ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 15, 2014

மூலங்களை அறியும் ஆற்றல் - ஞானகுரு

அருள் ஞான உணர்வுகளை நீங்கள் படிக்கும் பொழுதும், கேட்கும் பொழுதும் ஊழ்வினை என்ற நிலையில் பதிவாகின்றது. யாம் சொல்லிக் கொண்டு வருவதனைத்தையும், கூர்ந்து கவனித்தீர்கள் என்றால், உங்களுடைய கருவிழி ருக்மணி கவர்ந்த உணர்வலைகளை உங்களுடைய செல்களில் பதிவாக்குகின்றது.

ஒருவரை எமது அருள் ஞான புத்தகங்களைப் படிக்கச் சொல்லி, அவரைத் தாம் படித்ததைத் திரும்பச்சொல்லும்படிக் கேட்டால்அவருக்குச் சொல்லத்தெரியாது. ஏனென்றால், புத்தகங்களில் கருத்துகள் அடுக்கடுக்காக வரும்.

தியானத்தில் இருப்பவர்கள் திரும்பச் சொல்கின்றார்கள் என்றால், அவர்கள் தியானத்தில் இருப்பவர்களாக மட்டுமே இருக்க முடியும். 

யாம் தந்தருளிய தியான முறையினைக் கடைப்பிடித்து வருபவர்கள், தாங்கள் படித்த கருத்தினுடைய மூலங்களை அடுக்கடுக்காகச் சொல்ல ஆரம்பிப்பார்கள்.

காரணம், எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் - பதிவான உணர்வுகள் எலக்ட்ரான் என்ற முறைப்படி, அது காற்றில் இருப்பதை எடுத்து நம்முடைய இயக்கச் சக்தியாக்ககூடிய ஞானம் நமக்கு வருகின்றது.

ஞானத்தின் தன்மை வந்தால், நமக்குள் தீமை புகாது வலிமை கிடைக்கும். நான் காட்டிற்குச் சென்று ஞானத்தைப் பெறுவேன், பெறவேண்டும் என்று நினைத்தால்  முடியாது.

ஒரு விஞ்ஞானி, புதிய ஒரு இயந்திரத்தைக் கண்டுபிடிக்கும் பணியில் இருக்கும் பொழுது பல சங்கடங்களை அனுபவிக்கலாம்.

அப்படி அவர் பல சிரமங்களை அனுபவித்துக் கண்டுபிடித்த இயந்திரத்தை நாம் சரியானபடி ஏற்றுக் கோண்டோமானால் அந்த விஞ்ஞான அறிவு நமக்கு பயன்படும்.

விஞ்ஞான அறிவு கொண்டு கம்யூட்டரை செய்துகொடுக்கின்றார்கள். சிரமப்பட்டுத்தான் அதைச் செய்து கொடுக்கிறார்கள். ஆனால்,  கம்ப்யூட்டரை விளையாட்டிற்குத் தட்டிக்கொண்டிருந்தால் பயன் ஒன்றும் இருக்காது.

அதைப் போன்று, யாம் உபதேசிக்கும் அருள் உணர்வுகளை, கூர்மையாக உற்று நோக்கிப் பதிவு செய்து கொண்டபின், 
அந்த உபதேசித்த உணர்வுகளை நினைவுபடுத்தி,
துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருளை
நீங்கள்  எளிதில் நுகரமுடியும். 

உங்கள் உயிர் வழி துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருளை நுகர்ந்து,
உங்கள் உடலில் உள்ள அனைத்து அணுக்களுக்கும்
உணவாகக் கொடுக்க முடியும்.

நாம் அனைவரும், இதை ஒரு பழக்கத்திற்குக் கொண்டு வர வேண்டும். 

அவ்வாறு, கொண்டு வந்துவிட்டோம் என்றால், நாம் எப்பொழுது வேண்டுமென்றாலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நமக்குள் சேர்ப்பிக்க முடியும். நமக்குள் தீமைகள் வராது தடுக்க முடியும். மெய் வழி வாழ முடியும்.

மெய்ஞானிகள் கண்ட பேருண்மைகளை நாமும் கண்டுணர முடியும். மெய்ஞானிகளுடன் இணைந்து வேகா நிலை என்ற நிலையாக அழியா ஒளிச்சரீரம் நாம் அனைவரும் பெறமுடியும். எமது அருளாசிகள்.