ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 21, 2014

காற்றில் கலந்துள்ள மனித உயிராத்மாக்களின் நிலை

மலைகளையும், காடுகளையும் சமவெளிகளையும் எம்மைப் (ஞானகுரு) பார்க்கச் சொன்னார் ஈஸ்வராய குருதேவர். திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே இருந்தேன்.

அப்பொழுது, இளம் கருப்பு அடர்த்திக்கொப்ப இலேசான ஒளி பிரகாசமான ஒளி, இவ்வாறு பல வகையான வண்ணங்களில் சிறு புள்ளிகளாகத் தெரிந்தன.

அதன் விவரங்களை விளக்கி உபதேசித்துக் கொண்டிருந்தார் குருநாதர். “மின்னல் பாயும் பொழுது, கண்களை மூடிவிடாதே!” என்றார்.

எனக்கு பயம் வந்துவிட்டது. கண்களை மூடவில்லையென்றால், பார்வை இழந்துவிட்டால் என்ன செய்வது? என்று கேட்டேன்.

அவ்வளவுதான், பைத்தியம் பிடித்தவர் போன்று எனக்குப் புரியாத பாஷையில் பேசிவிட்டு, பிறகு என் உணர்வுகளில் புரியும்படி உணர்த்தினார்

நான் சொன்னதைச் செய்கிறேன் என்றாய், இப்பொழுது ஏன் தயக்கம்? என்று கேட்டுவிட்டு,
“நீயாகவா பார்க்கிறாய்?
நான் அல்லவா பார்க்கச் சொல்லுகிறேன்” என்றார்.

சிறிது நேரம், சமவெளியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது, இந்த மனிதர்களின் உடல்களிலிருந்து, பிரிந்து வந்த உயிராத்மாக்கள்தான், சிறு சிறு புள்ளிகளாகத் தெரிவது என்று சொல்லி உணர்த்தினார்.

சில புள்ளிகள் ஒளியாகவும், பல வண்ணங்கள் கொண்ட புள்ளிகளும் அதே சமயத்தில் சில ஒளியான புள்ளிகளும் தெரிந்தது.

சில கூடுவிட்டுக் கூடு பாய்ந்து, பல செயல்களைச் செய்து வந்து கடைசியில் கூடுவிட்டுக் கூடு பாயும் சக்தி இழந்த உயிராத்மாக்கள் கரும் புள்ளிகளாக இருக்கின்றன என்றார்.

பல மந்திர தந்திரங்களைச் செய்து காட்டி வந்த உயிராத்மாக்களும், கரும் புள்ளியாக இருக்கின்றன. இவை அனைத்திலும், உயிரின் ஈர்ப்பில் ஆத்மாவாக உள்ள அணுசிசுக்கள் தெரிகின்றன.

இன்னும் சிலர் ஒன்றையும் எதிர்பார்ப்பில்லாது, பல துன்பங்கள் வந்தாலும் அதைத் தாங்கிக் கொண்டு, நல்ல செயல்களைச் செய்து வந்து, தெய்வமே துணை என்ற நிலையிலும் வளர்ந்து வந்த உயிராத்மாக்கள் இளம் சிவப்புப் புள்ளியாகத் தெரிந்தன என்று சொல்லிவிட்டு, சமவெளியைப் பார்த்துக் கொண்டே இருக்கச் சொன்னார்.

அச்சமயம், எதிர்பாராது, பளீர் பளீர் என்று மின்னல் பாய்ந்து கொண்டேயிருந்தது,

அந்த மின்னலில் சிக்கிய, பல வண்ணம் கொண்ட உயிராத்மாக்களின் அணுசிசுக்கள் செயல் இழந்து விட்டன.

ஆனால், உயிர்கள் அழிவதில்லை.

ஒளியாக இருந்த உயிராத்மாக்கள்,
மின்னலின் கதிர்வீச்சில் சிக்கினாலும்
எவ்விதப் பாதிப்புமில்லாது மின்னிக் கொண்டேயிருந்தன.

இத்தகைய ஒளியான உயிராத்மாக்கள் மறு பிறப்பிற்கு வராமல், பூமியின் ஈர்ப்பில் சுழன்று கொண்டே, தங்களை வளர்த்துக் கொள்ளும் ஆற்றல் பெற்றவைகளாகின்றன. காலத்தால், விண்ணைச் சென்றடைந்து விடுகின்றன.

இத்தகைய ஒளியான உயிராத்மாக்களிலிருந்து வெளிப்படும் ஒளி அணுக்கள் சந்தர்ப்பவசத்தால் பிறிதொரு மனிதனின் உணர்வின் ஈர்ப்பில் சேர்ந்தால், அந்த மனிதனின் ஆற்றல் பெருகி, ஞானத்தின் வழித்தொடரில் தன்னை அறியக்கூடிய மெய்ஞானியாகின்றான்.

இவ்வாறு நிகழ்வது, எங்கோ ஒருவருக்குத்தான் என்று உணர்த்திவிட்டு மின்னலில் செயலிழந்த உயிராத்மாக்களைப் பற்றிச் சொல்லத் தொடங்கினார் குருநாதர்.

மின்னலின் தாக்குதலுக்குள்ளான
உயிராத்மாவின் அணுசிசுக்களின் செயலிழந்த சத்துக்கள்
உயிரில் இணைந்த ஆத்மாவாக இருக்கின்றன.
அது மீண்டும், மனிதனாக உடல் பெறத் தகுதியற்றதாகிறது.

இத்தகைய உயிராத்மாக்கள் பூமியில் உள்ள தாவரங்கள் மீது படும் பொழுது, உயிரின் துடிப்பினால் செயலிழந்த ஆத்மாக்கள், மீண்டும் அணுக்கருக்களாக உருவாகி புதுவிதமான பூச்சிகளாக உருப்பெறுகின்றது என்பதை உணர்த்தினார்.