க வேண்டும் என்றோ அல்லது அதற்கு இன்னொரு இடைஞ்சலைச் செய்தோம் என்றால் இதுவும் சுயநலம் தான்.

1.ஆனாலும் அந்த இடைஞ்சலை நீக்கும் சக்தியை எடுத்துச் செயல்படும் நிலை வரும் பொழுது
2.எனக்குள் பல தீமைகளை நீக்கும் சக்தியாக அது வருகிறது.

தீமைகளை நீக்கும் உயர்ந்த சக்திகளை நான் பெறுவது போன்று ஒவ்வொருவரும் நீங்கள் எளிதில் பெற முடியும். பெற்று உயிருடன் ஒன்றிடும் உணர்வுகளைத் துருவ நட்சத்திரத்தைப் போன்று ஒளியாக மாற்றிக் கொள்ள முடியும்.