ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 17, 2014

விபத்தைச் சந்தித்தால் வரும் பின் விளைவும், மாற்றி அமைக்க வேண்டிய வழிமுறையும்

1. நாம் காரில் செல்லும்போது காரின் முன் ஒருவர் எதிர்பாராமல் வந்தால் நம் உணர்வுகள் என்ன ஆகின்றது?
குடும்பத்துடன் சந்தோசமாக வாழும் காலத்தில், நாம் ஒரு காரில் பயணம் செய்கின்றோம் என்றால், நமது காருக்கு குறுக்கே ஒருவர் திடீரென்று வந்துவிட்டால், சடாரென்று காரை நிறுத்தி, குறுக்கே வந்தவரைப் பார்த்து வெறுப்பு கொண்டு அவரைத் திட்டுகின்றோம்.

இப்படி, காரின் குறுக்கே வந்தவரைப் பார்த்து, வெறுப்பதுடன் மட்டுமல்லாமல், ஒருவேளை அவர் காரில் அடிபட்டிருந்தால் என்னாவது? என்ற பயமும் நமக்குள் வருகின்றது.

இது சமயம் காரினுடைய டிரைவரும் சரி, மற்றும் காருக்குள் இருக்கும் மற்றவர்களும் சரி, இதனின் உணர்வுகளை நுகர நேருகின்றது. காரின் குறுக்கே வந்தவருக்கு, ஏதேனும் ஆபத்து வரக்கூடாது என்று எண்ணுகின்றனர். ஆனால், பயத்தின் உணர்வுகளை அவர்கள் நுகர்ந்ததனால், பயத்தின் உணர்வுகள் அவர்களிடத்தில், “ஓம் நமச்சிவாயாஎன்று உடலாக மாறிவிடுகின்றது.

நமது மனித உடலில் பயத்தின் உணர்வுகளும்,
அதிர்ச்சியின் உணர்வுகளும்,
இரத்த நாளங்களில் கலக்கப்படும் பொழுது,  
அதிர்ச்சியான உணர்வுகளைத் தூண்டும் உணர்வுகள்,
நல்ல அணுக்களில் ஊடுருவி,
நமது உடலையே நடுங்கச்  செய்கின்றது. 

அது சமயம், நாம் எதைச் செய்வது என்ற சிந்தனை இல்லாதபடி, பிரமை பிடித்தது போன்று, ஆகி விடுகின்றோம்.

ஆனால், ஒருவர் தான் அறியாது, திடீரென்று ஒரு காரின் குறுக்கே வருவதன் காரணம் எதுவென்றால், அவருடைய குடும்பத்தில் எத்தனையோ பிரச்னைகள், வியாபாரத்தில் கடன் கொடுக்கல், வாங்கல், தனக்குத் திரும்பக் கொடுக்க முடியாத நிலைமை, அதனால் சஞ்சலமும், சோர்வும் ஏற்பட்டு, கடன் கொடுத்தவருக்கு நாம் எப்படி நல்லவராக நடந்து கொள்வது, என்ற சிந்தனையில் செல்வோரும் உண்டு.

அதே சமயத்தில், நம்முடைய வருமானம் இவ்வளவுதான். ஆனால், குழந்தைகளுக்குப் பள்ளிக்கு மாத கட்டணம் செலுத்த வேண்டும், அவர்களுக்கு உடை எடுக்க வேண்டும், நாளை என்ன செய்வது? என்ற நிலையில் குடும்பத்தைக் காக்கும் உணர்வுடன், அவருடைய எண்ணங்கள் சென்று,  அதே சிந்தனையில் செல்லப்படும் பொழுது, எதிரே வரும் வாகனத்தையோ, எதிரே வரும் மனிதரையோ, அல்லது எதிரே இருக்கும் பள்ளத்தையோ,  பார்க்க முடியாத சந்தர்ப்பம் ஏற்படுகின்றது.

இப்படி, திடீரென்று குறுக்கே வரும் மனிதரைக் கண்டதும், காரின் டிரைவர் ஒலியை எழுப்பி, சடாரென்று பிரேக் பிடிக்கின்றார். இதனால், காருக்குள் இருக்கும் அனைவருக்கும் அதிர்ச்சி ஆகின்றது.

