ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 13, 2012

உயிரே கடவுள் – மெய்ஞான மாத இதழ் -- 1999



உயிரே கடவுள்  மெய்ஞான மாத இதழ்
(மார்ச் 1999)
ஒரு நோயாளி, தன் நோய் தீர வேண்டும் என்றால், மருத்துவர் தரும் மருந்தைக் கட்டாயமாகச் சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும். இதே போன்று,  நம்முள் அறியாது சேர்ந்த நஞ்சான உணர்வுக்ளை நீக்க வேண்டுமென்றால்,  நமக்குள் கட்டாயப்படுத்தித்தான் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெருகச் செய்ய வேண்டும்.

நமது குருநாதர், தம் உணர்வின் தன்மை கொண்டு, அகண்ட அண்டத்தையும், அகஸ்தியர் கண்டுணர்ந்த உணர்வையும் அறிந்துணர்ந்தார். தமக்குள் பெற்ற பேரருளின் உணர்வுகளை,  
எமக்குள் யாம் எவ்வாறு பெறவேண்டும்
எனும் வழிமுறைகளைக் காண்பித்து,
உணர்வின் உணர்ச்சிகளை எமக்குள் தூண்டச் செய்து,
செவி வழி ஓதி, உணர்வுகளை அறியும்படி
நுகர்ந்தறியும் ஆற்றலைக் கொடுத்தார்.
நுகரும்போது, உடல் உணர்ச்சி கொண்டு அறிவதும்,
உணர்வின் தன்மை கூறும்போது,  காட்சியாகத் தெரிவதும்
போன்ற நிலைகள் கொண்டு, எம்மை அறியச் செய்தார், அறிந்தோம்.

அதனின் உணர்வுகளை, உங்களுக்குள்ளும் யாம் பதிவாக்குகின்றோம். இதனை உங்களுக்குள் ஏங்கிப் பெறும் நிலை வரும்பொழுது, அதற்குத் தக்கவாறு, உங்களில் உருப்பெறும் தன்மை வருகின்றது. உணர்வுகளை உங்களில் குவிக்கப்படும் பொழுது, அது காட்சியாகவும் உங்களுக்குத் தெரியும். கண் திறந்திருந்தாலும் சரி,  கண் மூடியிருந்தாலும் சரி, உணர்வின் அலைகளாக மாறும் தன்மை வரும்.

தெளிந்த மனம் கொண்டு கண்களை மூடித் தியானித்தால், உணர்வின் தன்மை புற நிலைகளை அடக்கி, அருள் ஒளி என்ற உணர்வின் தன்மையைப் பெருக்கி, நமக்குள் உணர்வின் தன்மைகள் காட்சியாகத் தெரியும். ஆகவே,  நீங்களும் இதைப் பெறவேண்டும்.

குருநாதர் தம்முள் பெற்றார். தாம் பெற்றதை, யாம் பெறும் நிலையாக, எமக்கு உபதேசித்தார். அவர் தந்தருளிய அருள் உணர்வுகளை, எமக்குள் பதிவாக்கினோம். பதிவின் நிலைகள் கொண்டு, அறிவாக இயக்கினோம். அருள் உணர்வின் ஆற்றலை, எமக்குள் உருவாக்கினோம். இவையனைத்தும், நீங்கள் பெறவேண்டும் என்று உங்களிடத்தில் பதிவாக்குகின்றோம்.

ஏனென்றால்,  ஒரு வித்து ஒருவருக்குப் பசி தீர்க்காது. நீங்கள் பெற்ற அருள் உணர்வின் சத்தை மற்றவர்களிடத்திலும் படரச் செய்யும் உணர்வை,  நீங்கள் உங்களிடத்தில் வளர்த்துக் கொண்டால், நாம் அனைவரும் ஒன்றென இணைந்துவிடலாம்.

சிறு துளி என்ற நிலை வரப்படும் பொழுது, அதன் தன்மை புவியில் தங்கி விடுகின்றது. சிறு துளிகள் இணைந்து, பெருவெள்ளமாக வரப்படும் பொழுது, பலவற்றிற்கும் பயன்படுவது போன்று,
நாம் சிறுதுளியாக இருப்பினும்,
பலரிடத்தில் அருளுணர்வுகளை வளர்த்து
அனைவரும் ஒன்றென இணைக்கப்படும் பொழுது,
அரும்பெரும் சக்திகளை நாமும் பெறலாம்,
வரும் தீமைகள் அனைத்தையும், நீக்கவும் செய்யலாம்.
அருள் ஒளியின் உணர்வுகளை, நமக்குள் பெருக்கவும் முடியும்.
     
இவ்வருள் ஞானவழி கொண்டு, பலரிடத்திலும், நஞ்சினை வென்ற அருள் மகரிஷிகளின் அருள் உணர்வுகளைப் பதியச் செய்து, அனைவரையும் கூட்டமைப்பாக ஒன்றிணைத்து அருள் உணர்வின் அலைகளை பரவச் செய்யும் அன்பர்கள்,  தம் இருளை அகற்றி, மெய்பொருள் காண்பதற்கும், அவ்வன்பர்களின் உடல் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர்ந்து, அவர்களுள் அறியாது சேர்ந்த நஞ்சுகள் அகன்று, அறியாது சேர்ந்த இருள்கள் நீங்கி, அருள் ஒளியின் உணர்வுகள் பெருகவும், பெருவீடு பெருநிலை பெறும் நிலையாக, பேரின்பப் பெரு வாழ்வாக வாழ்ந்து வளர்ந்திடவும், எமது அருள் ஆசிகள்.



(ஏப்ரல் 1999)
ஆறறிவு கொண்ட மனிதரான நாம், பலவிதமான உடல் உறுப்புகளைக் கொண்ட உயிரினங்களை உருவாக்குகின்றோம். விஞ்ஞான அறிவால், இதை நாம் அறிந்துகொண்டோம். இப்படி அறிந்துகொண்ட உணர்விலிருந்து, நாம் என்ன செய்யவேண்டும்?  நமக்குள் எப்படிச் சமைத்தல் வேண்டும்?

ஒருவர் நமக்குத் தீமை செய்தார், என்று அறிகின்றோம். ஆனால், அந்தத் தீமையின் உணர்வு, நமக்குள் வளராது தடைப்படுத்துதல் வேண்டும்.

அவ்வாறு தடைப்படுத்த வேண்டுமென்றால், ஈஸ்வரா என்று உயிரை எண்ணி, துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாம் பெறவேண்டும் என்று எண்ணி ஏங்கி, தீய உணர்வினை நமக்குள் வராது தடைப்படுத்தி, அருள் உணர்வினைச் சேர்க்கப்படும் பொழுது, தீய உணர்வுகளின் வீரியத்தைக் குறைக்கின்றது.

உதாரணமாக, மிளகாய் தனித்துக் காரமாகத்தான் இருக்கும். ஆனால், மற்ற பொருள்களுடன் இணைக்கப்படும் பொழுது, சுவையாக மாறுகின்றது.

ஒருவர் தவறு செய்கிறார் என்று நாம் அறியும் பொழுது,
நாம் அருள் ஒளியின் உணர்வினை நுகர்ந்து,
அவருடைய அறியாமை நீங்கவேண்டும்,
அருள்ஞானம் அவரில் பெறவேண்டும்,
அருள்சக்தி அவர் பெறவேண்டும்,
தெளிந்த மனம் அவர் பெறவேண்டும் என்று எண்ண வேண்டும். 

இதனால், அவருடைய உணர்வுகள் நமக்குள் வந்தாலும், அவரை இயக்கும் தீய உணர்வுகள், நமக்குள் விளையாது.

அவர் தவறு செய்கிறார் என்று நாம் அறிந்தாலும், அவர் வேகத்துடிப்பாக இருக்கும் பொழுது, நன்மை தரும் சொல்களை நாம் சொன்னால்,  அவர் கேட்கமாட்டார்.

சில நிமிடங்களுக்குப் பிறகு, அதாவது சாந்தமாக இருக்கப்படும் பொழுது, நீங்கள் இப்படிச் செய்தால், உங்களுக்கு நன்மை என்று நாம் சொல்லும் பொழுது, அவர் ஏற்றுக் கொள்ளும் பருவம் வருகின்றது.  அப்போது, நாம் சொல்லும் சொல்லின் உணர்வுகள்,  அவரிடத்தில் உருவாகும் தன்மை வருகின்றது.

எண்ணெய் நன்றாக கொதிக்கும் முன், வடை தட்டி, எண்ணெயில் போட்டால் என்னவாகும்? வடை சீராக வேகாது. எண்ணெயை அதிகமாக விழுங்கும். பின், அது சூடேறச் சூடேற, வடையில் சுவையும் மாறிவிடும். ஆனால், எண்ணெய் அதிகமாகக் கொதித்து, அதில் வடையைத் தட்டிப் போட்டால், வடையின் மேல்பாகம் கருகிவிடும். உள் பாகம் மாவாக இருக்கும்.

சமப்படுத்தும், பக்குவப்படுத்தும் உணர்வின் தன்மை கொண்டுதான், பதார்த்தங்களை உருவாக்கவேண்டும். இதைப் போன்றுதான், நமது வாழ்க்கையில், குழந்தை ஒன்று தவறு செய்யும் பொழுது, தருணம் பார்த்துத்தான் நல் உணர்வின் தன்மையைக் குழந்தைக்குச் சொல்ல வேண்டும்.

