ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 1, 2013

அணுக்களை வெப்பமாக்கி, இயங்கச் செய்யும் ஆற்றலே கடவுள்

1. ணுக்களை வெப்பமாக்கி இயங்கச் செய்யும் ஆற்றலே கடவுள்
ஆதியில் ஆவியாக இருந்த ஆற்றல்கள் ஆதிசக்தி.
அந்த ஆற்றல்கள் மேகங்களாக மாறி,
மேகங்கள் தூசிகளாக மாறி,
தூசுகள் ஈர்ப்புக்காந்த நுண் அணுக்களாக மாறி,
ஈர்ப்புக்காந்த நுண் அணுக்கள் அதனதன் ஈர்ப்பில்,
பற்பல குணங்கள் கொண்ட ஆற்றல்களைச் சேர்த்துக் கொண்டு,
பற்பல குணங்களின் உணர்வலைகளாக மாறி,
ஒன்றுடன் ஒன்று கலந்ததால் நீராக மாறி,
நீர் ஆவியாக மாறி,
இவ்வாறே ஒன்றுடன் ஒன்று கலந்ததால், வெப்பமாகும் காந்த நுண் அணுக்களும்,
ஒன்றுடன் ஒன்று கலந்ததால் அமிலமாகக் கரைக்கும் அணுக்களும்,
ஈர்க்கும் காந்த அணுக்களும்,
பொறிகளை உருவாக்கும் உணர்வலைகளும்,
கண்களுக்குப் புலப்படாத நிலையில், அணுக்களாக, அலை அலைகளாக, பேரண்டத்தில் உருப்பெற்றுப் பரவிய பேராற்றல்கள், பற்பல குணங்களின் நுண் அணுக்களாக உருப்பெறச் செய்யக் காரணமாக இருந்த நிகழ்ச்சிகளே, “பரப்பிரம்மம்”.

பற்பல உணர்வலைகள் குவிந்து, ஒன்று சேர்ந்து, ஒரு பொருளாக உருப்பெறச் செய்யும் நிகழ்ச்சி, “பிரம்மம்”.
உருப்பெற்ற பொருள் “சிவம்”.
தன் எடையின் கனத்தால், பேரண்டத்தில் நகர்ந்து சுழலச் செய்யும் ஆற்றல் “சக்தி”.

இவ்வாறு, சிவசக்தியாக இயங்கி, சுழலும் பொழுது வெப்பமாகி,
வெப்ப அலைகள் பொருளுக்குள் இருக்கும் உணர்வலைகளில்,
அணுக்களை வெப்பமாக்கி,
உணர்வலைகளை இயங்கச் செய்யும் ஆற்றலே கடவுள்.
2. சர்வேஸ்வரா, சர்வேஸ்வரி
பேரண்டத்தில், ஒரு சிறு பொருளாக உருப் பெற்று, அந்தப் பொருள் சிவசக்தியாகச் சுழன்று, இயங்கிக் கொண்டு, பேரண்டத்தில் உள்ள பற்பல குணங்களின் உணர்வலைகள், காந்த அணுக்கள், பொறிகளை எழுப்பும் அணுக்கள், ஒன்றுடன் ஒன்று சேர்ந்தால் அமிலமாக்கும் அணுக்கள், தூசுக்கள், துகள்களையும் தனக்குள் எடுத்துக் கொண்டு வளரும் நிலை பெற்றது.

மேற்கூறியவாறு, பல கோடிக் கோடி ஆண்டுகள் வளர்ந்து, கோளாகி, நட்சத்திரமாகி, சூரியனாக முழுமை பெற்று, சூரியன் தனக்குள் வளர்ச்சி பெற்ற,
பேராற்றல் மிக்க கதிரியக்க ஆற்றல்களையும்,
வெப்ப அணுக்களையும், உயிரணுக்களையும்,
பற்பல தாது வர்க்கச் சத்துக்களையும், காந்த அணுக்களையும்
தூசுகளையும்., கடும் விஷத் துகள்களையும்,
பெரும் புயலாகப் பரவெளியில் உமிழ்ந்து,
பரவெளியில் பரவச் செய்கின்றது.

