ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 22, 2014

"நான் நல்லவனாக ஆகவேண்டும்” என்றுதான் கேட்டேன் - ஞானகுரு

நீ நேராக பழனி மலைக்குப் போ என்று சொல்கிறார் குருநாதர். அப்படி அந்த மலைக்குப் போவதற்கு முன்தான், முருகன் உனக்குக் காட்சி கொடுக்கும் பொழுது, நீ என்ன கேட்க வேண்டும் என்றும் சொல்கிறார், குருநாதர்.

இருந்தாலும், உனக்குக் முருகன் காட்சி தருவான். முருகன் காட்சி தரும் பொழுது, நீ என்ன கேட்க வேண்டும் என்று சொல்லுகின்றார். அப்பொழுது, செல்வம் வேண்டும், செல்வாக்கு வேண்டும், சொல்வாக்கு வேண்டும் என்று, நீ கேட்க வேண்டும் என்று சொல்லி, இதற்கு விளக்கமும் கொடுத்தார், குருநாதர்.

இந்தச் செல்வம் இருந்தாலும், செல்வாக்கு வேண்டும், அது இல்லாமல் போனால், அந்தச் செல்வத்திற்குள் எதிரிகள் வரும், செல்வாக்கு வேண்டும், இரண்டாவது சொல்வாக்கு வேண்டும், இதைச் சொன்னால், அந்த உணர்வை அவன் கிரகிக்கும் தன்மை. இந்த மூன்று நிலையும், ஒரு மனிதனுக்குத் தேவை என்று குருநாதர் சொல்கின்றார்.

ஆனால், முருகன் உனக்குக் காட்சி கொடுப்பான் நீ இதைக் கேட்க வேண்டும் என்று சொன்னார். இதே மாதிரி, பல உணர்வின் உண்மையின் நிலைகளை இயக்கிக் காட்டினார்.

சாதாரணமாக முருகன் என்றால், இப்படித்தான் இருப்பார் என்று நமக்குத் தெரியும், வேறு ஒன்றும் தெரியாது. நானும் படி ஏறிப் போனேன், சாப்பிடவும் முடியவில்லை கிரக்கமும் அதிகமாகின்றது. என்னுடைய சிந்தனை எங்கெங்கேயோ போகிறது.

இதென்னடா வம்பாகப் போய்விட்டது. சாமிஅம்மா உடல் நிலை இப்பொழுதுதான் சரியாகி உள்ளது. பிள்ளைகள் எல்லாம் இந்த மாதிரி இருக்கின்றது. மாமனார் இறந்து விட்டார் பார்ப்பதற்கும் வழி இல்லை என்ற வகையில் திகைத்துப் போய், மிகவும் கவலையில் இருந்தேன்.

இப்படி, ரொம்பக் கவலையாக இருக்கும் பொழுதுதான், திடீரென்று, மலைக்கு போ என்ற இந்த உணர்வு வந்து மலைக்குப் போய்க் கொண்டிருந்தேன்

அங்கு போனவுடன் நான் போன நேரத்தில் கூட்டம் குறைவாக இருந்தது. ஒரு ஏழெட்டுப் பேர் தான் இருந்தார்கள். அப்பொழுது, என் உடலில், கம கமஎன்று வாசனை வருகிறது.

அந்த மலையில் உள்ளவர்களில், இதற்கு முன் என்னுடன் பழகிய வாட்ச்மேன் வந்து, நைனா, நைனா, வாங்க..” என்று, அங்கு தாம்பாலத்தில் யாரோ அர்ச்சனை செய்த மாலையை எடுத்து, என் கழுத்தில் போட்டார்.

அய்ய.. என் கழுத்தில் ஏன் மாலையைப் போடுகிறீர்கள் என்று நான் அவரிடம் கேட்டேன்.

அவர், “இல்லை நைனா, உனக்குப் போட வேண்டும் என்று தோன்றியது, போடுகிறேன் என்றார்.

அட., எனக்குப் போடவேண்டும் என்று என்னப்பா வந்தது. நானே இப்படிக் கஷ்டப்பட்டு வருகிறேன்என்றேன்

என்னமோ எனக்கு, மாலயை உனக்குப் போட வேண்டும் தோன்றியது, நான் போடுகிறேன் என்கிறார் அந்த வாட்ச்மேன்.

முதலில் அங்கே அந்த வரவேற்பு. அந்த மாலையைப் போட்டவுடனே என்ன நடக்கின்றது? அந்தச் சிலையில் இருந்து முருகன் அப்படியே எழுந்திருந்து வருகின்றார்.

அது, அந்த உணர்வு, முருகன் அந்த குழந்தைப் பருவமாக வருவது தெரிந்தது. நான் முன்னே பின்னே, முருகனைப் பார்த்ததும் இல்லை, அப்பொழுது காட்சியாக, சிலையிலிருந்து முருகன் வந்தால் எப்படி இருக்கும்? எனக்கு ஒரே அதிசயம், பொங்குகின்றது !

முருகன் வந்தவுடன், எனக்கு என்ன ஆனது? செல்வாக்கு, சொல்வாக்கு, தனம், இந்தப் பொருள் வேண்டும் என்ற வகையில், இந்த செல்வாக்கு வேண்டும், சொல்வாக்கு வேண்டும், செல்வம் வேண்டும் என்று கேட்பதற்கே, எனக்கு மனம் வர வில்லை,

ஆக, நம் வாழ்கையில் முருகனையே பார்த்து விட்டோம். இனிமேல், இதைக் காட்டிலும் நமக்கு வேறு என்ன வேண்டும்? இந்த நிலையில்,
நான் நல்லது செய்ய வேண்டும்,
நல்லதைச் செயல்படுத்த வேண்டும்,
நல்ல வழியில் நடத்த வேண்டும்,

என்னை அறியாது தீயது வந்தால், அது வராது தடுக்கக்கூடிய சக்தி எனக்கு வேண்டும்.

எனக்குள் ஆசை என்ற நிலைகளோ, தவறான உணர்வுகள் வந்தாலோ, அவைகளை வராது தடுக்கும் அந்த சக்தியை நீங்கள் கொடுக்க வேண்டும் என்று வேண்டினேன்.