ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 13, 2014

உயிருடன் ஒன்றிய உணர்வுகள் சொர்க்கமடைகின்றது

1. இராமாயணத்தில் பொதிந்துள்ள மூலப் பொருள்கள்
நீங்கள், இராமாயணத்தைப் படித்து பாருங்கள். இதற்கு முன்பு இராமாயணத்தைப் படித்திருப்பீர்கள். ஆனால், யாம் உபதேசித்த அருள் உணர்வின் துணை கொண்டு, இராமாயணத்தைப் படித்தீர்கள் ன்றால்
அதில் எவ்வளவு மூலப் பொருள்  பொதிந்துள்ளது,
என்பதை நீங்கள் அறியமுடியும்.

இராவணனிடமிருந்து, சீதாவை இராமன் மீட்டு வந்தாலும், மக்கள் சீதாவின் கற்பைப்பற்றி என்ன சொல்வார்களோ என்ற நிலை வரும் பொழுது, சீதாவை அக்னிபிரவேசம் செய்யச் செய்து, அதன் பிறகு அரண்மனைக்கு அழைத்துச் செல்கின்றான்.

ஆனால், சீதாவை அரண்மனைக்கு அழைத்துச் சென்ற சிறிது காலத்திலேயே, சீதா கருவுறும் பொழுது, மக்கள் எல்லோரும் சந்தேகப்படுகின்றனர்.

ஏனென்றால், சீதா அரக்கனிடத்தில் இருந்ததினால், அரக்க உணர்வின் கருவே அங்கே விளையும் என்று, எல்லோரும் சந்தேகப்படுகின்றனர்.

ஆகவே, இராமன் லட்சுமணனைக் கூப்பிட்டார். ஏனென்றால், லட்சுமணன் விஷத்தின் இயக்கம். அதன் உணர்வின் துணை கொண்டு, சீதாவிடம் எதுவும் சொல்லாதபடி, கர்ப்பிணிப் பெண்ணான சீதாவை அழைத்துப் போய் காட்டில் விடும்படி இராமன் சொல்கின்றார்.

இராமன்தான் கடவுள், எல்லாவற்றையும் காப்பாற்றுவார், எல்லோரையும் காப்பவர், இராமன்தான் எல்லோருக்கும் இறைவன், என்று சொல்கின்றோம். ஆனால், ஒரு கர்ப்பிணிப் பெண்ணை தன்னந்தனியாக காட்டில் விடச்சொல்கின்றார்.

கர்ப்பிணி என்று கூட பாராமல், ஒரு அரக்கன்தான் கொடுமைகளைச் செய்வான். ஆனால், அரக்கனைக் காட்டிலும் கொடுமைகளைச் செய்யும் நிலையே இங்கு உள்ளது.

கருவுற்றிருக்கும் தாயை, காட்டு விலங்குகளுக்கு மத்தியில் விட்டுச் சென்றால், அரக்கனைக் காட்டிலும், பெரிய அரக்கனாகி விடலாமல்லவா? சற்று  சிந்தித்துப் பாருங்கள்.

இதை எதற்காக நமக்குக் காண்பிக்கின்றார்கள்?
2. வானஇயல் தத்துவத்தை சீதாவின் காதில் ஓதினார் வான்மீகி - “லவா  குசா”
காட்டிற்குள் சீதா அனாதையாகத் தவிக்கின்றது. அப்போது, சீதாவை ஒரு பெண் வான்மீகியின் ஆசிரமத்தில் கொண்டு சேர்த்துவிடுகின்றாள். வான்மீகி சீதாவைப் பார்த்தார். உண்மையின் உணர்வை அறிந்தார்.

அப்பொழுது  வான்மீகி. கர்ப்பிணிப் பெண்ணின் செவிகளில், வான இயல் தத்துவத்தை ஓதினார். வான்மீகி ஓதிய உணர்வின் தன்மை, சீதாவின் கருவில் வளரும் குழந்தையிடம் விளைந்தது.

இது போன்று வான்மீகி, உணர்வின் எண்ண இயக்கங்களையும், உலக நிலைகள் எப்படி உருவாகின்றது என்பதையும் தெளிவாக்கினார். தெளிவான உணர்வுகள் சீதாவின் கருவில் வளரும் குழந்தையிடம் விளைந்தது. 

ஞானத்தின் உணர்வு கொண்டு, லவா, குசா என்ற இரு குழந்தைகள் சீதாவிற்குப் பிறந்தன.

ஆனால். சீதாவை விட்டுப் பிரிந்திருக்கும் இராமனோ, தான் தனித்து வாழ முடியாது எத்தனையோ வேதனைப்படுகின்றார். ஆகவே, மக்களும், அரச சபையில் உள்ளவர்களும், எத்தனையோ வேதனைப்படுகின்றனர்.

ஆகவே, இந்தத் துன்பத்திலிருந்து மீள்வதற்காக, அன்று தசரதச் சக்கரவர்த்தி அசுவமேத யாகத்தை நடத்தியது போன்று, மீண்டும் ஒரு அசுவமேத யாகத்தை நடத்தி, நமது நாட்டைப் புனிதப்படுத்த வேண்டும் என்ற நிலையைக் கொண்டு வந்தார்.

அப்படிப் புனிதப்படுத்துவதற்காக, யாக சாலையைத் தயார் செய்தனர். யாகம் தொடங்குவதற்கான நாள் வரும் பொழுது, இதைப் பற்றி வான்மீகி அறிந்து கொண்டார்.