ஏற்றுக் கொள்ளும் பருவம் வரும் பொழுதுதான், நல் உணர்வுகளை ஊட்டவேண்டும். ஏற்றுக் கொள்ளும் பருவம் இல்லை என்றால், சொல்லிய நல் உணர்வுகள் அங்கே விளையாது. நல் உணர்வின் தன்மை விளையும் பருவம், அங்கே இழக்கப்படுகின்றது. ஆனால், தவறைச் சுட்டிக் காட்டி 
நல் உணர்வை ஊட்டத் தவறினால் 
வெறுப்பின் உணர்வே வரும். 
வெறுப்பின் நிலை வளர்ந்துவிட்டால், 
ஏற்றுக் கொள்ளும் பண்பே வராது. 

ஆகவே, நாம் இதுபோன்ற நிலைகளை அறிந்து, எதனை, எவ்வாறு, எதன் வழியில்,  நாம் உருவாக்கவேண்டும்?  என்ற நிலையில் நாம் பக்குவப்படுத்தும் நிலையில் சமப்படுத்துதல் வேண்டும்.
ஒவ்வொரு நிமிடமும் மனதைச் சமப்படுத்தினால்,
பக்குவப்படுத்தும் பண்பும் வருகின்றது.

அருள் ஞானத்தின் உணர்வுகள் நமக்குள் விளைந்தால்,
நம் வாழ்க்கையில் வரும் விஷத் தன்மைகளை,
கார உணர்ச்சிகளை, அடக்கும் தன்மை வருகின்றது.
இப்படி அடக்கும் தன்மை வந்தால்,
சிந்திக்கும் தன்மை வருகின்றது.
சிந்திக்கும் தன்மை வந்தால்,
நம் செயல் சீராக அமைய,  இது உதவும்.

நாம், நமது வாழ்க்கையில், துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியின் உணர்வைப் உருவாக்கி, பேரின்பப் பெருவாழ்க்கை என்ற நிலையை, நமக்குள் உருவாக்குதல் வேண்டும். 

இதுதான்  தைப் பொங்கல் என்பது. நமக்குள் அருள் உணர்வை பொங்கச் செய்ய வேண்டும். 

சூரியன் இந்த பிரபஞ்சத்தைப் பொங்கச் செய்கின்றது. அதாவது, இந்த பிரபஞ்சத்தில், ஒவ்வொன்றின் இயக்கத்திற்கு என்னென்னெ தேவையோ, அவைகளையெல்லாம் கொடுக்கின்றது.

சூரியன், இந்தப் பிரபஞ்சத்தை ஒளியாக்குகின்றது. இதைப் போன்று, மனிதர்கள் தம்முள் அருள் ஞானத்தைச் செலுத்தி,  தம்முள் உள்ள இருளின் தன்மையை நீக்குதல் வேண்டும்.

நமது உயிர், மற்ற அணுக்களின் தன்மையை, அதன் அறிவாக இயங்கச் செய்கின்றது. துருவ நட்சத்திரம், இருளை வென்று, ஒளியின் உணர்வாக உருவானது.

இந்த உணர்வின் தன்மையை நமக்குள் செலுத்தி, நம் உடலில் தெரிந்தோ, தெரியாதோ சில அணுக்களின் தன்மை உருவானால், அந்த அணுக்கள் வீரிய உணர்வு பெறவேண்டுமென்று எண்ணத்தைச் செலுத்தினால் அது வீரியத் தன்மை பெறும்.

மனிதர்கள் நாம் விஞ்ஞான அறிவு கொண்டு, மருந்துகளைத் தயாரித்து, நம் உடலில் செலுத்தி, இரத்த நாளங்களில் கலக்கச் செய்து, மற்ற பாகங்களில் இணைத்து, நல்ல அணுக்களை உருவாக்குகின்றோம்.

இது போன்றுதான், நாம் நுகரும் உணர்வுகள் உயிரில் மோதுகின்றது. நமது சிரசுபாகம்  ஈஸ்வரலோகம்.

உயிர், உயர்ந்த குணத்தை உருவாக்கி, அணுவின் கருவாக நமது இரத்த நாளங்களில் சேர்க்கின்றது.  இந்திரலோகமாக  மாறுகின்றது.

இதனின் உணர்வின் தன்மை இரத்த நாளங்களில் கலந்து, உடல் உறுப்புகளுடன் இணைக்கப்படும் பொழுது,  பிரம்மலோகமாக மாறுகின்றது.  எக்குணத்தின் தன்மை பெற்றோமோ, அந்த உணர்வின் இயக்கமாக நம்முள் இயக்கத் தொடங்கிவிடுகின்றது.

ஆகவே, அருள்ஞானிகள் காண்பித்த அருள்வழியில், தாம் தமது வாழ்க்கையில், தெளிந்த மனதையும், உயர்ந்த உணர்வுகளையும் தமக்குள் உருவாக்கி, பேரின்பப் பெருவாழ்வாக வாழவேண்டும் என்ற எண்ணத்துடன், அருள் ஞானிகளின் உணர்வுகளை தம்முள் பெருக்கும் அன்பர்கள் அனைவரும், தம்முள் அறியாது சேர்த்த இருளை அகற்றி, அருள் ஒளியின் உணர்வுகளைத் தம்முள் சேர்த்து,  தீமைகளை அடக்கும் நிலையாக, பேரின்பப் பெருவாழ்வாக வாழ்ந்து வளர்ந்திட, எமது அருள் ஆசிகள்.

IMG_5551.JPG

உதாரணமாக, ஒருவர் சாக்கடையில் விழுந்துவிட்டால், அவரை அங்கேயிருந்து மீட்க நினைக்கின்றோம். அவரைk கை கொடுத்துத் தூக்குகின்றோம். அவரும் நம்மைக் கட்டித் தாவி மேலே வருகின்றார். இதனால், நம் மீதும் அசுத்தம் ஆகிவிடுகின்றது. உடனே, அசுத்தத்தை நீரால் நீக்குகின்றோம். இது புறத்தால் நிகழ்வது. ஆனால்,  பிறிதொருவரின் வேதனையின் உணர்வை நாம் நுகரும் பொழுது, நம் அகத்திற்குள் வந்த, அந்த அசுத்தத்தை நீக்க வேண்டுமல்லவா?

யாம் அருள் வாக்கினை வழங்குகின்றோம். எம்மை நீங்கள் பார்க்கின்றீர்கள். யாம் பேசும் உணர்வுகளை நீங்கள் நுகர்ந்தபின், அது உங்களுடைய உயிரினில்பட்டு, இதனின் உர்வை அறிய நேருகின்றது. இதை உங்களால் பார்க்க முடிகின்றதா? இல்லை, ஆனால், உணர முடிகின்றது.

நீங்கள் எம்மைப் பார்க்கின்றீர்கள், நீங்கள் “எதைப் பெறவேண்டும் என்று எண்ணி ஏங்குகின்றீர்களோ,  அந்த உயர்ந்த எண்ணங்களை எண்ணும்பொழுது, அதனின் உணர்வின் தன்மை உங்களுக்குள் இயக்குகின்றது.

அப்படி இயக்கப்படும்பொழுது, உங்களுக்குள் அறிய முடியாத சில சலனங்கள் ஏற்பட்டு, அது எப்படி நம்மை இயக்குகிறதென்று, அறியும் பருவம் வருகின்றது. 

அறியும் பருவம் வந்தாலும், நீங்கள் அதை அடக்க வேண்டுமென்ற உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது. அப்போது, தம்முள் அடக்கவேண்டும், தீமைகள் தம்முள் வராது தடுக்கவேண்டும், என்ற உணர்வுகள் உங்களிடத்தில் வருகின்றது.

அருள் ஞானியின் அருள் உணர்வுகள், வலிமை கொண்டது.  அதே சமயத்தில், வேதனையின் உணர்வுகளும் வலிமை கொண்டது.

ஆனால், அருள் ஞானியின் உணர்வுகள், சிந்தனையைத் தூண்டும்.  வேதனை உணர்வுகள் சிந்தனையை, இழக்கச் செய்யும்.

நல்ல மனிதராக இருந்தார்,  இன்று அவருடைய நிலை,  அவருடைய குடும்பத்தினர்களே அவரை எதிர்க்கும் நிலை ஆகிவிட்டதே என்று உங்களிடத்தில் சிந்தனையின் தன்மை மாற்றப்பட்டு, வேதனை பற்றிய சிந்தனையை உங்களிடத்தில் வளர்க்கச் செய்கின்றது. ஆகவே, அவரிடத்தில் இருந்த, அந்த வேதனையின் வலு உங்களிடத்தில் வளர்கின்றது.

தீமைகளின் உணர்வை, அடக்கும் ஆற்றல் கொண்டது துருவ நட்சத்திரம். அதன் உணர்வை எடுத்து, உங்களுக்கு உபதேசிக்கும் பொழுது, தீமைகளை அடக்கும் ஆற்றல் உங்களிடத்தில் வலிமை பெறுகின்றது.

தீமை என்று ஒன்றை. அறியும் பொழுது, தீமையிலிருந்து விடுபடும் நிலையை நாம் பெறவேண்டும். 

தீமையிலிருந்து விடுவிக்கும் உணர்வுகள் எது? விடுபட்டவர் யார்? துருவ நட்சத்திரம். துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வுகளை, நமக்குள் கவரும் பொழுது, அது நம்முள் உள்ள தீமைகளை ஒடுக்குகின்றது, தீமைகள் வராது காக்கின்றது.

