ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 1, 2014

நீயே தான் நான்...! நானே தான் நீ...! - அவனுக்குள் ஒன்றி அவனாகவே ஆகவேண்டும் ...!

நாம் உருவாக்கும் நிலைகள் எல்லாம் ஒன்றி நமது உயிர் ஈசனாகின்றது.

அவன் அமைத்த கோட்டை நம்  உடல். இந்தக் கோட்டையை நாம் எப்போதுமே புனிதப்படுத்த வேண்டும்.
அவனுக்குள் ஒன்றி
அவனாகவே ஆகவேண்டும்.

என்னுள்ளே என்றும் நீ இருந்துவிடு ஈஸ்வரா என்று நாம் சொல்லும் இந்த உணர்வுகள், ஒலி ஒளி என்ற நிலையில் உயிர் என்று ஆகின்றது.

நீயே தான் நான், நானே தான் நீ என்று உயிரோடு ஒன்றி ஒளியென்ற நிலை நாம் என்றும் பெற்றிடுவோம்.

இந்த உலகில் எது, எப்படி இருந்தாலும்  அந்த அகஸ்தியன் உணர்வு ஒன்றுதான், இந்த உலகை இருளில் இருந்து மீண்டும் மீட்டும்.  இது நிச்சயம்.
அதனால் தான், தெற்கே தோன்றிய நிலைகளில் சில முக்கிய தத்துவம் உண்டு. 
பல அறிஞர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
நமது குருதேவருக்கும் அதில் பங்கு உண்டு.

இருந்தாலும் இதனை எடுத்து பெருமைப்பட வேண்டியதில்லை. உங்கள் உணர்வில் நீங்கள் அறிந்து கொள்ளக் கூடிய நிலையை வளர்த்துக் கொள்ளுங்கள்.

இத்தகைய ஞானத்தின் நிலைகளில் தனக்குள் பெருக்கி கூடுவிட்டு கூடு பாய்ந்தார் நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

தெளிந்த மனம் கொண்டு கோடி என்னும் கடைசி நிலையான ஈஸ்வரா என்ற உணர்வின் தன்மையைப் பெற்றவர். இந்த உபதேசிக்கும் நிலையில் அந்த அருளைப் பாய்ச்சினார்.

அவரின் அருள் துணை கொண்டு அந்த பேரருளைப் பெற்றோம். அந்தப் பேரருளைக் கொண்டு, நாம் அனைவரும் அந்தப் பேரொளியைபெறவேண்டும், பெறுவோம். 

எமது அருள், குரு அருளால் கிடைத்தது. குரு அருள் பேரருளைக் கவர்ந்து அவர் உணர்வு என்னை பக்குவப்படுத்தியது போல், உங்களைப் பக்குவப்படுத்துகின்றேன்.

இதில், எவர் ஒருவர் தொடர்ந்து வருகின்றாரோ அவர் இவ்வாழ்க்கையைச் சீர்படுத்தி வாழவும், அடுத்து, சீராக என்றும் பிறவியில்லா நிலைகளை அடையவும்  இது உதவுகின்றது.

குறுகிய காலமே இருக்கும்
உடலுக்கு வலுவைச் சேர்ப்பதைக் காட்டிலும்,
உயிருக்கு, அருள் ஒளி என்ற வலுவை உருவாக்குதல் வேண்டும்.  

இதுதான் வாழ்வின் கடைசி எல்லை.

ஒளியின் உணர்வாக உருவாக்கப்பட்டது உயிர். ஒளியின் உணர்வாக நம் அணுக்களை ஆறாவது அறிவின் துணை கொண்டு உருவாக்கக் கற்றுக் கொள்வதுதான் பிரம்மாவைச் சிறை பிடித்தான் என்பது.

உயிர் நுகர்ந்ததை உருவாக்குகின்றது. அதே சமயத்தில், அந்த உணர்வுகள் நமக்குள் அணுவாகும் பொழுது, உயிரைப் போன்றே, உணர்வின் தன்மை ஆக்கப்படும் பொழுது, நல்ல ஒளியின் உணர்வை உருவாக்குகின்றது.

இவையனைத்தையும் ஒன்றாக சேர்த்தால் ஒளியின் தன்மை கூடுகின்றது.

சற்றுச் சிந்தனை செய்து பாருங்கள்.

வாழ்க்கையில் எல்லாவற்றையும் கடந்து இது தவறு இது கெட்டது, என்று உணர்வினை நுகர்ந்து, நுகர்ந்து, இதனைக் கலந்து கலந்து இந்த உடலினை உருவாக்கியது நம் உயிர்வனே தான் உருவாக்கினான்.

ஈசனாக இருந்து, கடவுள் என்ற நிலையில் உள் நின்று இயக்கிக் கொண்டு உள்ளான்.

நாம் எதனை நுகர்ந்தோமோ, அவை நம் உள்நின்று அதனின் துணை கொண்டு அங்கே இயக்குகின்றது. அவனல்லாது உணர்வுகள் இயங்குவதில்லை. அவன்தான் உருவாக்குகின்றான். அவனின்றி ஒரு அணுவும் அசையாது.

ஆகவே, நம் உயிருடன் ஒன்றி உணர்வின் தன்மையை நாம் ஒளியாக்க வேண்டும்.