ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 22, 2014

மகரிஷிகளின் ஆற்றல் மிக்க சக்தியைப் பெறும் வழியை உணர்த்தினார் குருநாதர் - ஞானகுரு

நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் இயற்கையின் பேருண்மைகள் பலவற்றை வானஇயல், புவிஇயல், உயிரியல் தத்துவப்படி எமக்கு (ஞானகுருவிற்கு) உணர்த்தியபின்,
இதையெல்லாம் நீ காணுவது எப்போது?
இதை நீ எப்போது காணப்போகின்றாய்?
எதை நீ அடையப் போகின்றாய், என்ற
இப்படி வினாக்களை எழுப்பிக் கொண்டே, சொல்லிக்கொண்டே வந்தார் குருநாதர்.

இதை, ஒவ்வொன்றும் குருநாதர் சொல்லிக்கொண்டு வரப்படும் பொழுது, இதையெல்லாம் நான் என்றைக்குப் பார்க்கப் போகின்றேன்? நான் கடும் தவம் இருக்க முடியாதே என்றேன்.
இதையெல்லாம் நான் பார்ப்பதற்குத் திறன் இல்லை.
எனக்கு இந்த ஆயுள் பத்தாது என்று சொன்னேன்.

ஆயுள் பத்தாது என்ற நிலைக்கு நீ சொல்ல வேண்டியதில்லை, நான் அல்லவா சொல்ல வேண்டும் என்று திருப்பித் திருப்பி சொல்லிக் கொண்டு வந்தார் குருநாதர்..

ஒருவர் திட்டினால் மட்டும், நீ கூர்ந்து கவனித்து, இருடா.., நான் பார்க்கின்றேன் என்று சண்டைக்குப் போகத் தெரிகின்றது.

திட்டியவனை நீ நினைக்கும்போதெல்லாம் உன் உடல் எப்படிப் பதறுகின்றது?

அதே மாதிரி நான் உபதேசிப்பதை நீ கேட்டுக்கொண்டே வா.
நீ மகரிஷிகளின் அருள்சக்தி பெறவேண்டும் என்று எண்ணிக்கொண்டே வா.
அந்த சக்தி உனக்குள் ஆழமாகப் பதியும்.

அதை நீ திருப்பி எண்ணும்போது, உனக்குள் எப்படி சக்தி கிடைக்கிறது என்பதை மட்டும் நீ தட்டாது கேட்டுக் கொண்டே வா என்று இதைச் சொன்னார்.

இதைத்தான், கடவுளின் அவதாரம் பத்து என்ற நிலைகளைச் சொல்லி, அந்த கடவுளின் அவதாரம் என்றால், இவர்கள் சொல்கிற மாதிரி கடவுள் எத்தனையோ அவதாரங்கள் எடுத்தார் என்ற நிலையைச் சொல்வதற்கு பதில்,
நமது உயிரைக் கடவுளாக வைத்து
நாம் புழுவிலிருந்து அவதார நிலைகள் பெற்று
இந்த உணர்வனைத்தையும் ஒளியாக மாற்றி
இந்த உயிர்கல்கியாக
எப்படிச் சென்றடைந்து என்று தெளிவாகச் சொன்னார்.