அது சமயம்,  காரின் குறுக்கே வந்தவரை எண்ணும் பொழுது, 
நமது உயிரான ஈசன்,
இதனின் உணர்வின் உணர்ச்சிகளை
நமது உடல் முழுவதும் சுழலச் செய்து,
அதன் வழியில் நம்மை இயக்குகின்றது. 

இதனின் உணர்வின் தன்மை, நமது நல்ல அணுக்களின் வலுவை இழக்கச் செய்கின்றது.
2. அதிர்ச்சியான உணர்வுகளை சுவாசித்ததால் மன நோயாகிவிடுகின்றது
நன்கு வசதியுள்ள, வேதனையை அறிந்திராத செல்வந்தர்கள், இத்தகைய அதிர்ச்சியான சம்பவங்களைக் காண நேரிடும் பொழுது, இதனின் உணர்வுகள் அவர்களிடம் ஆழப்பதிந்துவிடுகின்றது.

இதனின் உணர்வுகளை மற்றவர்களுடன் உரையாடலில் பகிர்ந்து, இதையே எண்ணி, இதனின் உணர்வுகளை வளர்ப்பதனால்.
அவருடைய உடலில் பலவிதமான நோய்களும்,
உடலில் நடுக்க வாதமும், சிந்திக்கும் தன்மையை இழப்பதும்,
இனம் புரியாத கோபம் வருவதும்,
இனம் புரியாத பயம் உருவாவதும்,
போன்ற நிலைகள் அவரிடத்தில் ஏற்படுகின்றது.

இதே போன்று, வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் பொழுது, எதிரே ஒரு வாகனம் வந்து கொண்டிருக்கும். அதே சமயத்தில், இன்னொரு பக்கம் இருந்து ஆடோ, மாடோ, நாயோ, ஏதோ ஒன்று குறுக்கே வரும். இதன் மீது மோதாமலிருக்க, எதிரே வரும் வாகனத்தைக் கவனிக்காது மறுபக்கம் திருப்பும் பொழுது, வாகனம் இரண்டும் எதிர்பாராது மோதலாகின்றது.

ஒரு நாயோ, பூனையோ காரின் குறுக்கே வந்துவிட்டால், அதைக் காப்பாற்ற எண்ணி, சிந்தனையை அதன்   மேல் செலுத்தி, எதிரே வரும் வாகனத்தைக் கவனிக்காது திடீரென்று வண்டியைத் திருப்புவதால், எதிரே வந்த வாகனமும், இவருடைய வாகனமும் மோதி, விபத்துக்குள்ளாகின்றது.

இத்தகைய விபத்தில், சந்தர்ப்பவசமாகச் சில காயங்களுடன் உயிர் பிழைத்துக் கொள்ளுகின்றார் என்று வைத்துக் கொள்வோம். செல்வந்தராக இருந்து செல்வத்தால் மகிழ்ச்சியாக இருந்தார்.

ஆனால், இந்த விபத்தால், பயம் கலந்த வேதனையும், அதிர்ச்சியும் அவருள் சேர்ந்து, அவரிடத்தில் மன நோயாக மாறிவிடுகின்றது.

இதனால்,  சிந்தனை செய்யும் பொழுது பலவீனமும், தம் குழந்தைகள், தம் சொல்லைக் கேட்க மறுக்கும் பொழுது அதிர்ச்சியும், பலவீனமான நிலையில் பயமும், தன்னிடத்தில் வேலை செய்பவர்கள் தவறு செய்வதால், அதிர்ச்சியும், பயமும் வருகின்றது.  இதன் தொடர் கொண்டு, பலவித நோய்களும் வருகின்றது.

பண வசதி படைத்திருப்பதினால், மனோத்தத்துவ டாக்டரிடம் செல்கின்றனர். ஆனால், மன நோயினால் உணர்வின் தன்மை, உடலில் நோயாகின்றது. பின்னர் இதற்கு வேண்டிய மருத்துவமும், பயிற்சியும் செய்கின்றனர்.

வாழ்க்கையில் எவ்வளவுதான் செல்வம் படைத்திருந்தாலும், இது போன்று எதிர்பாராத சம்பவங்களால் நுகர்ந்த உணர்வுகள், உடலில் தீமைகளை விளைவிக்கும் நிலையாக விளைந்து விடுகின்றது. 
3. துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி தீமையின் உணர்வுகளை ஒடுக்கிவிடும்
இவ்வாறு சந்தர்ப்பத்தால், நமக்குள் அறியாது சேரும் தீமைகளை, எப்படித் துடைப்பது? துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வுகளை, நம்முள் இணைத்திடல் வேண்டும். 

