ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 21, 2014

பதட்டம் (TENSION) ஏன் வருகிறது? அதை எப்படிச் சமபடுத்துவது - ஞானகுரு

1. ஒருவர் செயலைப் பார்த்தவுடன் நமக்கு ஏன் பதட்டம் வருகிறது?
நம் குடும்பத்தில் எதிர்பாராத நிலைகள் வரும்பொழுது, ஒருவர் வெறுப்பு, வேதனையான செயலைச் செய்வார். அவரை நாம் உற்றுப் பார்த்தபின் உணர்வை நுகர்ந்து அறிவோம். இப்படிச் செய்கின்றானே? என்ற நிலை வந்துவிடும். அது வந்தபின் அதைச் சுத்தப்படுத்தாமல் விட்டுவிடக் கூடாது.

அந்த மாதிரி செய்கின்றானென்றால், உடனே நம் குரு காட்டிய முறைப்படி, “ஈஸ்வராஎன்று உயிரை எண்ணி, துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் என்று சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அவர் செய்யும் தவறான உணர்வு நம் உயிரில் பட்டு, உடல் முழுவதும் பரவுகின்றது. நம் ரத்தங்களில் முழுவதும் கவரப்படுகின்றது.

ரத்தங்களில் கலந்தபின், நம் உடலில் உள்ள நல்ல அணுக்களை, நல்ல உணர்வை ஈர்க்க விடாதபடி தடைப்படுத்தி விடுகின்றது. ரத்தத்திலுள்ள உணர்வுகளை நல்ல அணுக்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றது.

அப்படி ஏற்றுக்கொள்ள மறுக்கும் பொழுது,
கொதிப்பென்ற நிலைகள் வருகின்றது.

அந்த வெறுப்பென்ற நிலைகள் வரும்பொழுது,
நமக்கு ஒருவிதமான நடுக்கம் வரும்.

ஏனென்றால்அந்த அணுக்களுக்குச் சரியான ஆகாரம் இல்லையென்றால், அது பதறும். நமக்கு பதட்டம் வரும்.

அப்படி நடுக்கம் வரும்பொழுதுசிறிதேனும் அந்த அணுக்களில் சேர்ந்துவிட்டால், அந்த அணுக்களில் அந்த உணர்வுகள் இணைந்து கொள்ளும். அடுத்து, தவறு செய்யும் உணர்வுகளை நுகர்ந்து, அது வளர்ந்து விடும்.

நல்ல அணுக்களின் மலங்களால் உருவானதுதான் நம் உறுப்புகள். அப்பொழுது உறுப்பின் வளர்ச்சி குறைகின்றது. அதுவும் சேர்ந்து, அந்த அணுக்களின் தன்மையும் சேர்ந்துஒன்றுக்கொன்று போர் முறை செய்து  வலி எடுக்கின்றது.

நாம் தப்பு செய்யவில்லை. ஒருவருக்கொருவர் சண்டையிடும் உணர்வை நுகர்ந்தோமென்றால், இந்த நிலையாகின்றது. அதே சமயத்தில், இந்த வெறுப்பின் உணர்வு கொண்டு வீட்டுக்கு வருகிறோம் என்று வைத்துக் கொள்வோம்.

அந்த வெறுப்பின் உணர்வுகள் நமது ஆன்மாவில் அதிகமாகப் பெருகியிருக்கும்.

வீட்டில், சின்னக் குழந்தை ஒரு பாத்திரத்தைப் போட்டால் போதும்,
அல்லது குழந்தை ஏதாவது சத்தம் போட்டுப் பேசினால் போதும்.
இது எதிர் நிலை ஆகும்.

மனைவியைப் பார்த்து, பிள்ளையை வளர்த்திருப்பதைப் பார், என்று அந்த வெறுப்பின் உணர்வுகள், வெறுப்பான நிலைகளில் பேசச் சொல்லும்.
சில நேரங்களில் வீட்டில் ஏதாவது நடந்தால்,
உங்களை அறியாமலே கோபித்துக் கொள்வீர்கள்.
2. துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நம் இரத்தத்தில் கலக்கச் செய்ய வேண்டும்
இதிலிருந்து, நாம் என்ன தெரிந்து கொள்கின்றோமென்றால்நாம் நுகர்ந்த உணர்வுதான் நம்மை இயக்குகின்றது.