புழுவிலிருந்து மனிதராகும் வரையிலும், மனிதராக ஆனபின்னும், ஒவ்வொரு சரீரத்திலும், தீமைகளை நீக்கிடும் ஆற்றல் பெற்றது, கண்கள். கண்களின் உணர்வின் தன்மை கொண்டு, தீமைகளை அகற்றிய ஆற்றல் பெற்றது, துருவ நட்சத்திரம்.

துருவ நட்சத்திரத்தின் அருளுணர்வின் தன்மையை, நாம் நுகர்ந்தால், ஞானிகள் அறிந்த உணர்வின் அறிவு, நமக்குள் விளைகின்றது, பகைமை ணர்வுகளை நீக்குகின்றது. தீமைகள் வராது காக்கின்றது.

ஆகவே, நாம் எதைச் செய்யவேண்டும்? ஒருவர் வேதனைப்படுகின்றார், கஷ்டப்படுகின்றார் என்றால், நாம் வேதனையை நீக்கிடும் நிலையை பெறவேண்டும்.

உதாரணமாக, ஒருவர் சாக்கடையில் விழுந்துவிட்டால், அவருக்குக் கை கொடுத்து, அரவணைத்து, சாக்கடையிலிருந்து மீட்கிறோம். பின்,  அவரைக் குளிக்கச் செய்கின்றோம். நாமும் குளித்துக் கொள்கின்றோம்.

இதைப் போன்று, வேதனையின் உணர்வினை நாம் நுகர்ந்தால், முதலில் நம்முள் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். பின், மகரிஷிகளின் அருள் உணர்வுகளை, அவர் பெறவேண்டும், வேதனைகள் அவரிடத்திலிருந்து நீங்கவேண்டும், என்று எண்ணுதல் வேண்டும். 

இதனின் உணர்வின் தன்மையினை நமக்குள் வளர்த்துக் கொண்டால்,  அருள் உணர்வின் ஆற்றல் நம்மிடையே பெருகும் நிலை வருகின்றது.

இதனைப் பின்பற்றி வரும் அனைத்து அன்பர்களும், மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று, சர்வ தீமைகளில் இருந்தும் விடுபட்டு, மன பலம் பெற்று, உடல் நலம் பெற்று, செல்வம், செல்வாக்கு பெற்று, வாழ்க்கையில் எல்லா நலமும் வளமும் பெற்றிட எமது அருள் ஆசிகள்.


(மே 1999)
மனதைச் சமப்படுத்தப்  பக்குவம் தேவை
பக்குவம் பெறுவதற்கு  அருள் ஞானம் தேவை
அருள் ஞானம் இருந்தால் தீமைகளை அடக்க முடியும்
தீமைகளை அடக்கினால் சிந்தனைத் திறனைப் பெறமுடியும்
சிந்தனைத் திறனைப் பெற்றால், 
செயல் திறனை பெருக்க முடியும்.

(ஜூன் 1999)
மின்னலைக் கண்டு, லேசரைப் படைத்தவர் விஞ்ஞானி. மின்னலை நுகர்ந்து, தன்னுள் ஒளியைப் பெருக்கியவர் அகஸ்தியர். அகஸ்தியரின் அருளைப் பெற்று,  நம்மிடம் உள்ள இன்னலைத் துடைப்போம்.

உதாரணமாக, ஆசிரியர் கற்றுத் தரும் பாடங்களை
மாணவன், தான் கூர்மையாக உற்றுப் பார்த்து
தனக்குள் பதிவாக்கி,
ஆசிரியர் மேல் பற்று கொண்ட
உணர்வின் தன்மையையும், 
மாணவன் தனக்குள்  பதிவாக்கினால்,
ஆசிரியர் தமக்குள் கற்றுணர்ந்த
உணர்வின் தன்மைகள், மாணவனிடத்தில் பரவி,
அந்த உணர்வே ஆசிரியராக இருந்து,
இது இவ்வாறு,  இது இந்த நிலை, என்பது போன்ற
சிந்திக்கும் திறனும், செயலும்
அதற்குண்டான உணர்வும் வரும்.

இப்படி, ஒருவர் கற்றுத் தரும் போதனையை, கூர்மையாகக் கவனித்து, அதன் உணர்வின் தன்மையை, எவர் தமக்குள் பதிவு செய்கின்றனரோ, அதன் வழி அவருக்குள் இயக்கமாகின்றது. இதைத்தான், குரு எமக்குக் காண்பித்து, எம்முள் பதிவாக்கினார்.

உலக நிலையை அறியச் செய்திடும் ஆசிரியர், என்ற நிலையில், எமது குருவின் உணர்வின் தன்மையை, எமக்குள் பதிவு செய்து கொண்டபின், உலகின் தன்மையையும், கடந்த காலத்தில் மனிதர்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள் என்றும், எமக்கு உணர்த்தினார் குரு.

இப்படி, இதன்வழி கொண்டு எண்ணும் பொழுது,  அவர் கற்றுணர்ந்த உணர்வின் இயக்கங்கள், எம்மைச் சிந்திக்கச் செய்யும் நிலையாகவும், அதன் வழி கொண்டு, வாழ்க்கை அமைத்திடும் நிலையும் வருகின்றது. 

இப்பொழுது, யாம் உபதேசிக்கும் உணர்வுகளை நீங்கள் உங்களுக்குள் பதிவாக்கி, பதிவாக்கியதை மீண்டும் நினைவு கொண்டால், தீமையிலிருந்து விடுபடும் உணர்வின் அணுக்கள் உங்களுள் உருவாகி, நீங்களும் இதை நுகர்ந்தறிந்து, தீமையிலிருந்து விடுபடும் மனிதனாகின்றீர்கள்.

ஒருவன் என்னை ஏசுகின்றான், எனக்குத் தொல்லை கொடுக்கின்றான், என்ற உணர்வின் தன்மையைப் பதிவாக்கிக் கொண்டு, தீமை செய்தவனை எண்ணும் பொழுது, மீண்டும் நமக்குள் தீமையின் உணர்வுகள் வளர்ந்து, நம்மிடத்தில், கை கால் குடைச்சலாகி, சிந்திக்கும் தன்மை இழந்து, கோப உணர்வுகள் வருகின்றது.

சிந்திக்கும் தன்மையை இழக்கப்படும் பொழுது, செயலின் தன்மை குறைகின்றது. நமது செயல் நற்பலன் தரவில்லையென்றால், உணர்ச்சியின் தன்மை கூடுகின்றது. கொதிப்பின் தன்மை ஏற்படுகின்றது. கொதிப்பின் உணர்வுகள் நமக்குள் வளர்ந்து, நமது நல்ல அணுக்களை செயலற்றதாக மாற்றுகின்றது. இதுவே நமக்குள் வளர்ந்து, கடும் நோயாகவும் மாறுகின்றது. ஆக,  இதுவும் ஆசிரியராக வருகின்றது,  குருவாக வருகின்றது.

ஆகவே, எதனின் தன்மையை நம்முள் பதிவாக்குகின்றோமோ, அதன் வலிமை கொண்டு நம்மை இயக்கிவிடும். இதை வென்றவர், துருவ மகரிஷி. அவர் கண்டுணர்ந்த உணர்வை, நமது குரு கற்றுணர்ந்தார். குரு ஊட்டிய உணர்வினை, யாமும் நுகர்ந்தோம்,  கண்டறிந்தோம்.

சாதாரணமாக, மனிதர் பாம்பினைக் கண்டால் அஞ்சுகின்றார். ஆனால், பாம்பு பிடிப்பதில் தெளிந்த மனிதன் ஒருவன், ஒரு பாம்பை பிடிக்கச் சென்றால், பாம்பு அவனைக் கண்டு அஞ்சுகின்றது. அவன் கையில் ஒரு குச்சி மட்டுமே இருக்கும். பாம்பைக் கண்டு நாம் பயப்பட்டோம் என்றால், பாம்பு இந்த உணர்வை நுகர்ந்து, சிர் என்று சீறித் தாக்கும், பயந்த மனிதன் தாக்குகின்றான் என்று உணர்கின்றது.

தெளிந்த மனிதன் வலிமை கண்டு, இவன் தாக்குவான் என்று பாம்பு அஞ்சி ஓடுகின்றது.  ஆனால், பயந்தவன் தாக்கும் பொழுது, பாம்பும் அஞ்சி இவனை தாக்குகின்றது.

வலிமையுள்ளதை நுகர்ந்துணரும் சக்தி, பிற உயிரினங்களுக்கு உண்டு.  மனிதருக்கும் இந்த அறிவு இருப்பினும், இந்த அறிவை சீராகப்  பயன்படுத்துவதில்லை. ஆதலால், நாம் அறியும் தன்மை இழந்திருக்கின்றோம்.

பாம்பு பிடிப்பதில் தெளிந்த மனிதன், இந்தப் புற்றுக்குள் பாம்பு இருக்கிறது என்று அறிகின்றான். இவனின் மணத்தை நுகரும் பாம்பு, புற்றுக்குள் அஞ்சி ஒடுங்குகின்றது. இவன் தூண்டும்போது வெளிவரும் பாம்பு, இவனைத் தாக்குவதில்லை, அஞ்சி ஓடுகின்றது.

ஆனால், இவன் பாம்பை எளிதில் பிடித்து, கவட்டையில் போட்டு, பாம்பு உயிருடன் இருக்கும் பொழுதே, பாம்பின் தோலை உரிக்கின்றான். இத்தகைய உணர்வுகள் பாம்பு பிடிப்பவனிடத்தில் இருப்பதால், அவனிடமிருந்து வெளிப்படும் மணத்தை, பாம்பினம் காண்கிறது. ஆகவே, அவனைக்  கண்டு அஞ்சி ஓடுகின்றது. சாதாரண மனிதனைக் கண்டால், சீறி தாக்குகின்றது, எதிர்த்து நிற்கின்றது.