ஏனென்றால், மனிதனாகப் பிறந்து, தமது வாழ்க்கையில் நஞ்சினை வென்று, தீமை தரும் சந்தர்ப்பங்களை மாற்றியமைத்து, ஒளியின் சரீரம் பெற்றவர்கள் இன்று துருவ நட்சத்திரமாக இருக்கின்றார்கள்.

துருவ நட்சத்திரத்திலிருந்து வரும், பேரருள் பேரொளியின் உணர்வுகளை நமக்குள் கவர்ந்து, நம்மை நாம் சுத்தப்படுத்திக் கொள்ளவேண்டும்.

தங்கத்தில் திராவகத்தை ஊற்றியதும், தங்கத்தில் கலந்துள்ள செம்பும், பித்தளையும் ஆவியாகி விடுவதைப் போன்று,
துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகள்
நம்முள் இணையும் பொழுது,
நம்மை அறியாமல் உட்புகுந்த
தீமையின் உணர்வுகள் ஒடுக்கப்படுகின்றது.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும், ங்கள் உடல் முழுவதும் படரவேண்டும், ங்கள் உடலில் உள்ள ஜீவான்மாக்கள், ஜீவ அணுக்கள் அனைத்தும் பெறவேண்டும்என்ற உணர்வுகளை நமது உடலுக்குள் செலுத்தவேண்டும்.

நம்மைச் சுத்தப்படுத்திக் கொண்டு, யார் தவறு செய்தாரோ, அவர் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும், அவர்கள் நன்மை செய்யும் பண்புகள் பெறவேண்டும், என்று இதனின் உணர்வுகளை நமக்குள் சேர்க்கும் பொழுது,
இவை அனைத்தும்  நமக்குள் கலவையாகி,
நமக்குள் இரத்த நாளங்களில் கலக்கச் செய்கின்றது.

இதனின் உணர்வுகளை நமது உடலில் உள்ள அணுக்கள் உணவாக எடுத்து, மகிழ்ச்சி பெறும் உணர்வின் அணுக்களாக மாறுகின்றது.

ஒருவர் நல்லவராக வேண்டும்என்ற உணர்வை நாம் எண்ணும் பொழுது, இதனின் உணர்வுகள் நாம் எண்ணியவரின் உடலில் படர்கின்றது. அதே சமயம்,
நாம் நுகர்ந்த உயர்ந்த உணர்வின் உணர்ச்சிகள்,
நமது உடலில் சேரப்படும் பொழுது
நமது உடலிலுள்ள நல்ல அணுக்கள்
அதனை அதிகமாகத் தன்னுள் பெறுகின்றன.

இது போன்றுநாம் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை, நமக்குள் வலு சேர்க்கச் சேர்க்க, நமக்குள் மனத் தூய்மையும், சிந்தித்துச் செயல்படும் தன்மையும், பிறவியில்லா நிலை பெறச் செய்யும் அருளுணர்வுகளும், நம்முள் உருவாகின்றது.

இவ்வுண்மைகள் அனைத்தும் அருள்ஞானிகள் நமக்கு உணர்த்தியவைகள்.

இவைகளைத் தம்முள் அறிந்துணர்ந்து,
நமது வாழ்க்கையில் வரும் தீமைகளை நீக்கும் நிலையாகவும்,
அருள்ஞான நெறியின் துணை கொண்டு,
தம்முள் பேரருள் உணர்வைச் சேர்த்துவரும் அன்பர்கள் அனைவரும்,
தம்முள் அறியாது சேர்ந்த தீயவினைகள், சாபவினைகள்,
பாவவினைகள், பூர்வ ஜென்மவினைகளை அகற்றி,
மெய்பொருள் காணும் திறன் பெற்று,
இவ்வாழ்க்கையில் பிறவியில்லா நிலை பெறும் நிலையாக,
பெருவீடு பெருநிலை பெறும் நிலையாக,
பேரின்பப் பெருவாழ்வாக வாழ்ந்து வளர்ந்திட, எமது அருளாசிகள்.