ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 11, 2023

உணர்வின் வலு கொண்டு உன் எண்ணத்தால்… கண் வழியாக அருளைப் பாய்ச்சு…! என்றார் குருநாதர்

குருநாதர் காட்டிய அருள் வழியில் நான் இருபது வருடம் முப்பது வருடம் காடு மேடெல்லாம் அலைந்தேன்.

1.ஒவ்வொரு நிமிடத்திலும் எதிர் நிலையான உணர்வுகள் உன் உடலுக்குள் என்ன செய்கின்றது…?
2.இதற்கு மாற்று நீ என்ன செய்ய வேண்டும்… நீ எப்படி இருக்க வேண்டும்…?
3.தீமைகளை நீ எப்படி மாற்ற வேண்டும்…? என்று தான் குருநாதர் காட்டினார்.

ஏனென்றால் பல தொல்லைகள் பட்டேன்… என் குடும்பத்தையே அனாதையாக விட்டு விட்டுத் தான் சென்றேன்.

அவர்களைப் பற்றி எண்ண விடாதபடி செய்தார் குருநாதர். ஆனால் சில சந்தர்ப்பங்களில் அவர்களைப் பற்றி எண்ணும் பொழுது… பாசத்தால் அவர்களின் உணர்வுகள் உன் உடலுக்குள் எப்படி வேகமாக வருகின்றது…! என்றும் காட்டினார் குருநாதர்.

ஒரு பாத்திரம் சரியாக இருந்தால் அது நலமாக இருக்கும். அதிலே ஓட்டை விழுந்து விட்டால் அதை உபயோகப்படுத்த முடியாது.

அது போல் இந்த உடல் என்ற இந்தப் பாத்திரத்திலே இருக்கக்கூடிய ஓட்டைகளை (பிற தீமையின் உணர்வுகள்) அடைக்க வேண்டும் என்றால்
1,அதைச் சமப்படுத்தினால் தான் நீ உன்னைக் காத்து உன் குடும்பத்தில் உள்ளவரையும் காப்பாற்ற முடியும் என்று
2.இதெல்லாம் அனுபவபூர்வமாகத் தான் குருநாதர் உணர்த்தினார்.

இமயமலையில் பனிப்பாறைகளுக்கு மத்தியில் நான் செல்லப்படும் போது எனக்குள் சில உணர்ச்சிகளைத் தூண்டச் செய்கிறார். பழனியில் என் குழந்தைக்கு உடல் நலம் சரியில்லாததை அங்கே நேரடியாகக் காட்டுகிறார்.

அதைக் கண்ட பின் என் குழந்தையை எண்ணும் பொழுது பனிப்பாறையிலே என் இருதயமே இரைச்சலாகின்றது… உறையும் தன்மை வருகின்றது. அப்படியே விட்டு விட்டால் உயிரே போய்விடும்.

அப்போதுதான்… நீ உன் குழந்தையை இங்கிருந்து எப்படிக் காக்கப் போகின்றாய்…? என்று வினா எழுப்பினார்.

உன் குழந்தையைக் காக்க வேண்டும் என்றால்
1.நான் உனக்குச் சொன்ன உணர்வின் வலு கொண்டு
2.உன் எண்ணத்தால்… கண் வழியாக அங்கே அருளைப் பாய்ச்சு
3.அவனைக் காப்பதற்குண்டான நிலைகளை நீ செய்…! என்றார்.

இப்படி என் குடும்பமே பல வகைகளிலும் அல்லல்பட்டது. என்னைச் சார்ந்தோர் அனைவரும் கஷ்டப்பட்டுத்தான் தான் நான் ஒவ்வொன்றையும் தெரிந்து கொள்ள முடிந்தது… “இப்படித்தான் தெரியச் செய்தார் குருநாதர்…”

அதைப் போன்று தான் இப்போது உங்கள் குடும்பத்திலும் உங்களை அறியாது எத்தனையோ தீமைகள் வருகின்றது. ஆனால் நீங்கள் தவறு செய்யவில்லை. பிற மனித உடலில் விளைந்த உணர்வுகளை நீங்கள் நுகரும் போது அந்த நிலை ஆகிறது.

பத்திரிக்கை வாயிலாக டி.வி. வாயிலாக உங்களுக்குள் தினசரி எத்தனையோ அதிர்ச்சியான உணர்வுகள் புகுகின்றது.
1.அந்த உணர்ச்சிகள் இயக்கப்பட்டு உங்கள் உடலை என்னவெல்லாம் அது பாடு படுத்துகின்றது…?
2.அப்போது அந்தத் தீமையே உங்களை ஆட்சி புரிகின்றது… நல்ல குணங்கள் ஆட்சி புரிவதில்லை.
3.உயிரிலே படும் அந்தக் கலக்கமான உணர்வுகளே இயக்கச் சக்தியாக வருகிறது.