இதைப் போன்றுதான், வாழ்க்கையில் பகைமை என்ற உணர்வுகள், எத்தனையோ நம்மிடத்தில் வருகின்றது. நாம் அன்பும், பண்பும், பரிவும் கொண்டு, பிறருடைய கஷ்டங்களை, நோய்களை கேட்டறிந்து உபகாரம் செய்தாலும், நாம் கேட்டறிந்த உணர்வுகள் ஓம் நமசிவாய என்று நம் உடலாக மாற்றுகின்றது. அதுவே வினையாகின்றது, வினைக்கு நாயகனாக அதன் வலுவைக் காண்பிக்கத் தொடங்கிவிடுகின்றது. ஆகவே, இதுபோன்ற  தீமைகளிலிருந்து எங்ஙனம் நாம் விடுபட வேண்டும்?  என்பதைச் சிந்திக்க வேண்டும்.

ஒரு இயந்திரத்தை உருவாக்கும் இஞ்சினியர், அந்த இயந்திரத்தில், எங்கெங்கே அழுத்தம் அதிகமாக இருக்கும், எங்கெங்கே வலிமை தேவை என்பதைக் கணக்கிட்டு, உலோகத் தன்மையின் வலிமையையும், இயந்திரத்தில் ஏற்படும் உராய்வையும் கணக்கிட்டு, இயந்திரத்தை உருவாக்குகின்றார்.

ஆனால்,  இயந்திரத்தைச் சோதித்து பார்க்கும் பொழுது, உலோகக் கலவையில் வலு சிறிது குறைவாக இருக்கும் பொழுது, இயந்திரம் நொறுங்கி விடுகின்றது.

பின்,  எதனால் இப்படி நேர்ந்ததென்று சிந்திக்கின்றார். சிந்தித்து,  இயந்திரத்திற்குண்டான வலிமையைக் கூட்டுகின்றார்.  இதனைத் தொடர்ந்து, சரியான ஒரு இயந்திரத்தை உருவாக்குகின்றார்.

இதைப் போன்று தான், ஞானத்தின் நிலைகள். தீமை என்று ஒன்று வரும் பொழுது, நாம் அருள்ஞானிகளின் உணர்வை, நம்முள் பதிவாக்கினால், உடனே சிந்தனை தூண்டப்பட்டு, தீமைகளை அகற்றும் தன்மை நம்மிடத்தில் உருவாகின்றது.

அருள் ஞானிகளின் உணர்வுகளை நாம் நுகரப்படும் பொழுது, அது, நம்முள் விஷத்தின் தன்மையை அடக்கி, நம்மிடத்தில், சிந்திக்கக்கூடிய மனவலிமையைக் கூட்டுகின்றது.

இத்தகைய ஆற்றலை நீங்கள் பெற்றால்தான், உங்களுடைய வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்ற முடியும். உங்கள் வாழ்க்கையைச் சீராக்க முடியும். பேரருள் பேரொளி பெறும் நிலையாக, தனக்குள் அருள் ஒளியின் உணர்வின் தன்மையைக் கூட்டும் பொழுது, அதன் உணர்வின் அலைகளை நீங்கள் பெற்று, இந்த உடலுக்கு பின், பிறவியில்லை என்ற நிலையை, அடைந்திட முடியும்.

இதை உணர்ந்து, ஞானிகள் காண்பித்த அருள் வழியில் அருள் ஞானத்தை வளர்த்து வரும் அன்பர்கள் அனைவரும், தம்முள் நஞ்சினை வென்று, பேரருள் பெற்று, பிறவியில்லா நிலை என்ற அருள் சக்தி பெற்று, பிறவியில்லா நிலை என்ற அருள் வாழ்க்கை வாழ்ந்து, இவ்வாழ்க்கையில் பிறவியில்லாப் பெருநிலையாக வாழ்ந்து வளர்ந்திட, எமது அருள் ஆசிகள்.

(ஜூலை 1999)
ஆற்றில் நீர் அதிகமாக இருக்கும் பொழுது, நீரோட்டம் அதிகமாக இருக்கும், மாறாக, நீர் குறைவாக இருக்கும் பொழுது, நீரோட்ட வேகம் குறைவாக இருக்கும். இது போன்று,  அருள் ஞானிகளின் அருள் உணர்வுகள் நம்முள் பெருகப் பெருக, நம்முடைய செயலாக்கத் திறனும், பெருகி வரும்.

மனிதராக உள்ள நாம், இந்த வாழ்க்கையில், கோபமான உணர்வுகளையே நம்முள் அதிகமாகச் சேர்த்துக் கொண்டிருப்போம் என்றால், நமது அடுத்த சரீரம், புலியின் ரூபமாகத்தான் அமையும் என்பதை, இராமாயணத்தில் காண்பித்தார்கள்.

அதாவது  இராவணன்,  தான் மூன்று லோகத்தையும் அடக்கவேண்டும், தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவேண்டும் என்று, அதற்கான ஆற்றலைப் பெறுவதற்காக வேண்டி, விஷ்ணுவை நோக்கிக் கடுந்தவம் இருந்தான், என்று இராமாயணக் காவியம் கூறுகின்றது.

இந்திரலோகம் என்பது, இன்பம் நிறைந்ததாக இருக்கும் லோகம். ஆனால், இராவணன், அரக்கத்தன்மை கொண்டு, தான் அனைத்தையும் அடக்கவேண்டும் என்று,  இந்த உயிரை வைத்துத்தான் எண்ணுகின்றான்.

விஷ்ணுவை நோக்கி, இராவணன் தவம் இருந்தான் என்றார்கள். விஷ்ணு என்பது யார்? விஷ்ணு என்பது நமது உயிர்.  இந்த உடலில், அனைத்தையும் மகிழ்ச்சியாக இருக்கச் செய்வது, ஆறாவது அறிவு. இதனைத்தான், கன்னியர்கள் இந்திரலோகத்தை மகிழ்ச்சி நிறைந்திருக்கும்படி வைத்திருந்தார்கள், என்றனர் ஞானிகள்.

மகிழ்ச்சி நிறைந்திருக்கும் இந்திரலோகத்தை அடக்கவேண்டும், தனக்குக் கீழ் கொண்டு வரவேண்டும், என்று எண்ணிய இராவணன் கடுந்தவம் மேற்கொண்டான் என்றும், தனக்குக் கீழ்படியாதவர்களைக் கொல்லவேண்டும் என்றும் எண்ணினான்  என்று காவியத்தில் கூறினார்கள்.

நாம், பிறிதொருவரிடம் உள்ள தீய குணங்கள் அகலவேண்டும், என்று எண்ணினால் நல்லது.  ஆனால், தீய குணம் கொண்டவர்களை, அழித்துவிட வேண்டும் என்று எண்ணினால், நமக்குள் கொல்லும் உணர்வுகள்தான் விளையும்.

இதைத்தான், இராமாயணத்தில் தசரதச் சக்கரவர்த்தி,  பத்தாவது நிலையை அடையக் கூடிய உயிரும், உயிரால் நுகரப்பட்ட உணர்வுக்கொப்ப உடலும், உடலின் தன்மை பெற்றபின்,  உடலை வளர்க்க உணர்வுகள் என்ன செய்கின்றது? என்றும், நல்ல நிலைகள் பெறவேண்டும் என்ற எண்ணத்தால் வளர்ந்த இராமனும், இராமனிடத்தில் நன்மையை நாடும் உணர்வுகள் எப்படி இயங்குகின்றதென்ற நிலையை, ஞானிகள் காட்டியுள்ளனர், 

அதே சமயத்தில், இராவணனிடத்தில் அசுர குணங்கள் எப்படி இயங்குகிறது என்பதையும், மனிதர்கள் பத்தாவது நிலையை அடைவதற்கு, தடைகள் எப்படி வருகின்றது என்பதையும், இராமாயணத்தில் தெளிவாகக் கொடுத்திருக்கிறார்கள்.

இராவணன், பிரம்மாவை நோக்கித் தவம் இருந்தான். பிரம்மாவும் இராவணனுக்கு வரம் கொடுத்தார். பிரம்மா, விஷ்ணுவின் மகனல்லவா. ஆகவே, பிரம்மாவும், இராவணனின் தவத்திற்கேற்ப நீ அனுபவி என்று வரம் கொடுத்துவிடுகின்றார். இராவணனும் தன் தவத்திற்கேற்ப, இந்திரலோகத்தைக் கைவல்யப்படுத்தினான்.

உதாரணமாக, நாம் பிறிதொருவரைக் கொல்ல வேண்டும், கொல்ல வேண்டும் என்று எண்ணினால், இந்த உணர்வின் தன்மையை உயிரான ஈசன், நமக்குள் இந்திரலோகமாக மாற்றி விடுகின்றது. கொல்ல வேண்டும் என்ற உணர்வு நமக்குள் வந்தவுடனே என்னவாகிறதென்றால், இந்திர லோகத்தில், கொல்லக்கூடிய உணர்வின் தன்மை கொண்டு, அணுவாக மாறுகின்றது,  இது பிரம்மா.

