ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 22, 2014

அருள் ஞானச் சக்கரத்தைப் பயன்படுத்தும் முறை

குரு வழியில் நாம் சொல்லப்படும் பொழுது அவர் பிறவியில்லா நிலையை அடைந்தார். ஒளியின் சரீரமாக இருக்கின்றார். அதிலிருந்து வரக்கூடிய உணர்வை நமக்குள் சேர்த்து, இருளைப் போக்கிப் பழக வேண்டும். அது ஒரு பழக்கத்திற்கு வரவேண்டும்.

ஆகவே நாம் ஒவ்வொருவரும், இப்பொழுது இங்கு கொடுக்கின்ற அருள் ஞானச்சக்கரத்தில் துருவ தியான நேரத்தில் எண்ணி, துருவ தியானம் முடிந்தவுடன், அந்த அருள் ஞானச்சக்கரத்தைப் பார்த்தீர்கள் என்றால், துருவ நட்சத்திரத்தின் உணர்வின் ஒளிகள் இதிலிருந்து வரும்.
நாளுக்கு நாள், அது வளர ஆரம்பிக்கும்.
உங்கள் உணர்வுகளில், ஒரு தெளிவான மணம் கிடைக்கும்.
இதனுடைய வரிசையில் வரப்படும்போது சில சமயங்களில் பிரபஞ்சங்களும் தெரியலாம். அந்த மகரிஷிகள் யார் என்ற நிலைகளும், உங்களுக்குத் தெரியவரும்.

தெரியவரும் என்று சொன்னவுடன்,
தெரியவில்லையே என்ற உணர்வுக்குப் போய்விடாதீர்கள்.
நாம் அதைப் பெற வேண்டும் என்ற உணர்வை மட்டும்,
செலுத்திக் கொண்டு வந்தால் போதும்.
ஏனெனில், அந்த உணர்வு உங்களுக்குள் வளர்ச்சியாகும்.

ஒரு செடியை வைத்துவிட்டு, உடனே பூ பூக்கவில்லை. காய் காய்க்கவில்லை என்றால் முடியுமோ?

எத்தனையோ ஆண்டுகள் பல உடல்கள் பெற்று, இப்பொழுது மனிதனாகப் பிறந்துள்ளோம். இவ்வாறு மனிதனாகப் பிறந்ததில் துருவ நட்சத்திரத்தின் உணர்வை இன்று ஒவ்வொன்றாகச் சேர்க்கிறோம்.

உங்களுக்குள், அந்த நினைவின் ஆற்றலும் ஈர்ப்பும் வருவதற்காகவே, இந்த அருள் ஞானச்சக்கரத்தைக் குறைந்தது மூன்று வருடமாக பூஜை அறையிலே வைத்து, அதற்காகத் தியானம் பண்ணியுள்ளேன்.
எங்கே போக வேண்டும் என்றாலும், கொஞ்ச நேரம் சக்கரத்தின் முன் நின்று, சக்கரத்தைப் பார்த்து, “ஈஸ்வராஎன்று உயிரை எண்ணி அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் என்று எண்ண வேண்டும்.

அது எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும். எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று எண்ணிப் பிரார்த்தனை பண்ணிக் கொள்ளுங்கள்.

குழந்தைகளுக்கு நன்றாகப் படிப்பு வரவேண்டும். நல்ல ஞாபக சக்தி வரவேண்டும் என்று எண்ண வேண்டும்.

தொழிலுக்குப் போகும் பொழுது, என் தொழில் நன்றாக இருக்க வேண்டும். என் வாடிக்கையாளர்கள் நலமாக இருக்க வேண்டும் என்று எண்ணிவிட்டுச் செல்லுங்கள்.

அந்தச் சக்கரத்தின் முன்னால் நின்று அதற்குச் சௌகரியப்படும் இடத்தில் சக்கரத்தை வைத்து, உடகார்ந்து பார்ப்பதற்கோ நின்று பார்ப்பதற்கோ தகுந்த மாதிரி செய்து கொள்ளுங்கள்.

அதைப் பார்த்துவிட்டு, எந்தக் காரியமும் ஜெயமாக வேண்டும் என்று இந்த உணர்வை, மீண்டும் மீண்டும், வலுப் பெறச் செய்து கொள்ளுங்கள்.
மன உறுதி கிடைக்கும்.
உங்கள் சொல் கேட்போருக்கு ஓரளவுக்கு மகிழ்ச்சியை ஊட்டும்.

ஆகையினால், நாமும் நம் குழந்தைகளும் இந்த மாதிரி செய்து தைக் கட்டாயாமாக்கி, ஒரு பழக்கத்திற்குக் கொண்டு வரவேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்திகளை நீங்கள் அனைவரும் பெற்று
மகிழ்ந்து வாழ்ந்து பிறரையும் மகிழ்வித்து வாழ்ந்து,
பேரின்பப் பெருவாழ்வு வாழ்ந்து வளர்ந்திட எமது அருளாசிகள்.