காரணம்… நெருப்பிலே எந்தப் பொருளைப் போடுகின்றமோ அந்த மணம் தான் வரும். நம் உயிர் நெருப்புக்குச் சமம்.

ஆனால் நமது ஆறாவது அறிவால் இருளை நீக்கும் ஒளியான உணர்வுகளைச் சேர்த்தோம் என்றால் அந்த உணர்ச்சிகளை ஊட்டி… எண்ண வலிமை கொண்டு நம் வாழ்க்கையைச் சீர்படுத்த முடியும்.

இருளை நீக்கி ஒளியாக மாற்றும் அருள் ஞானிகள் உணர்வை நுகர்ந்து உடலில் இருக்கக்கூடிய இரத்தங்களில் செலுத்தி ஒவ்வொரு அணுக்களுக்கும் அதைப் பெறச் செய்தால்
1.இருளை நீக்கும் ஆற்றல் பெற்று சிந்தித்துச் செயல்படும் தன்மை வாழ்க்கையில் வரும்
2.அதே சமயத்தில் நம் மீது மோதும் தீமையின் உணர்வுகளை எதிர்கொண்டு நீக்கும் தன்மை வரும்.

எப்படி…?

எலக்ட்ரிக்… எலக்ட்ரானிக்…! ஒரு உணர்வின் அழுத்தத்தின் தன்மை எதுவோ அதைக் கொண்டுதான் நவீன இயந்திரங்களை இன்று இயக்குகின்றான் மனிதன்… “விஞ்ஞான அறிவு கொண்டு...!”

இதைப் போன்று தான் நமது உயிர் நமக்குள் எலக்ட்ரிக்காக இருக்கின்றது… நாம் சுவாசிப்பதை எலக்ட்ரானிக்காக மாற்றி இயக்குகிறது. ஆனால் வேதனை என்ற உணர்வுகள் எலக்ட்ரானிக்காக மாறி விட்டால் அந்த வேதனையின் இயக்கமாகத் தான் உயிர் நமக்குள் உருவாக்கும்.

இதையெல்லாம் வென்ற
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எலக்ட்ரானிக்காக நாம் மாற்றினால்
2.இதன் உணர்வுகள் எதிர் கொண்டு அந்த வேதனைகளைத் தள்ளிவிட்டு விடும்
3.நமக்குள் சிந்தித்து செயல்படும் தன்மையும் அருள் வாழ்க்கை வாழ்ந்திடும் தன்மையும் வரும்
4.எதிர்வரும் தீமையின் உணர்வின் தன்மையை நமக்கு நாமே உணர்ந்து அந்த உணர்வுகள் நமக்குள் வளராதபடி தடுக்கவும் முடியும்.

உபதேசத்தின் வாயிலாக உங்களுக்குள் இப்பொழுது பதிவாக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் வலுவால்… இருளை நீக்கி என்றுமே உங்கள் வாழ்க்கையில் மகிழ்ந்து வாழலாம். மற்றவர்களையும் மகிழ்ச்சியாக வாழச் செய்ய முடியும்.

1.நீங்கள் ஒருவர் மகிழ்ந்து வாழ்ந்தால் போதும்
2.அதன் உணர்வு உங்கள் குடும்பத்தில் உள்ள எல்லோரையும் மகிழ்ச்சி அடையச் செய்யும் சக்தியாகப் படரும்
3.உங்கள் உடலில் இருக்கக்கூடிய அணுக்களும் ஒளியாக மாறும்.

உங்கள் வாழ்க்கையில் பேரின்பப் பெரு வாழ்வு பெறும் பயிற்சியைத் தான் இப்பொழுது யாம் (ஞானகுரு) தந்து கொண்டிருக்கின்றோம்.

இதனைக் கற்றுக் கொண்டு நீங்களும் சரி உங்கள் குடும்பத்தாரும் சரி உங்களைச் சார்ந்த்தோரும் சரி எல்லா நலமும் வளமும் பெற்று… இந்த பூமியில் படர்ந்து கொண்டிருக்கும் நச்சுத்தன்மைகளை நீக்கக்கூடிய அந்த வலிமையை நீங்கள் ஒவ்வொருவரும் பெற வேண்டும்.