கொல்லக்கூடிய உணர்வின் தன்மை கொண்டு விளைந்த அணு, நம்முள், தீமைகளை வளர்த்திடும் சக்தி பெறுகின்றது. நாம் மனிதராக இருக்கக்கூடிய நிலைகளில், மனிதராக உருவாக்கிய நல்ல குணங்களை மாற்றும் தன்மை வந்து, எமலோகமாக மாறுகின்ற பொழுது, மனிதர்கள் என்ன செய்கின்றனரென்றால், சீதா எனும் மகிழ்வான உணர்வைச் சிறைப்பிடித்து விடுகின்றனர்.

அதாவது, மகிழ்ச்சியான உணர்வு வெளியே வராதபடி அடக்கப்படுகின்றது. இதை மாற்ற வேண்டுமல்லவா? அதைத் தான்,
இராமாயணத்தில், 
உயிரின் இயக்கத்தையும், உடலின் ஆக்கத்தையும்,
பின் விளைவுகள் என்ன? 
என்பதையும் தெளிவுபட எழுதினார்கள்.

சீதாராமா எனும் பொழுது, எந்த குணத்தின் சத்தை எடுக்கின்றோமோ, அதன் உணர்ச்சியின் எண்ணங்களை இயக்கும், அதனின் உணர்வுகள் உணர்ச்சிகளைத் தூண்டும். உணர்வுக்கொப்ப, உடலின் அமைப்பு வரும், என்னும் நிலையை, தெளிவாக இராமாயணத்தில் கொடுத்துள்ளார்கள்.

      ஆகவே,  நாம் தீமையான நிலைகளைக் காணும் பொழுது, அதிலிருந்து மீண்டிடும் நிலையாக, துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நமக்குள் சேர்த்திடல் வேண்டும். நமது உயிரை ஈசன் என்று மதித்திடல் வேண்டும்.

ஈசன் வீற்றிருக்கும், இந்த உடலை ஆலயமாக மதித்து, துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை, இந்த உடல் முழுவதும் படரச் செய்து, பரிசுத்தமாக்க வேண்டும். நம்மை மனிதனாக உருவாக்கிய, நல்ல குணங்களைக் காத்திடல் வேண்டும், என்பதைத்தான் சாஸ்திரங்கள் தெளிவாக்குகின்றன.

இராமாயணம் நமக்குக் கிடைத்த, அரும்பெரும் பொக்கிஷம்.  யாம் இப்பொழுது உரைத்ததன் தொடர் கொண்டு, இராமாயணத்தை நீங்கள் அனைவரும் படிப்பீர்களென்றால், இராமாயணக் காவியத்தின் அர்த்தங்களைத் தெளிவாக அறியமுடியும். 

அதன் வழியில், மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நீங்கள் அனைவரும் பெற்று, உங்கள் வாழ்க்கையில் அறியாது வரும், சர்வத் தீமைகளிலிருந்து விடுபடும் அருள் சக்தி நீங்கள் பெற்று, மகரிஷிகளின் அருள் வட்டத்தில் மகிழ்ந்து மகிழ்ந்து வாழ்ந்திட, எமது அருள் ஆசிகள்.


(செப்டெம்பர் 1999)
இராமாயணக் காவியத்தில், இராமேஸ்வரத்தில், இராமன் ஆஞ்சனேயனை அழைத்து, பூஜை நேரம் வந்துவிட்டது. காலை 4.00 மணிக்கு பூஜை செய்ய வேண்டும், அருளுணர்வைப் பெறவேண்டும், பருக வேண்டும், லிங்கத்தை எடுத்துவா என்று இராமன் ஆஞ்சனேயனுக்கு கட்டளையிடுகின்றார்.

ஆனால்,   அந்த உணர்வின் எண்ணங்கள் வருவது கால தாமதமாகின்றது. ஆகவே, இராமர் அங்கே ருக்கும் மணலையே கூட்டிச் சேர்த்து சிவலிங்கமாக அமைத்து பூஜிக்கின்றார், என்று இந்த உணர்வின் தன்மையை அங்கே தெளிவாகக்  காண்பிக்கின்றார்கள். அதனால்தான் இராமலிங்கம்  என்று காரணப்பெயர் வைத்தார்கள்.

காலை 4.00 மணியிலிருந்து விண்ணிலிருந்து, துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும், நம் பூமியின் துருவப்  பகுதி வழியாக வந்து, நமக்கு முன் படர்ந்து கொண்டிருக்கின்றது.

அந்த நேரத்தில், நாம் நம்முடைய மனதைக் குவித்து, உயிரோடு ஒன்றி (இராமலிங்கம்), துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நம் உடலை உருவாக்கிய ஒவ்வொரு அணுவிலும் சேர்க்க வேண்டும் என்பதைத்தான் காவியத்தில் உணர்த்தப்பட்டுள்ளது. 

அதை மனிதர்கள் யாரும் கவரவில்லையென்றால், 6.00 மணிக்கு மேல் சூரியன் அதைக் கவர்ந்து, கடல் பகுதியில் சேர்த்துவிடும். 

ஆஞ்சனேயன் என்பது வாயுபுத்திரன். இப்பொழுது யாம் சொல்லும் உணர்வுகள் அனைத்தும் சூரியனால் கவரப்பட்டு, வாயுவாக மாறுகின்றது. யாம் சொல்லும் உணர்வுகள், சீதாலக்ஷ்மியாக மாறுகின்றது. இந்த உணர்வின் தன்மையை, நீங்கள் உங்களுக்குள் நுகரப்படும் பொழுது, உங்களுடைய சரீரத்திற்குள் சென்று, அதனின் உணர்ச்சிகளை ஊட்டுகின்றது.

அதனால்தான், இராமனின் பக்தன் ஆஞ்சனேயன் என்றும், இராமன் இடும் கட்டளை அனைத்தையும் முழுமையாகச் செயல்படுத்துவான் என்றும், நாம் நுகரும் உணர்வுகள் அதனின் எண்ணங்களை, உணர்ச்சிகளைத் தூண்டி, அதன் உணர்வுக்கொப்ப நமது உடலை எப்படி இயக்குகின்றது என்பதனையும், இராமாயணக் காவியம் கூறுகின்றது.

தனுஷ்கோடி என்று காரணப்பெயரை வைத்து, இராமன் அங்கே மணலை கூட்டி, லிங்கத்தை அமைத்து பூஜித்தார், என்று காவியம் கூறுகின்றது. தனுஷ்கோடி என்றால் கடைசி நிலை, மனிதன் முழுமையடையும் தன்மை பெற்றநிலை என்பதற்காக வேண்டி, தனுஷ்கோடிக்கு இராமன் வந்து, எல்லாவற்றையும் கூட்டி அமைத்து வளர்த்தார் என்று காண்பிக்கின்றார்கள்.

பல கோடிச் சரீரங்களைக் கடந்து, கடைசி நிலை பெற்றது தனுசுகோடி.  உயிரின் தன்மை கொண்டு, விஷ்ணுவின் தனுசைப் பெற்றவர்களின், உணர்வு எதுவோ,  அதன் நிலை கொண்டு உயிர் இயக்குகின்றது,

அதன் வழி உணர்வுகள் அனைத்தும் இயக்க நிலை கொண்டு, எண்ணங்கள் கொண்டு, உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமானது,  துருவ நட்சத்திரம்.

இவைகளை எல்லாம், யாம் உங்களுக்கு எதற்காகச் சொல்கின்றோம் என்றால்,  நாம் தனுஷ்கோடி என்னும் கடைசி நிலையில் இருக்கின்றோம். எல்லாவற்றையும் வென்றிடும் நிலையில் இருக்கிறோம்.

ஆகவே, நம்முடைய எண்ணங்கள் அனைத்தும் எதனில் இருக்க வேண்டும்? என்பதை நாம் உணரவேண்டும்.  துருவ நட்சத்திரத்தின் உணர்வை, கோடிக்கரை எனும் இவ்வுடலான நிலையிலிருந்து நாம் எடுத்து, நம்முள் சேர்த்து, பிறவியில்லா நிலை என்ற நிலையினை,  நாம் அடைதல் வேண்டும்.


(அக்டோபர் 1999)
பரசுராமனுக்கும், சீதாரமனுக்கும் போர் நடந்து கொண்டே இருக்கும் என இராமாயணக் காவியம் கூறுகின்றது. ஏனென்றால், சிவ தனுசு எனும் பொழுது,  உடல் என்ற நிலைகளில் உருவான உணர்வின் தன்மை கொண்டு, இந்த உடலில், வாழ்க்கையில் வரும் தீமைகளிலிருந்து காக்கவே உடலின் உணர்வுகள் வருகின்றது,

ஆனால், விஷ்ணுதனுசு எனும் பொழுது, தீமைகளை அகற்றி, ஒளி என்ற உணர்வைக் கொண்டு வருகின்றது. நாம் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகருகின்ற பொழுது, துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள், நமக்குள் "விஷ்ணு தனுசு" ஆகின்றது.

அதாவது, துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நாம் நுகரப்படும் பொழுது, துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நமது உடலில் இருக்கும் உணர்வுகளை ஊடுருவுகின்ற பொழுதுதான், விஷ்ணு தனுசிற்கும், சிவ தனுசிற்கும் போர் முறை வருகின்றது.  ஏனென்றால்,
சீதா என்றால் சுவை கொண்டது,
மகிழ்ச்சி கொண்டது,
மகிழ்ந்து வாழக்கூடியது,
மகிழ்வான செயல்களைச் செய்வது.
மகிழ்ச்சி என்ற உணர்வுகள் நமக்குள் வரும் பொழுது, மகிழ்ச்சியூட்டும் சக்தி பெற்றது. நமக்குள் சமப்படுத்தும் உணர்வுகள் இருப்பினும், எந்தெந்த குணங்களை நமக்குள் பெற்றோமோ, அதைத்தான் நமக்குள் சமப்படுத்திக் கொண்டிருக்கும்.