சூரியன் பரவெளியில் உமிழ்ந்ததில், சிறு பொருளாகி, அதன் வளர்ச்சியில் கோள்களாகி, கோள்கள் தன் வளர்ச்சியில் நட்சத்திரங்களாகின்றன. வளர்ந்து வரும் கோள்களும், சூரியனின் ஈர்ப்பு வட்டத்தில், சூரியனை வலம் வந்து கொண்டும், சூரியனின் அணைப்பில், வாழ்ந்து வளர்ந்து கொண்டும் இருக்கின்றன.

சூரியனின் “ஈர்ப்பு வட்டம்”, ஓர் பிரபஞ்சம். இந்தப் பிரபஞ்சத்திற்குள் சூரியனை வலம் வரும் கோள்களும், நட்சத்திரங்களும், சந்திரனும் சேர்ந்து, ஓர் சூரியக் குடும்பமாகின்றது.

பிரபஞ்சத்திற்குள் இருக்கும் கோள்கள், சந்திரன், நட்சத்திரங்கள், உயிரணுக்கள், இவைகள் அனைத்தையும் சூரியன் தன் ஆற்றல்களால் பிரகாசிக்கச் செய்கின்றது. மேற்கூறியவாறு, பிரபஞ்சத்திற்குள் இருக்கும் அனைத்திற்கும்
உயிராக இருந்து, இயக்கும் சூரியனை, சர்வேஸ்வரா என்றும்,
இயங்கும் பொழுது ஏற்படும் சக்தி, சர்வேஸ்வரி என்றும், மகரிஷிகள் அழைக்கலாயினர்.
3. பரமேஸ்வரா, பரமேஸ்வரி
பிரபஞ்சத்தில் சூரியனை வலம் வரும் பூமி, பிரபஞ்சத்தில் மிதந்து, சுழன்று கொண்டிருக்கும் நிலையில், பிரபஞ்சத்தில் மிதந்து கொண்டிருக்கும் உயிரணுக்களையும், பற்பல உணர்வுகளின் சத்துக்களையும், தனக்குள் ஈர்த்து எடுத்துக் கொண்டு, தானும் வளர்ந்து கொண்டு, தனக்குள் தாவர இனங்களை வளரச் செய்கின்றது. தாவர இனங்கள், தனக்குள் வளர்த்துக் கொண்ட சத்துக்களைப் பூமியில் பரவச் செய்கின்றன.

இதைப் போன்றே, பூமியில் விளைந்த சர்வ சத்துக்களும், தனக்குள் வளர்த்துக் கொண்ட சத்துக்களை, பூமியில் பரவச் செய்கின்றன. பிரபஞ்சத்திலிருந்து, ஈர்த்து எடுத்துக் கொண்ட வெப்ப அலைகளும், மற்றும் பற்பல உணர்வலைகளும், பூமியில் பரவிப் படர்ந்திருக்கின்றன.

பூமி பிரபஞ்சத்திலிருந்து ஈர்த்துக் கொண்ட அணுக்கள் பூமியில் பரவியுள்ள தாவர இனங்களின் சத்துக்களையும், பற்பல உணர்வலைகளின் சத்துக்களையும் ஈர்த்து, உடல் கொண்டு வளர்கின்றன. அதாவது, கிருமியாக, புழுவாக, பறவையாக, மிருகமாக, இவ்வாறு மனிதன் வரை வளர்ச்சி பெற்று, வளர்ந்து கொண்டும், வாழ்ந்து கொண்டும் இருக்கின்றன.

பூமி பிரபஞ்சத்தில் ஓர் பரமாக இருப்பதால், பரமேஸ்வரா என்றும்,
பூமியில் அனைத்து பொருள்களையும்
இயங்கச் செய்து கொண்டிருக்கும் சக்தியை, பரமேஸ்வரி என்றும், மகரிஷிகள் அழைக்கலாயினர்.
4. பரமாத்மா
பூமிக்குள், காற்றுடன் கலந்திருக்கும் சர்வ உணர்வலைகளும், சத்துக்களும், பூமிக்கு ஆத்மாவாக இருக்கின்றது. அதாவது பூமி ஓர் பரம், பரத்துக்கு ஆத்மா பரமாத்மாவாக இருக்கின்றது.

