ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 4, 2014

பத்து மகரிஷிகள் - வியாசக பகவான் 6

1. தப்ப வேண்டும் என்ற உணர்வின் ஏக்கத்தால் காக்கப்படுகிறார் வியாசர்
வியாசருக்கு மீன்களைப் பிடித்துத்தான் ஜீவிதம். அவர் அலைகடலிலே செல்லும் பொழுது, புயலிலே சிக்கி படகு கவிழ்கின்றது. அப்பொழுது அவருக்குள், தன் உயிருக்காக வேண்டி தன்னைத் தற்காத்துக் கொள்ளும் எண்ணங்கள் தோன்றுகின்றது.

ஆக, தான் எப்படியும் தப்பிக்க வேண்டும் என்ற உணர்வின் ஏக்கம், உடலின் உணர்வுகளை மறந்து, தன் உடலைக் காக்க வேண்டும் என்ற உணர்வுடன் ஒரே எண்ண ஒலிகளை ஈர்த்து, அதனின் இயக்கத்திலிருக்கும் பொழுதுதான்,
அவன் எந்த மீனைப் பிடித்து வேட்டையாடி,
அதைப் புசித்து அதன்வழி கொண்டு அவன் வாழ்ந்தானோ,
அதே மீன் இனம் வியாசரைக் காக்கின்றது.
இவனைக் காப்பாற்றி பின் இவனைக் கரை சேர்க்கின்றது.

கரை சேர்த்த நிலைகள்தான் பிறிதொரு ஜீவனால் காப்பாற்றப்பட்ட உணர்வின் எண்ணம், இவன் தன்னைக் காக்கும் எண்ண உணர்வுடன் கலந்தவுடனே வீரியம் அடைந்து அந்த உணர்வின் சக்தியை ஆற்றலாகப் பெற்று இயற்கையின்  செயலின் ஆற்றல் இவனுக்குள் உருப்பெற்று விண்ணை நோக்கி ஏங்குகின்றான்.

அவ்வாறு ஏங்கும் நிலைகள் கொண்டுதான் சூரியனின் காந்த சக்தியின் ஆற்றல் இவனுக்குள் வேகத்தைக் கூட்டி அந்த உணர்வின் சத்தான நிலைகள் அவனுக்குள் வளரச் செய்கின்றது.
2. சப்தரிஷி மண்டல அணு வியாசருக்குள் சிக்குகின்றது
வானவியல், புவியியல், உயிரியலின் தன்மையைத் தனக்குள் வளர்த்து உயிரின் தன்மையைத் தனக்குள் வளர்த்து, உயிரின் தன்மையை ஒளியாக மாற்றி, அதன் உணர்வின் அலையைப் பரபபிச் சென்ற எண்ண ஒளிகளிலிருந்தும், அதன் வழி கொண்டு விண்ணிலே அவன் வளர்த்துக் கொண்ட ஆற்றல்மிக்க அணுவின் தன்மைகளும், சப்தரிஷி மண்டலங்ளிலிருந்து விண்ணிலே பரவிக் கொண்டிருக்கின்றது.

இவன் கடலிலே தத்தளித்துக் கொண்டிருக்கக்கூடிய வேளையில், தன்னைத் தற்காத்துக் கொள்ளும் உணர்வும், இதனுடன் இவனுடைய எண்ணம் அதன்பால் சேர்த்து, இந்த உணர்வுகள் இரண்டும் கலந்து, இந்த உணர்வுகள் இவன் எண்ணத்திற்குள் அது துடிப்பின் வேகம் கூட்டி தன்னை அந்த மீன் காத்தது என்ற ஏக்கத்தில் வருகின்றான்.

அப்படி ஏக்கத்தில் வரும் பொழுதுதான் இதைப் போன்று, தன்னைத் தற்காத்துக் கொள்ளும் உணர்வுகளுக்குச் செயல்பட்டு, அந்த மெய்ஞானிகள் தான் எடுத்துச் சுவாசித்த உணர்வின் சிற்றலைகள் இவன் உடலுக்குள் சிக்கப்பட்டு அந்த உணர்வின் நிலைகள் மீண்டும் வலுகூடுகின்றது.

இப்படி வலுகூடும் நிலைகள் கொண்டு விண்ணை நோக்கி ஏங்குகின்றான். அப்பொழுதுதான் கதிரவனின் காந்த அலைகள் இவனுக்குள் கூடி, இவன் எண்ணிய எண்ணங்களுக்கு ஆற்றல்மிக்க நிலைகள் கூடுகின்றது.