உதாரணமாக,  நாம் கோபப்படுகின்றோம் என்றால்,  அந்தக்  கோபமான நிலைகளை எடுத்துத்தான் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள இந்த சிவ தனுசு உதவும்.

நாம் ஒருவர் மேல் வெறுப்பு கொண்டிருப்போமானால், இரு உன்னை நான் பார்க்கிறேன் எனும் எண்ணம்தான், நமக்கு வரும். இது, பரசுராமன் கையிலுள்ள சமப்படுத்தும் உணர்வு பெற்ற, நம் உடலில் வளர்த்துக் கொண்ட சிவ தனுசு.

இப்படி நாம் கோபப்படும் பொழுதோ, சஞ்சலப்படும் பொழுதோ பிறருடைய நிலைகளால், நம்மில் உருவான தனுசை எடுத்துதான், பயன்படுத்துகின்றோம். நாம், தேடிச் சேர்த்த செல்வத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று சிவ தனுசைத்தான் பயன்படுத்துகின்றோம்.

உதாரணமாக, நம் குழந்தை மேல் எந்த அளவு பாசம் கொண்டோமோ, அதற்கொப்பதான், அவனைப் பாதுகாக்க வேண்டும் என்ற நிலை வருகின்றது. ஆனால், அவன் செய்யும் தவறினை நாம் காண்பதில்லை. அவன் செய்யும் குற்றங்களை புரிந்து கொள்வதில்லை. என் பிள்ளை என்ற நிலையில், இந்த உடலில் எதை வளர்த்துக் கொண்டோமோ, அதனின் உணர்வை பாய்ச்சித்தான், அவனைக் காக்கும் நிலைக்கு வருகின்றோம்.

இதில், நாம் வேதனையின் உணர்வை நுகர்கின்ற பொழுது நமது உயிர் விஷ்ணு வரம் கொடுத்துவிடுகின்றார். பின், நுகர்ந்த உணர்வுகள் உடலுக்குள் வருகின்றது. நுகர்ந்த உணர்வுகள் இரத்தத்தில் கலக்கப்படும் பொழுது, உயிர், நுகர்ந்த உணர்வின் தன்மையை அணுக்கருவாக உருவாக்குகின்றது. அதே சமயத்தில், உணர்வின் கரு நமது இரத்த நாளங்களில் கலக்கப்படும் பொழுது, இந்திரியமாக மாறுகின்றது. இதற்குத்தான்,  இந்திரலோகம் என்று காரணப்பெயர் வைத்தார்கள், ஞானிகள்.

இரத்த நாளங்களில் சேமிக்கப்பட்ட அணுக்கரு, நமது உடலில் சுழன்று கொண்டேயிருக்கும். குறிப்பிட்ட காலப் பருவம் வரும் பொழுதுதான், அணுக்கரு வெடிக்கின்றது. அப்படி வெடித்தபின், அதன் உணர்வின் தன்மை எதுவோ, அதற்கொப்ப அணுத்தன்மை வெளிப்படுகின்றது.
ஆனால்,  இப்படி உருவான அணு இவ்வுடலில் சேர்ந்து இயக்கத் தொடங்கி விடுகின்றது. அப்பொழுது, உடலில் உருவான இவ்வணு தன் இனத்தை பெருக்கத் தொடங்கிவிடுகின்றது.

ஒரு வித்தை நிலத்தில் ஊன்றினால், அந்த வித்து, எந்த இன செடியின் வித்தோ,  அதே இனச் செடியைத்தான் உருவாக்குகின்றது. அதே இன வித்தைத்தான் உருவாக்குகின்றது.

ஆகையினால், ஒரு உணர்வின் தன்மையினை உடலாக்கப்படும் பொழுது என்ன செய்கின்றது? உடலாகும் பொழுது சிவமாகின்றது. உணர்வின் தன்மை சொல்லாக வரப்படும் பொழுது, சிவ தனுசு என்ற நிலை வருகின்றது.

ஒருவர் தவறு செய்கின்றார் என்ற உணர்வை, நாம் நுகர்ந்தோம் என்றால், அவருடைய உடலில் விளைந்த உணர்வுகள், நமக்குள் வரப்படும் பொழுது,  இதற்கும், நமது உடலிலுள்ள நல்ல குணங்களுக்கும், போர் என்ற நிலை நமது உடலில் நடைபெறுகின்றது.

அது சமயம், நாம் கோபத்தின் தன்மை கொண்டு தனுசைப்  பாய்ச்சினோம் என்றால், அதனின் உணர்வின் கூட்டமைப்பு, தன்னில் ஒரு படையே உருவாக்குகின்றது.

சிறுகச் சிறுக கோபத்தின் உணர்வுகள் வளரப்படும் பொழுது, கோபம் அதிகமாகி, கோபக்காரர் என்ன செய்கிறார் என்றால், தன்னைக் காத்துக் கொள்வதற்கு இரு உன்னை நான் பார்த்துக் கொள்கிறேன் என்ற கோப உணர்வு கொண்டு, பிறிதொருவரை தாக்கிக் கொல்கின்றார்.  கோபம் உள்ளவர், சிவ தனுசை தனக்குள் எடுத்துக் கொண்டு, கோப உணர்வுகளை தமக்குள் எடுத்துச் சமப்படுத்துகின்றார்.

இதே போன்று, வேதனை என்ற நிலை வரும் பொழுது, வேதனை உணர்வுகளைத் தனக்குள் எடுத்துச் சமப்படுத்துகின்றார்.  பரசுராம், நாம் சுவாசித்த உணர்வுகள் எந்த குணமோ, அதைச் சமப்படுத்தும் எண்ணங்கள்தான் வருகின்றது.

உதாரணமாக, ஒவ்வொரு உயிரினமும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள விழைகின்றது. இவை எல்லாம் சிவ தனுசு. இதைப் போன்று, மனிதரிடத்தில் எனும் பொழுது, மனிதர், தாம் எதை முன்னிலையில் வைத்துள்ளாரோ, அது சிவ தனுசு. அதாவது, உடலை பாதுகாத்துக் கொள்ளும் நிலை வருவதுதான், சிவ தனுசு.

உயிர் என்ற ஒளியின் தன்மையை, என்றும் ஒளியாக வைத்து, இருள் சூழாத நிலையில் இருப்பதுதான் "விஷ்ணு தனுசு".

மனித வாழ்க்கையில் கணவனும், மனைவியும், வசிஷ்டரும் அருந்ததியும் போன்று வாழ்ந்து, நளாயினியைப் போன்று கணவனும் மனைவியும், ஒருவரை ஒருவர் மதித்து நடந்து, சாவித்திரியைப் போன்று இரு மனமும் ஒன்றி, இரு உயிரும் ஒன்றி, இரு உணர்வும் ஒன்றி, உணர்வினை ஒளியாக மாற்றிச் சிருஷ்டித்துக் கொண்ட நிலை ரிஷி, அதுதான் துருவ நட்சத்திரம்.

துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வின் சத்தை, சூரியனின் காந்த புலனறிவு கவர்ந்து, புவிக்கு வருகின்றது. ஆகவே, இதனை, ரிஷியின் மகன் நாரதன் என்றும் நாராயணனின் அபிமான புத்திரன் என்றும் காவியங்களில் குறிப்பிட்டனர்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வினை நாம் நுகர்ந்தோம் என்றால், 
நாரதன் என்னும் உணர்வுகள்,
உயிரான விஷ்ணுவிடமும் செல்கின்றது.
மற்றும் உடல் பாகங்கள் அனைத்திற்கும் சென்று, பகைமை உணர்ச்சிகளை மாற்றுவதற்கான நிலை எதுவோ, அதைச் சொல்லி, பகைமையை தணிக்கச் செய்கின்றது. உண்மையை விளங்கச் செய்கின்றது,  இந்த நாரதர் என்னும் உணர்வுகள்.

எனவே, நாம் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைத் திரும்பத்  திரும்ப, நுகர்ந்தால் அதன் உணர்வுகள் நம் உடலுக்குள் வந்து, பகைமை உணர்ச்சிகள் நமக்குள் எப்படி இயக்குகின்றதென்ற நிலையை நமக்குள் தெளிவாக்கி, நம்மை வழிப்படுத்தும். ஆகவேதான், ரிஷியின் மகன் நாரதன் என்றும், நாராயணனின் அபிமானப்  புத்திரன் என்றும், நாரதர் நன்மைகள்தான் செய்வார்  என்றும், காவியங்களில் காண்பித்தார்கள் ஞானிகள்.

நமது உயிரால் உருவாக்கப்பட்ட உணர்வுகள் விஷ்ணு தனுசு, உயிருடன் ஒன்றி ஒளியாக இருக்கின்றது. ஒளியின் உணர்வுகளை நாம் நுகர்ந்தோம் என்றால், சீதா மகிழ்ச்சியான உணர்வை நமக்குள் ஊட்டும். ஒளி என்ற உணர்வை ஊட்டும் நாரதன்,  தீமைகளை நீக்கி, சமப்படுத்தும் நிலைகளை உருவாக்கி, உணர்வின் நிலையைத் தெளிவாக்குவார், என்பதுதான் பொருள்.