பூமிக்குள் இருக்கும் அனைத்துப் பொருள்களும், தாவர இனங்களும், உயிரினங்களும் பரமாத்மாவிலிருந்தே, சத்துக்களை ஈர்த்து, வளர்த்து வாழுகின்றன.

இதைப் போன்றே, உயிரினங்கள் இறந்தாலும், உயிராத்மாக்கள் பரமாத்மாவில் கலக்கின்றன. தாவர இனங்களின் சத்துக்களும், பரமாத்மாவில் கலக்கின்றன.

சூரியனில், கோள்களில், நட்சத்திரங்களில் விளைந்த பேராற்றல்கள் பிரபஞ்சத்தில் பரவி வருவதில், சூரியனில் விளைந்த உயிரணுவாக உருப்பெறச் செய்யவல்ல நுண்ணணுவும், கார்த்திகை நட்சத்திரத்தில் விளைந்த கதிரியக்க நுண்ணணுவும், வியாழன் கோளில் விளைந்த சத்தும், செவ்வாய்க் கோளில் விளைந்த சத்தும், சந்தர்ப்பவசத்தால், இந்த நான்கும் ஒன்று சேர்ந்தால், ஓர் கருவாகி, துடிப்புள்ள உயிரணுவாகின்றது.

இவ்வாறே, சூரியனில் விளைந்த உயிரணுவாக உருப்பெறச் செய்யவல்ல நுண்ணணுவும், ஒவ்வொரு நட்சத்திரத்தில் விளைந்த கதிரியக்க நுண்ணணுவும், வியாழன் கோளில் விளைந்த சத்தும், ஒவ்வொரு கோளில் விளைந்த சத்தும், சந்தர்ப்பவசத்தால், இந்த நான்கு ஆற்றல்களும் ஒன்று சேர்ந்தால், ஓர் கருவாகி, துடிப்புள்ள உயிரணுவாகின்றது.
5. உயிரே கடவுள்
அதாவது, உயிரணுக்குள் வெப்பம் இருந்து கொண்டே இருக்கின்றது. சந்தர்ப்பவசத்தால், தாவர இனச் சத்துக்களில் இத்தகைய உயிரணு வீழ்ந்தால்,
அந்தத் தாவர இனச் சத்தை, உயிரணு ஈர்த்து,
உயிரின் துடிப்பால் ஏற்படும் வெப்பம்,
தாவர இனத்தின் சத்திற்குள் மறைந்திருக்கும்,
வெப்ப அணுக்களை இயக்கி,
புழுவாக உருப்பெறச் செய்கின்றது.

அதாவது, உயிரணுவின் துடிப்பினால்,
உயிரணுவிற்குள் ஏற்படும் வெப்பம்
புழுவின் உடலுக்குள் மறைந்திருக்கும் வெப்ப அணுக்களை, இயக்கி,
உடலை வாழ, வளரச் செய்யும்,
(உயிரணுவிற்குள்) வெப்பமாக இருந்து,
உயிராக இயங்கும், உயிரே கடவுள்.

புழுவாகி, உடல் பெற்று வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில்
புழு உட்கொண்ட இரையும்,
சுவாசித்த உணர்வுகளும்,
உடலில் நுண் அணுக்களாக விளைந்து,
விளைந்த நுண் அணுக்கள்,
புழுவின் உயிரின் ஈர்ப்பில் ஆத்மாவாகச் சேர்ந்து,
உயிராத்மாவாகி,
புழு இறந்தபின், புழுவின் உயிராத்மா பரமாத்மாவில் கலக்கின்றது.
பரமாத்மாவில் கலந்துள்ள, புழுவின் உயிரான்மா,
மறு பிறவியில் பூச்சியாகப் பிறக்கின்றது.

இவ்வாறு ஒவ்வொரு உடலிலும், உட்கொண்ட உணவுகளுக்கும், பற்பல குணங்களின் உணர்வுகளுக்கொப்ப, பல்லியாக, பாம்பாக, பறவையாக, மிருகமாக, இவ்வாறு மனிதன் வரை உருப்பெறச் செய்த
“உயிரே கடவுள்”. எண்ணும் எண்ணமே இறைவன்.
உணர்வுகளின் செயல்களே தெய்வங்கள்.