ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 9, 2016

“ஒ.....ம்” “ஒ.....ம்” “ஒ.....ம்” - பிரணவம் - ஞானிகளின் விளக்கம்

நமக்குள் இதற்கு முன் அறியாது சேர்ந்த எத்தனையோ உணர்வுகளால் கேன்சர், டி.பி., ஆஸ்த்மா போன்ற நோய்கள் வருகின்றது. அந்த உணர்வுக்கொப்ப அணுக்கள் தூண்டுகின்றது. அந்த உணர்வின் தன்மையை நுகர்கின்றோம்.

அதனால் நம்மை அறியாமலே உடலில் வேதனைப்படுகின்றோம். வேதனை என்ற உணர்ச்சிகளை உந்துகின்றது.

வேதனைப்படும் அணுக்கள் நம் உடலில் சேர்ந்தால் அந்த உணர்ச்சிகள் உந்தப்படும் பொழுது நம் இரத்தத்தின் வழி உயிரின் சிறு மூளைக்கு எட்டுகின்றது. அணுக்களுக்குள் வேதனை என்ற உணர்வு வருகின்றது.

நம் உயிர் உடனே கண் காது மூக்கு இவைகளுக்கு ஆணையிடுகின்றது. அந்த உணர்வின் நினைவாற்றல் “வலிக்கும் இடத்தைக் காட்டுகின்றது”.

அந்த உணர்வின் தன்மையை நுகரப்படும் பொழுது அந்த வலி இருக்கும் இடங்களில் எந்த விஷத் தன்மையை அந்த அணுக்கள் பெற்றதோ அதற்கு நேரடியாகவே உணவைச் செலுத்தச் செய்கின்றது.

நமக்குள் தீமையை விளைவிக்கும் அல்லது நம் உடலுக்குள் வேதனையை உருவாக்கும் நம் உடலைச் சிதையச் செய்யும் அணுக்கள் உருவாகியிருந்தால் அத்தகையை சிதைவின் நேரத்தில் நமக்குள் வேதனையின் உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது,

ஆக, இந்த உணர்வின் தன்மை உயிருக்கு எட்டுகின்றது. ஆனால் எட்டும் பொழுது வேதனை உணர்வை நுகர்ந்தால் அந்த வேதனையான அணுக்களைத் தான் பெருக்க உதவுகின்றது.

அதை மாற்ற வேண்டுமா வேண்டாமா..,?

ஆகவே, நாம் எதைப் பெருக்க வேண்டும்?

துருவ மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெறவேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

நம் உடலில் எங்கே வேதனை உருவாகி இருக்கின்றதோ அந்த அணுக்கள் மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறவேண்டும், அவை மகிழச் செய்யும் அணுக்களாக மாற வேண்டும் இந்த உடலில் நாம் நலம் பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

ஏனென்றால், வேதனைப்படுவதற்கு மாறாக, வேதனையை உருவாக்கும் அணுக்கள் உருவாக விடாமல் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வு பெறவேண்டும், மகிழ்விக்கும் உணர்வின் அணுவாக விளைய வேண்டும் என்று நாம் நம் நினைவாற்றலைச் செலுத்தப் பழகிக் கொள்தல் வேண்டும்.

இராமாயணத்தில் காட்டுகின்றார்கள். இராமன் எப்பொழுது கல்யாணராமனாகின்றான்? (சீதா என்ற) மகிழ்ச்சி என்ற உணர்வைச் சேர்க்கும் பொழுதுதான் கல்யாணராமன் ஆகின்றான்.

எல்லோருடைய எண்ணங்களை ஒன்றாக இணைத்து எல்லோரும் நலம் பெறவேண்டும் என்ற உணர்வை ஒன்றாக்கிப் பாருங்கள். மகிழ்ந்து வாழும் சக்தி அனைவரும் பெற்று நலமும் வளமும் பெறவேண்டும் என்று எண்ணிப் பாருங்கள்.

உங்களுக்குள் “ஆனந்தக் கண்ணீர்” வரும். ஆக, அன்புடன் அரவணைக்கும் அணுவின் தன்மை உருவாகும். இதைப் போன்ற உணர்வுகளைத் தான் ஜீவ அணுவாக நம் உடலாக மாற்ற வேண்டும் என்று ஞானிகள் காட்டினார்கள்.

ஏனென்றால் நம் உயிர் “ஓ.., ம்” என்று ஜீவ அணுவாக நம் உடலாக மாற்றுகின்றது. நாம் எண்ணும் உணர்வே ஓம் என்று ஜீவ அணுவாக மாறுகின்றது. ஆகவே, நாம் எதை எண்ண வேண்டும் என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்வது நல்லது.

இதைத்தான் அன்று ஞானிகள் செய்தார்கள்.

வெறுமனே “ஓம் ஓம்” என்று சொன்னால் அர்த்தமற்றது. நாம் “ஓம்.., ஓம்.., ஓம்..,” என்று சொல்வதில் பொருள் இல்லை.

ஆகவே, இதைப் போன்று நீங்கள் உங்கள் உடலில் வேதனை என்ற உணர்வுகள் வந்தால் இப்பொழுது யாம் கூறிய தியான முறைப்படி அருள் மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நுகர்ந்தால் அந்த உணர்வின் தன்மை நமக்குள் அணுவாகின்றது.

அந்த உணர்வின் வலுவை நமக்குள் உருவாக்கும் அணுக்கள் உருவாகின்றது. இதன் வழி கொண்டு மகரிஷிகளின் ஆற்றல் நாங்கள் பெறவேண்டும் என்று அந்த உணர்வை வளர்த்து உங்கள் உடலுக்குள் இருக்கும் அணுக்களுக்குச் செலுத்துங்கள்.

இந்த உணர்வைச் செலுத்தப்படும் பொழுது “நம்முடைய நினைவாற்றல்” அங்கே பெருகுகின்றது. அவ்வாறு பெருகும் நிலைகள் கொண்டு இந்த உடலை விட்டுச் சென்றால் நாம் அங்கே மகரிஷிகள் அருள் வட்டத்திற்குச் செல்கின்றோம்.

சப்தரிஷி மண்டலம் அடைகின்றோம், மனிதனின் கடைசி எல்லை அதுவே.