ஆகவே, அரும்பெரும் ஞானிகள் காண்பித்து, உணர்த்திய உண்மைகளை தம்முள் உணர்ந்து, அதன்வழி இயங்கி, ஒளி என்ற உணர்வைக் கொண்டு வரும், விஷ்ணு தனுசினைக் கைக்கொண்டு, தம்முள் பகைமை உணர்வுகளை அகற்றி, மகிழ்ச்சி தரும் உணர்வை தம்முள் வளர்த்து வரும் அன்பர்கள் அனைவரும், உடல் நலம், உடல் பலம், மன நலம், மன பலம், மன வளம், செல்வம், செல்வாக்கு பெற்று, பேரின்பப் பெருவாழ்வாக வாழ்ந்து வளர்ந்திட எமது அருள் ஆசிகள்.


(நவம்பர் 1999)
மிருகங்களில் ஆண், பெண் என்ற நிலை இருக்கப்படும்பொழுது, ஆணுக்கு, ஆணே போர் செய்கின்றன. பெண் மிருகங்களை, போரில் இணைப்பதில்லை. 

மிருகங்களில் ஆணுக்கு, ஆண்தான் மோதுகின்றதே தவிர,  பெண் பாலை அரவணைத்தே செல்கின்றது. ஆனால், மனிதர்களாக இருக்கும் நாம், பெண்களைத் துன்புறுத்தும் நிலையே இருக்கின்றது. 

பெண்களைத் துன்புறுத்தும் நிலையில், வேதனை என்ற உணர்வுகள் கலந்தால், ஆண், பெண் என்று இருவருடைய உணர்வுகளிலும், வேதனை என்ற விஷத்தின் தன்மை கலக்கின்றது என்பதை உணர்வதில்லை.

காரணம், பெண்பாலில் உருவாகும் வேதனை என்ற விஷத்தின் தன்மையினை, ஆண்பால் நுகர நேர்ந்தால், வெறுப்பாகவோ, வேதனையாகவோ இருந்து, அதனின் விஷத்தன்மை அதிகரித்து அங்கே படர்கின்றது. பெண்பால் வேதனை என்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் பொழுது, கேட்போர் மற்றும் வேடிக்கை பார்ப்போரின் உணர்வுகளிலும்கூட,  அது பதிவாகின்றது.

ஆகவே, பெண்களைத் துன்புறுத்தும் நிலையினை விடுத்துப் பழகவேண்டும். ஏனென்றால்,  பெண்பால் எத்தகைய துன்பங்களை அனுபவிக்கின்றதோ, அதன் உணர்வின் தன்மையினை வெளிப்படுத்தும் பொழுது, இந்த வேதனையின் உணர்வுகள் புவியின் காற்றில் பரவுகின்றது.

பெண்களைத்  துன்புறுத்தும் உணர்வுகள் அதிகரித்தால், ஆண்களும் நரகவேதனை என்ற நிலைகளை, அனுபவிக்க நேரும். 

ஒவ்வொரு குடும்பத்திலும், பெண்கள் திருமணமானபின், எத்தனையோ துன்பங்களை அனுபவிக்கின்றனர். இவர்கள் விடும் மூச்சலைகளெல்லாம், காற்று மண்டலத்தில் படர்கின்றன.

சோகமும், வேதனையும், கொண்ட இத்தகைய உணர்வுகள் காற்றில் படரும்பொழுது, நம் பூமியின் நிலைகளில் மாற்றங்களே ஏற்படும். 

இங்கு மட்டுமல்ல, உலகெங்கிலுமே, பெண் இனத்தைத் துன்புறுத்தும் நிலை இருக்கின்றது. மற்ற உயிரினங்களில், பெண்பாலை அரவணைத்துச் செல்லும் தன்மை இருக்கின்றது. அதனில், அன்பு கலந்த சந்தோஷமும் பெறுகின்றன.

மனிதனானபின், பெண்களைத் துன்புறுத்தும் நிலை அதிகரிக்கும்பொழுது, இதனின் உணர்வுகள் நமது உடலில் மட்டுமல்ல, வேடிக்கை பார்ப்போரின் உடல்களிலும் கூட வேதனையும், சோகமும் உருவாக்கப்படுகின்றது. ஆகையால், இணைத்துக் கொண்ட உணர்வின் தன்மைக்கேற்ப, இப்படி மாற்றங்கள் ஏற்படுவது மட்டுமல்லாதபடி, புவியின் காற்று மண்டலத்திலும் கலந்திருக்கும் நிலையில், இதனைச் சாப அலைகள் என்று சொல்வார்கள்.

துன்புறுத்தும் உணர்வுகளும் சரி, வேடிக்கை பார்க்கும் உணர்வுகளும் சரி, இன்று மனிதருக்குள் தீய உணர்வின் தன்மை அதிகரிக்கும் நிலைகளில், மனிதர்களிடையே ஒருவருக்கொருவர் கொன்று குவிக்கும் நிலையே வருகின்றது.

இவைகள் அனைத்தையும் நாம் சிந்தித்து, பெண்பால் என்ற உணர்வினை அரவணைத்து, அன்பு கலந்த உணர்வினைச் சேர்த்து, துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நமக்குள் பெருக்கி,  இருளை அகற்றி, நம்மையும், நம் நாட்டு மக்களையும், இனிப் பிறவியில்லா நிலை என்ற நிலையை அடையச்  செய்வோம்.

இன்று விஞ்ஞானம் நிரூபிக்கின்றது. இரும்பு உலோகத்தில், தென் துருவம், வட துருவம் என்பது, வட துருவத்தில் இருக்கக் கூடிய காந்தப்புலன், ஈர்க்கும் சக்தி பெற்றது, தென் துருவத்தில் இருக்கக்கூடிய காந்தப்புலன், ஒதுக்கும் சக்தி பெற்றது. சூரியனின் நிலைகள் வரப்படும் பொழுது, இதனுடைய அளவுகோல்படி, மிதக்கும் தன்மை வருகின்றது. 

இன்று, காந்தத்தின் துருவங்கள் ஒன்றைக்  கண்டு, ஒன்று அழுத்தங்களாக இருக்கின்றன. ஒரு காந்தப்புலனுக்குள், மறைந்துள்ள இத்தகைய ஆற்றலை மனிதர்கள் கண்டுணர்ந்து, அதற்குத் தக்க எந்திரங்களை உருவாக்குகின்றனர்.

நமது பூமி, மற்ற பொருள் தனக்கு கிடைக்கும் நிலையில், தன் வெப்பத்தின் துணை கொண்டு, அதனைத் தன்னில் இணைத்து வாழும் தன்மை கொண்டுள்ளது. ஆண், பெண் என்ற நிலைகளில், பெண்களும் ஆண்களை மதித்து, அவர் உயர்ந்த நிலை பெறவேண்டும் என்ற உயர்ந்த நோக்கங்களைக் கொண்டால், ஆண்கள் உயரந்த நிலைகள் பெறுகின்றனர், தொழில் வளம் பெறுகின்றனர், குடும்பத்தில் மகிழ்ச்சி என்ற நிலை உருவாகின்றது.

மகரிஷிகள் என்பவர்கள், தாங்கள் காட்டிற்குள் வசித்தாலும், கணவனும், மனைவியுமாக ஒன்று சேர்ந்து வாழ்ந்து, உணர்வின் சக்தியினை வளர்த்தனர்.  அதன் தொடர் கொண்டே, நமக்கு காவிய தொகுப்புகள் கிடைத்தன.

ஆனால். பிற்காலத்தவர்களோ, இந்தக் காவியத் தொகுப்புகளை அவரவர் நலங்களுக்கேற்ப மாற்றியமைத்து, உண்மைகளை மறைத்துவிட்டனர். இதன் நிலையாக, இன்று மனித இனமே அழிந்து போகும் நிலைக்கு, பிரபஞ்சம் முழுவதும் விஷத் தன்மை கொண்டதாக, மாறிவிட்டது.

தான் சுகமாக வாழவேண்டும், என்ற உணர்வின் அறிவுகள் வளர்ந்து, வளர்ந்து, தீமைகளை அடக்கி, உணர்வுகளை ஒளியாக மாற்றும் திறன் பெற்ற இந்த மனிதச் சரீரத்தில், நாட்டாசையும், உடலாசையும், பொன்னாசையும், பெண்ணாசையும் கொண்ட உணர்வின் தன்மையை வளர்த்து, மனித குலத்தைச் சீர்குலைத்து அழிக்கச்  செய்யும் நிலைகளையே, வளர்த்துள்ளனர். மனித குலத்தையே கூண்டோடு அழிக்கச் செய்யும் மிருக உணர்வுகள், புவியில், துரித நிலைகளில் இயங்கிக் கொண்டுள்ளது.

இந்த சந்ததிக்குப்பின், பெரும்புயல்களை போன்று, சூறாவளிகளைப் போன்று, பெரும் நில நடுக்கங்களைப் போன்று உருவாகி, பெரும், பெரும் கட்டிடங்களே நொறுங்குவது போன்று, மனித உணர்வின் தன்மை சீர்குலைந்து, மனிதனுக்கு மனிதன் நொறுங்கி மடியும் தன்மையும், மனித இனமே கூண்டோடு அழியும் தன்மையும், வந்துகொண்டே இருக்கின்றது.

இது போன்ற தீமைகளிலிருந்து, நாம் அனைவரும் மீளவேண்டும். நமது குருநாதர் காட்டிய அருள்வழியில், ஒவ்வொரு குடும்பத்திலும், கணவனும், மனைவியும் துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வுகளைக் கவர்ந்து, உயர்ந்த நிலைகளைத் தங்களுக்குள் உருவாக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். 