யாகம் நாளை தொடங்குகின்றதென்றால், இன்றே லவ குசாவை,  வான்மீகி  அங்கே அனுப்பி வைத்தார்.  

லவ, குசா இருவரும் அங்கே சென்று இராம நாம காவியங்களைப் பாடுகின்றனர். அவர்கள் பாடும் பொழுது, மற்றவர்களுக்கு, லவ, குசா யார் என்று தெரியவில்லை. ஆனால்,  இராமனுக்குப் புரிந்தது.

சீதாவிற்கும், எனக்கும் உண்டான தொடர்புகள், எங்கள் இருவரைத் தவிர யாருக்கும் தெரியாது. எங்கள் இருவருக்கும் மட்டுமே தெரிந்த இரகசியங்களை, இந்தக் குழந்தைகள் எப்படிப் பாடுகின்றன? இவர்கள் யார்? என்பதனைத் தெரிந்து கொள்வதறகாக, அவர்களை அணுகி, இராமன் கேட்கின்றார்.

அதன் பிறகு லவ, குசா இருவரும், இராமனை, வான்மீகியின் ஆசிரமத்திற்கு அழைத்துச் செல்கின்றனர்.

அப்போது, அங்கே இராமன் தமது மனைவி சீதாவைப் பார்க்கின்றார். சீதாவைப் பார்த்தபின், லவ, குசாவை தமது மகன்கள்தான் என்று அறிந்தார்.
3. மண்ணிலிருந்து தோன்றிய இந்த உடல் மண்ணுடனே ஐக்கியமாகிவிடுகின்றது
அதன்பின் இராமன், இனி கடந்த காலங்களை மறந்துவிடுவோம், இனி ஒன்று சேர்ந்து வாழ்வோம் என்று சீதாவை அழைக்கின்றார்.

அப்போது பூமா தேவி. ஏனென்றால்,  எல்லா உணர்வும் இப்பூமியில் விளைந்து, தாவர இனங்களாக உருவாகி, தாவர இனங்களின் சுவைக்கொப்பத்தான், எண்ணங்கள் உருவானது.

ஆகவே, இப்படி என்ணங்கள் உருவானாலும், உயிரணு, எத்தனையோ கோடி உடல்களைப் பெற்றபின் தான், இந்த மனித உடலை உருவாக்கியது.

ஆகவே, உடலின் சுவையின் உணர்வுகள் எப்படி இருக்கின்றது? என்பதைத்தான் அங்கே காண்பிக்கின்றனர். ஆகவே,
பூமாதேவி, சீதாவைப் பார்த்து,
பட்டது போதும், நீ பட்ட கஷ்டம் என்று அழைத்ததால்,
அந்த தசைகள் அனைத்தும் பூமியில் கலந்து, மண்ணுடன் மண்ணாக மாறிவிடுகின்றது.

ஏனெனில், தாவர இனங்கள் மண்ணிலே விளைந்தது. 
தாவர இனத்தின் உணர்வை எடுத்து வளர்ந்த 
உடலின் சத்து, மண்ணுடன் மண்ணாகப் போகின்றது.

மண்ணுடன் மண்ணாகப் போகும் இந்த உடலுக்காக வேண்டி, நாம் என்ன செய்கின்றோம்? எத்தனையோ பிரயத்தனங்கள் எடுக்கின்றோம். கோபம், வெறுப்பு, வேதனை, அடித்தல், கொல்லுதல் போன்ற உணர்வுகளை நம்மில் வளர்க்கின்றோம்.

ஒருவர் நம்மைத் திட்டிவிட்டால், “என்னை இப்படிப் பேசி விட்டார்களே, என்னை இப்படிக் கேவலப்படுத்தி விட்டார்களேஎன்ற உணர்வின் தன்மையை எடுக்கும் பொழுதுநாம் மண்ணுடன் மண்ணாகப் போகும், இந்த உடலுக்குத்தான் முக்கியம் கொடுக்கின்றோமே தவிரஉடலில் உணர்வுகளை ஒன்றாக்கி, இனி பிறவியில்லா நிலையை அடையும் உணர்வுகளை, நாம் நம்முள் இழந்திருக்கின்றோம் என்ற நிலையை இராமாயணத்தில் தெளிவாகக் கூறப்படுகின்றது.
4. உயிருடன் ஒன்றிய உணர்வுகள் சொர்க்கமடைகின்றது
நீங்கள் இராமாயணத்தைப் படித்துப் பாருங்கள். இதன் உண்மைகள் தெரியவரும். பூமி வெடித்து, சீதா மண்ணுக்குள் சென்றபின், இந்த உடலிலே விளைவித்த உணர்வுகள் உயிரான விஷ்ணுவிடம் சென்று டைகின்றது..

அப்போதுதான் விஷ்ணு கேட்கின்றார், நீ உலகை அறிய விரும்பினாயே, புவியில் எத்தனை தொல்லைகள் வருகின்றது? உலக மக்களின் வாழ்க்கையில், எண்ணத்தால் எத்தனை துயரங்கள் இருக்கின்றது என்று கூறியதாகக் காண்பித்து, இதிலிருந்து, உயிருடன் ஒன்றி இனி பிறவியில்லை என்ற நிலையில், சொர்க்கமடைகின்றது.

"உயிரான விஷ்ணு" என்ற உணர்வை எடுத்து,
அதன் உணர்வின் அறிவாக
நமக்குள் வளர்த்துக் கொண்டால், 
பிறவியில்லா நிலை என்ற நிலை அடைகின்றோம்,
என்பதனை இராமாயணத்தில் தெளிவாகக் காண்பிக்கப்படுகின்றது.