அப்படி இயக்கும் அந்த உணர்வை, நாம் கொடுத்த அருள் சக்தி கொண்டு ஆயுள் மெம்பர் அனைவரும் 
அந்த நிமிடமேபுருவ மத்தியில் ஈஸ்வரா என்று எண்ணி,
துருவ நட்சத்திரத்தின் பேரருளை பேரொளியை நாம் பெறவேண்டும்
என்று நம் இரத்தத்தில் கலக்கச் செய்யவேண்டும். 

இரத்தத்தில் கலந்தபின், அவர்கள் இருவருமே, பொருளறிந்து செயல்படும் சக்தி பெறவேண்டும், தெளிந்த மனம் பெறவேண்டும், ஒன்றுபட்டு வாழும் சக்தி பெறவேண்டும், என்று எண்ண வேண்டும்.

அந்த உணர்வின் உணர்ச்சிகளை நம் இரத்தத்தில் சேர்க்கும் பொழுதுஅவன் சண்டை போட்ட உணர்வைத் தணிக்கின்றது.
அவன் ஒன்று சேர்ந்து வாழவேண்டும், என்ற உணர்வு கலக்கின்றது.
உணர்வின் தன்மையை உயிர் உருவாக்குகின்றது.
உணர்வின் தன்மை கருவாகின்றது.
நம் இரத்தத்தில் சுழல ஆரம்பிக்கின்றது
இது, நம் அணுக்களுடன் சேரும் பொழுது,
நமக்கு ஒத்த நிலையாக மாறுகின்றது.
இந்த மாதிரி, எல்லாவற்றையும் மாற்றிப் பழக வேண்டும்.

நான் சாமி கும்பிட்டேன், தியானமிருந்தேன், இப்படி ஆகிவிட்டது என்று சொல்லக் கூடாது. சில பேர் தியானமிருந்து பிறருடைய கஷ்டங்களைக் கேட்டுவிட்டு, சுத்தப்படுத்தாமல் இருந்தால் என்ன செய்வது?

சட்டையில் அழுக்குப்பட்டால், துவைத்துக் கொள்கின்றோம். ஒரு நாற்றமான பொருள் சட்டையில் பட்டால் உடனடியாக துவைத்துக் கொள்கின்றோம். அது போன்று, வெறுப்பென்ற நிலைகளை உடனே சுத்தப்படுத்தியாக வேண்டும்.

எந்த நிலையிலும் எந்தச் சூழ்நிலையிலும், பிறருடைய தவறை நாம் பார்த்துவிட்டால்அந்த உணர்வுகள் நம்மிடம் வந்த பின்தான் தவறு செய்கின்றான் என்று அறிகின்றோம். 

அந்த உணர்வின் தன்மை, நம் உடலுக்குள் உணர்ச்சிகளைத் தூண்டி, நம்மை அறியாமலேயே இப்படிச் செய்கின்றான் என்று சொல்ல வைக்கின்றது.
நாம் நுகர்ந்த உணர்வுகள் இப்படிப் பேச வைக்கின்றது.
இதை நாம் தடைப்படுத்த வேண்டும்.

அந்த நேரத்தில், “ஈஸ்வராஎன்று நம் உயிரை எண்ணி, நம் உடலுக்குள் போகாமல் தடைப்படுத்த வேண்டும். அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும், என்று எண்ணி, கண்ணின் நினைவை உள்ளுக்குள் செலுத்த வேண்டும்.

பின், அவன் பொருளறிந்து செயல்படும் திறன் பெறவேண்டும். நல்ல ஒழுக்கமுள்ளவனாக வரவேண்டும். பண்புடன் நடந்து கொள்ளும் சக்தி பெறவேண்டும் என்று எண்ண வேண்டும். இந்த உணர்வு, நம் உடலுக்குள் இரத்தத்திலுள்ள அவன் உணர்வைத் தணிக்கின்றது.

ஆகவே, தியானம் என்றால் கடும் தவமிருந்து நாம் எல்லாச் சக்தியும் பெறுவதல்ல.

ஒவ்வொரு நிமிடமும் நாம் அந்த அருள்சக்தி பெறவேண்டும். நல்ல குணங்கள் வரவேண்டும் என்று தியானித்து, உணர்வை உருமாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.