ஆக, விண்ணின் ஆற்றல் இவன் கண் புலனறிவுகளிலே ஊடுருவிச் சென்று, இவன் அறியாது இவன் கண்ணின் புலனறிவிற்கு ஈர்க்கப்பட்டு,
சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வெளிப்படும்
ஓர் அணுவின் நிலையை
இவன் சுவாசிக்க நேருகின்றது.
இவனுடைய ஈர்ப்பிற்குள் சிக்குகின்றது.

அவ்வாறு சிக்கிய அந்த உணர்வின் ஆற்றல்தான் அந்த மீனவனின் நிலைகள் பகவானாக மாற்றும் நிலை ஏற்பட்டது.

வியாசர் மனிதனாக வாழ்ந்து, இயற்கையின் நிலைகளில் விண்ணுலக ஆற்றலைத் தனக்குள் கண்டுணர்ந்து, அதைச் சமைத்து, உயிரின் தன்மையில், உலகில் தோன்றும் எத்தகைய விஷத்தன்மையும் மாற்றியமைத்தார்.

தன் உணர்வுக்குள், உணர்வின் தன்மையை அறிந்துணர்ந்து செயலாக்கும் ஆற்றல்மிக்க நிலை பெற்று, உயிரை ஒளியாக மாற்றி விண் சென்றார் அந்த மகரிஷி, “வியாச பகவான்”.

வியாசர் கடலிலே வீழ்ந்தபின், தன்னைப் பாதுகாத்துக் கொள்ளக் கூடிய உணர்வின் எண்ணத்துடன் அவன் துடித்துக் கொண்டிருக்கும் பொழுது, அந்த உணர்வலைகள் கொண்ட மீனின் உணர்ச்சிகள் தூண்டி இவன் எண்ணத்திற்குப் பக்கபலமாக இருந்து, இவனைக் கரை சேர்க்கின்றது.

இந்த இரண்டு உணர்வுகளும் வியாசர் உணர்வுக்குள் சேர்த்தவுடனே, பயம் கலந்த, தான் தப்பித்த ஆற்றல்மிக்க அந்த உணர்வின் சக்தி இவனுக்குள் கூடி, இந்த உணர்வலைகள் தூண்டச் செய்து, தன் புலனறிவான கண்ணுக்குள் பாய்ந்து தன் ஏக்கத்தின் அளவை விண்ணை நோக்கி ஏகும் பொழுது
அந்த உணர்வின் ஆற்றலுக்குள் சிக்கியதுதான்
சப்தரிஷி மண்டலங்களின் அந்த ஒளிகாந்த சக்தி.

ஆக, இது ஒரு சந்தர்ப்பம். அதற்கு முன் மீனவனுக்கு ஒன்றும் தெரியாது ஆக, அந்த சப்தரிஷி மண்டலத்திலிருந்து வெளிப்பட்ட அந்த அணுவின் உணர்வணுக்கள் இவர் உடலிலே புகுகின்றது.

வியாசரின் உணர்வுக்குள் அது ஈர்க்கப்பட்டு, அவர் சுவாசித்த அந்த உணர்வின் தன்மை உடலிலே படும்பொழுது, அந்த சப்தரிஷி மண்டலமாக இயங்கி, அந்த உணர்வின் ஆற்றல் விண்ணுலகை எப்படித் தனக்குள் கண்டறிந்ததோ, அந்தப் பேருண்மைகள் வியாசனான ஒன்றுமறியாத அந்த மீனவனுடைய உடலிலே தென்படுகின்றது.

இந்த உணர்வின் சுவாசத்தாலேதான், பேரண்டத்தின் பெருநிலைகளினுடைய நிலைகளை அவர் விண்ணுலகின் ஆற்றலை நாராயணா என்றும், விஷ்ணு என்றும் அழைத்தார்.

மகாபாரதத்திற்குள் ஒரு உயிரணுவின் தோற்றமும், அந்த உயிரணுவின் தோற்றத்திற்குள் கண்ணாகத் தோன்றி, அந்தக் கண் ஒவ்வொரு மனிதனுக்கும் கீதா உபதேசம் செய்கின்றது.

ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும், இந்த உணர்வுகள் நமக்குள் எப்படி உணர்ச்சிகளைத் தூண்டி நம்மை எப்படி இயக்குகின்றது? என்ற தத்துவத்தைக் கொடுத்தவர் இன்று நாம் அழைக்கும்
அந்த மெய்ஞானி வியாசக பகவான்தான்.
அவன் படித்துணர்ந்து, கற்றுணர்ந்து வரவில்லை.

சப்தரிஷி மண்டல ஒளியான அணு, அன்று ஒன்றுமறியாத அந்த மீனவனுடைய உடலுக்குள் புகுந்ததுதான் இந்த ஆற்றல்மிக்க நிலைகளைச் செய்தது.