ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 8, 2023

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மகரிஷிகள் வெளிப்படுத்திய ஞானப் பொக்கிஷங்களை எல்லோருக்கும் பங்கிடுவோம்

உதாரணமாக ஒரு மனிதன் கடுமையான நோய்வாய்ப்பட்டிருக்கின்றான் என்று வைத்துக் கொள்வோம்.

அதை மற்றவர்கள் வந்து நம்மிடம் சொல்லப்படும் பொழுது பாசத்துடன் அதனைக் கேட்டறிவோம். அந்த மனிதருடன் நாம் பாசத்துடன் பழகினோம். நல்ல மனிதர்… இப்பொழுது நோய் வந்து அவஸ்தைப்படுகின்றார்…! என்று எண்ணுவோம்.

பார்த்து அந்த விவரங்களைக் கேட்டறிந்தபின் நாம் என்ன செய்வோம்…?.

அடுத்தடுத்து அடுத்தடுத்து மற்ற நண்பர்களிடத்திலும் இதைச் சொல்வோம். அப்படிச் சொல்லப்படும் பொழுது அவர்களும் அந்த வேதனைப்பட்டு வருத்தப்படும் நிலைகள் வருகின்றது.

இது எப்படி ஒருவருக்கொருவர் இயக்குகிறதோ… அதைப் போலத் தான் குருநாதர் காட்டிய அருள் வழியில் தொடர்ந்து இங்கே கொடுக்கும் இந்த உபதேசத்தின் வாயிலாக
1.இதை நீங்கள் கேட்கக்கூடிய சந்தர்ப்பத்தை எடுத்து
2.“மறைந்த ஞானப் பொக்கிஷத்தை” மீண்டும் யாம் (ஞானகுரு) நினைவுபடுத்தி
3.அந்த அலைகள இங்கே பெருக்கிக் கொண்டே வருகின்றோம்.
4.உயர்ந்த ஞானத்தின் உணர்வலைகளை “நீ ஒலி பரப்பு…” என்று குருநாதர் சொன்னதால் தான் இதைச் செய்து கொண்டிருக்கின்றோம்

அது இங்கே பரவியிருப்பதனால் இதை நீங்கள் படிக்கும்போது ஒவ்வொரு அர்த்தமாக உங்களுக்குள் விளங்கத் தொடங்கும்.

அதை மற்ற நண்பரிடத்தில்
1.“சாமி இப்படிச் சொன்னார்…” என்று சொன்னால் இலேசாகப் பதிவாகும்...
2.இந்த உணர்வுகளை அவர்களும் நுகர நேரும்.
3.இப்படிச் சிறுகச் சிறுக இந்த மெய் உணர்வுகள் பரவும்.

ஆன்மீகத்தின் நிலைகளில் அந்த ஞானத்தைப் பெற வேண்டும் என்ற ஏக்கத்தில் இருந்தால் அவர்களுக்கு இந்த உபதேசத்தின் உணர்வுகள் இது படும்.

நீங்கள் என்னுடைய உபதேசத்தைப் படிக்கின்றீர்கள். இதை நீங்கள் மற்றவர்களிடம் சொல்லப்படும் பொழுது இந்த உணர்வுகள் பதிந்த பின் யாம் எதையெல்லாம் வெளியிட்டோமோ அதை அவர்கள் நுகர நேருகின்றது.

ஏனென்றால்... இந்தப் பதிவு (RECORD) உங்களிடம் பண்ணியிருக்கின்றேன்.

ஒரு டேப்பில் பதிவு செய்த பின்…
1.அடுத்தடுத்து அடுத்த டேப்பில் பதிவு செய்யப்படும் பொழுது எப்படி நாம் மாற்றிக் கொண்டே போகின்றோமோ
2.இதைப் போலத் தான் உங்களுக்குள் பதிவான நிலை மற்றவர்களுக்குச் சொல்லப்படும் பொழுது அது பதிவாகின்றது.

அப்படிப் பதிவான பின் அந்த அலைகளை மீண்டும் அவர்கள் நுகர்ந்து அதைப் பெற முடியும்.

டேப்பில் பதிவு செய்வது ஜீவனற்றது. ஆனால்...
1.யாம் உபதேசம் செய்த நிலைகளை எடுத்துச் சொல்லப்படும் பொழுது
2.“ஓ” என்று ஜீவ அணுவாகி மீண்டும் அதனை வளர்க்கும்... வளர்த்துக் கொண்டிருக்கும் நிலைகளாகச் செயல்படும்.

இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக இந்தக் காற்று மண்டலத்தில் மெய் ஞானிகள் உணர்வுகள் பரவும்.

1.பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அந்த மகரிஷிகளால் வெளிப்பட்ட அந்த மெய் ஞானப் பொக்கிஷங்களை
2.எல்லோருக்கும் பங்கிடலாம்... எல்லோரையும் பெறச் செய்ய முடியும்.

இது என் ஒருவனால் முடியாது. நாம் அனைவரும் சேர்ந்து ஒருங்கிணைந்தால் தான் சாத்தியமாகும்.

உங்களால் நிச்சயம் முடியும்.