ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 10, 2014

மணிக்கணக்கில் உபதேசித்து உங்களுக்கு அருள் சக்திகளைக் கொடுக்கின்றோம் - ஞானகுரு

1. மணிக்கணக்கில் யாம் உபதேசித்து, உங்களுக்கு அருள் சக்திகளைக் கொடுக்கின்றோம்
யாம் உங்களுக்கு அருள் உணர்வுகளைக் கொடுக்கின்றோம். சும்மா இல்லை. அருள் உணர்வுகளுடன்அருள் சக்திகளையும் கொடுக்கின்றோம்.

மது குருநாதர், எமக்கு எப்படி சக்தி கொடுத்தாரோ, அதைப் போன்றுதான், உங்களுக்கும் சக்தி கொடுக்கின்றோம்.

இன்று, காற்று மண்டலமே மிகுந்த நச்சுத் தன்மையாக இருக்கின்றது. எங்கே பார்த்தாலும் தீவிரவாதம், மதத்திற்குள்ளும், இனத்திற்குள்ளும் மொழிக்குள்ளும் தீவிரவாதம் என்று, இன்று எல்லா நிலைகளிலும் தீவிரவாதங்கள் வளர்ந்துள்ளன.

அந்த நிலைகளை நாம் பார்த்து, கேட்டு அறிய நேரும்பொழுது, அந்த உணர்வுகள் நமது உடலுக்குள்ளும் வந்துவிடுகின்றது. அது நமக்குள் வலுவாக ஆகும் பொழுது, நம்முள் சிந்திக்கும் திறன் இழக்கப்படுகின்றது. நல்லவைகளை நாம் நுகர முடியாதபடி, தடையேற்படுகின்றது.

ஆகவேஇத்தகைய தீமைகளையெல்லாம் மாற்றியமைக்க வேண்டுமல்லவா? அதற்காகத்தான், யாம் மணிக்கணக்கில் உபதேசித்து, உங்களிடத்தில் அருள் உணர்வுகளைப் பதிவாக்குகின்றோம்.
2. யாம் உபதேசிக்கும் உணர்வின் துணை கொண்டு துருவ  நட்சத்திரத்தின் ஆற்றலை எளிதில் பெறலாம்
யாம் உபதேசிக்கும் அருள் உணர்வுகளை, கூர்மையாக உற்று நோக்கிப் பதிவு செய்து கொண்டபின்,  அந்த உபதேசித்த உணர்வுகளை நினைவுபடுத்தி, நீங்கள் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருளை எளிதில் நுகர முடியும். 

உங்கள் உயிர் வழி, துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருளை நுகர்ந்து, உங்கள் உடலில் உள்ள அனைத்து அணுக்களுக்கும் உணவாகக் கொடுக்க முடியும்.

யாம் உங்களிடத்தில் பதிவு செய்த, அருள் உணர்வுகளை நீங்கள் மனதில் எண்ணி, ஈஸ்வரா…” என்று, உங்களுடைய புருவ மத்தியில் உயிரான ஈசனை எண்ணினால், தீமைகள் வராது உங்களை நீங்கள் காத்துக் கொள்ளலாம். 

நாம் அனைவரும், இதை ஒரு பழக்கத்திற்குக் கொண்டு வரவேண்டும். 

அவ்வாறு, கொண்டு வந்துவிட்டோம் என்றால், நாம் எப்பொழுது வேண்டுமென்றாலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நமக்குள் சேர்ப்பிக்க முடியும். நமக்குள் தீமைகள் வராது தடுக்க முடியும்.

மெய் வழி வாழ முடியும். மெய்ஞானிகள் கண்ட பேருண்மைகளை, நாமும் கண்டுணர முடியும். மெய்ஞானிகளுடன் இணைந்து, வேகா நிலை என்ற நிலையாக, அழியா ஒளிச்சரீரம் நாம் அனைவரும் பெறமுடியும்.

இதன் உண்மைகளை உணர்ந்து, அருள் ஞானிகளின் அருள் உணர்வுகளைத் தம்முள் வளர்த்து வரும் அன்பர்கள் அனைவரும், துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற்று, தங்கள் வாழ்க்கையில் அறியாது சேர்த்த இருளை நீக்கி, மெய்பொருள் காணும் திறன் பெற்று, உயிருடன் ஒன்றிய உணர்வுகளை ஒளியாக்கும் திறன் பெற்று, என்றும் பதினாறு என்று, பெரு வீடு பெருநிலையை அடையும் நிலையாக, பேரின்ப பெருவாழ்வாக வாழ்ந்து வளர்ந்திட, எமது அருளாசிகள்.