ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 16, 2023

தேன் கூட்டில் தேனீக்கள் தேனைச் சேகரிப்பது போல் தான் உயிருடன் ஒன்றும் உணர்வுகளை நாம் ஒளியாக மாற்றுவதும்…!

உயிர் ஒளியாக இருக்கின்றது… எல்லாவற்றையும் தெரியச் செய்கின்றது… தெரிவிக்கச் செய்கின்றது…! இந்த உயிரைப் போன்றே உடலில் உள்ள ஜீவணுக்களை உயிர் அணுக்களாக… “ஒளியான அணுக்களாக…” மாற்றிட வேண்டும். அது தான் நம் குருநாதர் நமக்குக் காட்டிய வழி.

1.தேனீக்கள் தேன் கூடுகளை உருவாக்கித் தன் இனங்களைப் பெருக்கி
2.அதில் சுவைமிக்க தேனாக எப்படி உருவாக்குகின்றதோ அதைப் போன்று
3.உயிரைப் போன்று உடலில் இருக்கக்கூடிய அணுக்களை நாம் ஒன்றாக்க வேண்டும்.
4.தேன் கூட்டைப் போல்தான் நம் உடலும் அமைப்பாக இருக்கின்றது
5.அதிலே அருள் ஒளியினைச் சேர்த்து உயிருடன் ஒன்றி ஒளியின் உடலாக நாம் பெற முடியும்.

ஏனென்றால் அப்படி உருவானது தான் துருவ நட்சத்திரம்…! இந்தப் பூமியிலே வாழ்ந்தவர்கள் யாரெல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தினைப் பின்பற்றிச் சென்றனரோ… துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் அவர்கள் இணைந்து… பிறவி இல்லா நிலையை அடைந்து அருள் வழியில் இன்றும் வாழுகின்றனர்.

சூரியனே கூட ஒரு காலம் அழியலாம். சூரியனின் ஈர்ப்பு வட்டத்தில் உள்ள கோள்களும் மறையலாம். ஆனால் சூரியக் குடும்பத்தில் உருவான உயிரணுக்களின் தன்மை மனிதனான பின்
1.உணர்வை ஒளியாக மாற்றிச் சென்ற துருவ நட்சத்திரமோ சப்தரிஷி மண்டலமோ
2.தன் ஆறாவது அறிவை ஏழாவது… ஒளியாக மாற்றியவர்கள் என்றுமே அழிவதில்லை.
3.பேரண்டத்தில் விஷத்தின் தன்மை கலந்தாலும் அதையும் ஒளியாக மாற்றிடும் திறன் பெற்றவர்கள் தான் அவர்கள்.

அதாவது… ஒரு பாம்பினம் தன் வாழ்க்கையில் தன் உடலில் உருவான விஷத்தைப் பாய்ச்சிப் பாய்ச்சி… மற்ற உயிரின்ங்களின் உடல்களைத் தான் விழுங்கி விழுங்கி… அந்தந்த உடலின் விஷத்தையும் தன் உடலில் உருவான உருவான விஷத்தையும் (அனைத்தையும்) தனக்குள் அடிமையாக்கி… அந்த விஷமெல்லாம் ஒன்றாக ஆன பின் நாகரத்தினமாக அது மாறுகின்றது.

பாம்பு விஷத்தை நாகரத்தினமாக மாற்றுவது போல் தான் துருவ நட்சத்திரமும் விஷத்தை ஒளியாக மாற்றும் திறன் பெற்றது. ஆனால் அது கல்.. ஆனால் இது ஒளிக்கற்றைகளாக மின் கதிர்களாக மாற்றுகிறது.

இதை ஏன் சொல்கிறோம் என்றால் நம்முடைய மனித வாழ்க்கையிலும்… விஷத்தின் தன்மை சிறிதளவு நமக்குள் வந்தாலும் அறிந்து கொள்ள முடிகின்றது.
1.அப்போது உடனடியாக அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நமக்குள் சேர்த்து அதை அடக்கி
2.அந்த விஷம் நமக்குள் அடங்கியே வாழும் உணர்வின் தன்மையாக நாம் மாற்றிக் கொண்டே வர வேண்டும்.

அப்படி மாறினால் துருவ நட்சத்திரம் அழியாத நிலைகள் கொண்டு வாழ்வது போல் நாமும் அழியா வாழ்க்கை வாழலாம். நம் உயிர் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்கு அழைத்துச் சென்று ஏகாந்த நிலை பெறச் செய்யும்.

ஏனென்றால் விஷத்தின் துடிப்பின் தாக்குதலால் தான் வெப்பமும் மற்ற எல்லா இயக்கங்களும் வருகிறது. ஆகவே…
1.எந்த விஷமும் உயிரை இருளச் செய்யாதபடி ஒளியாக மாற்றிடும் சக்தி பெற்றது
2.மனிதனின் ஆறாவது அறிவு… அது தான் கடைசி நிலை…!

இதனைத் தெளிவாக உணர்ந்து குருநாதர் காட்டிய அருள் வழியில் நாம் செயல்படுத்துவோம்.