இதற்காகத் தான், குருநாதர் நமக்கு நல்வழியைக் காண்பித்தார். ஆகவே, ஒவ்வொரு நிமிடமும், பெண்கள் உயர்ந்த நிலை பெறவேண்டும் என்று எண்ணி, நாமும் உயர்ந்த நிலை பெறவேண்டும் என்று எண்ணினால், நமக்குள் உயர்வு தரும்.

ஏனென்றால், குறுகிய காலமே நமக்கு இருக்கின்றது. இராமாயணத்தில், இராமன் நேரமாகிவிட்டது என்று, இராமேஸ்வரத்தில், இதுவே கடைசி நிலை என்று மணலைக் குவித்து, சிவலிங்கம் அமைத்து பூஜித்தார் என்று காண்பிக்கப்பட்டது. ஏனென்றால், இராமன் என்ற எண்ணங்கள், இந்த மனித உடலில் கடைசி நிலையில் இருக்கின்றது.

ஆகவே,  நாம் அனைவரும் ஒன்றுபட்டு வாழ வேண்டும்  என்ற உணர்வை நமக்குள் கலந்துவிட்டால், கடைசி என்ற நிலைகள் வரும், தனுஸ்கோடி. ஆக, நம்முடைய கடைசி எண்ணத்தின் நிலைகளாக,  துருவ நட்சத்திரத்தின் உணர்வை, தனுசாக நமக்குள் உட்செலுத்தி,  தீமை என்ற நிலைகளை அகற்றி, உணர்வை ஒளி என்ற நிலைகளில் மாற்றி,  இனிப் பிறவி இல்லை என்ற நிலைக்கு நாம் அனைவரும் செல்ல வேண்டும்.


(டிசம்பர் 1999)
ஜாதகம், ஜோசியம் பார்த்து மணமக்களுக்கு எல்லாப் பொருத்தங்களும் இருக்கின்றதா என்று பார்த்து, நல்ல நேரம் பார்த்துதான் திருமணத்தை நடத்தி வைக்கின்றனர்.

ஆனாலும், திருமணம் முடிந்து வந்தவுடன், இல்லற வாழ்க்கை தொடங்கும் காலத்தில், இல்லத்தில் பல இன்னல்கள் வந்து சேர்கின்றன. இதனால், கணவன், மனைவிக்குள் வேறுபட்ட உணர்வுகள் தோன்றுகின்றன. இப்படி வேறுபட்ட உணர்வுகள் வரும் பொழுது, பெரும்பாலான பெண்கள் அனுபவிக்கும் அவஸ்தைகளாலும், வேதனைகளாலும் வெளிப்படும் உணர்வுகள் எல்லோரையும்தான் சாரும்.

ஏனென்றால், பெண்கள் வெளிப்படுத்தும் வேதனையின் உணர்வுகளை, சூரியனின் காந்தப்புலனறிவுகள் கவர்ந்து வைத்துக் கொள்கின்றன. நாம் இவ்வேதனையின் உணர்வுகளை கேட்டறிய நேரும் பொழுது, இவ்வேதனையின் உணர்வின் தன்மை நமக்குள் பதிவாகின்றது. பதிவின் நிலைகொண்டு, நாம் நுகர்கின்றோம். ஆகவே, நம்மை அறியாமலே அவர்களுடைய வேதனைகளை நுகர்ந்து, நமக்குள்ளும் வேதனையான உணர்வுகளாகவே மாற்றிவிடுகின்றோம். அதனின் உணர்ச்சியும் நம்முள் அதிகரித்து விடுகின்றது.

கணவனும், மனைவியும் பிரிந்து வாழ்பவர்களாக இருந்தால், அது சமயம், வெறுப்பு என்ற நிலைகளோ, வேதனை என்ற உணர்வுகளோ இல்லாதபடி,  காலையில் துருவ தியானத்தில் அமர்ந்து, துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நான் பெறவேண்டும், என் கணவர் / மனைவி பெறவேண்டும், எங்கள் இரு மனமும் ஒன்றிட வேண்டும், எங்கள் வாழ்க்கையில் இருளை அகற்றிடும் அருள் சக்தி பெறவேண்டும் என்ற உணர்வினை இருவரும் பெருக்குதல் வேண்டும்.

ஆக, இது போன்று துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வுகளை தங்களுக்குள் பெருக்கி, இல்லற வாழ்க்கையில் இருளை அகற்றிடும் அருள் சக்தி பெறுங்கள். நாம் நமது வாழ்க்கையில், இயற்கையின் உண்மைகளை, அறிந்து கொள்தல் வேண்டும்.

வெப்பம், காந்தம், விஷம் என்று இந்த மூன்று நிலைகளும் இணைந்து, ஒரு அணுத் தன்மை அடைகின்றது.
காந்தம் ஆதிலஷ்மி, எதையும் ஈர்க்கும் சக்தி கொண்டு, எதனையும் தன்னுள் இழுத்து வளர்க்கும் தன்மை என்றும்,
வெப்பம் ஆதிபராசக்தி,  அனைத்தையும் உருவாக்கும் தன்மை பெற்றது என்றும்,
விஷம் ஆதிசக்தி,  எதனிலும் மோதலாகி, அது இயக்க உணர்வுகளை இயக்கும் என்றும்
நமது சாஸ்திரங்கள் தெளிவாகக் கூறுகின்றன.
அதாவது, பெண்பால் ஆகித்தான், ஆண்பால் ஆகின்றது.  ஆகவே பெண்பால் என்னும் பொழுது, அது தாயாகின்றது. பெண்பால், தான் தாய் என்னும் நிலையில், தன் குழந்தைகளையோ, மற்ற நிலைகளையோ, சீர்படுத்தி வளர்க்கும் நிலையில் செயல்படுகின்றது. ஆகவே, நாம் பெண்களைத்  தாயாகவும், நம்மை ஒரு சேயாகவும், மதித்து பழகுதல் வேண்டும்.

இது போன்று,  பெண்கள் ஒவ்வொருவரும், தான் ஒரு தாயாகவும், தான் ஒரு சேயாகவும் இருந்து பழகுதல் வேண்டும்  என்பதைத்தான், இராமாயணமும் மற்ற காவியங்களும் நமக்கு உணர்த்துகின்றன. 

ஆகவே, நம்முடைய எண்ணங்களை ஒன்று சேர்த்து, இணைத்த உணர்வின் தன்மை கொண்டுதான், நாம் விண் செல்ல வேண்டும்.

    ஆகவே, நாம் தினமும் அதிகாலையில் சிறிது நேரமாவது, துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் சேர்த்துக் கொண்டு வருவோமேயானால், நமக்குள் அருள் உணர்வுகள் பெருகும். நம்மையறியாது சேர்ந்த இருளை நீக்கி,  இல்லத்தில் ஒன்று சேர்ந்து வாழும் தன்மை உருவாகும். அங்கே மகிழ்ந்து வாழச் செய்யும், உணர்வுகள் படரும்.

ஒரு இல்லத்தில், பெண்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் பொழுது, அந்த இல்லம் சொர்க்கலோகமாக மாறுகின்றது. 

அந்த இல்லத்தில் உள்ள பெண்களில், யாரேனும் வாட நேர்ந்தாலும் அந்த இல்லமே, குடும்பமே நரகலோகமாக மாறிவிடும். ஆகவே, நாம் பெண்களைத் துன்புறுத்தும் நிலைகளிலிருந்து விடுபட்டு, பெண்களை உயர்வாக எண்ணிப் பழகுதல் வேண்டும்.

ஆகவே, இல்லத்தில் பெண்களை எந்தளவுக்கு மகிழ்ச்சியாக இருக்கச் செய்கின்றோமோ, பெண்களிடத்தில் அன்பு கலந்த உணர்வுகளைச் செலுத்துகின்றோமோ, இதனின் உணர்வுகள் கொண்டு,
அங்கே ஒன்று சேர்ந்து வாழும் தன்மையும்,
இருளை அகற்றும் சக்தியும்,
அருள் ஞானத்தைப் பெருக்கும் நிலையும்,
குடும்பத்தைச் சீர்படச் செய்யும் பண்புகள் வளரவும்,
அன்பின் உணர்வுகள் நமக்குள் பெருகவும்,
மகிழ்ந்து வாழ செய்யும் உணர்ச்சிகள் வளரவும்,
பிறவியில்லா நிலை என்ற நிலைக்கு அழைத்து செல்லும் சக்தியும், பெண்களுக்கு உண்டு.

ஆகவே, நீங்கள் பெண்களை மதித்து நடங்கள், ஆதிசக்தி அதுதான்.

இந்தச் சக்தியின் தன்மை வரும் பொழுதுதான், உடல் சிவமாகின்றது. நுகர்ந்த உணர்வுகள் பிரம்மமாகின்றது. பிரம்மத்தின் தன்மை உடலாகின்றது. எந்த குணத்தின் தன்மை உடலானதோ,  அதனின் உணர்ச்சியாக,  ஞானமான சரஸ்வதி, நம்மை வழிநடத்திச் செல்லும்  என்பதை, நமது சாஸ்திரங்கள் தெளிவாகக் கூறுகின்றன.

ஒரு குடும்பத்தில், தாய்மார்கள் சில நிலைகளில் வெறுப்படைந்து விட்டால், அந்த இல்லத்தில் இருக்கும் முதியவர்கள், குறைகளின் உணர்வுகளை வளர்த்துக் கொள்கின்றனர்.

இப்போது என்ன செய்கிறார்கள் என்றால், வீட்டிற்கு ஒரு மருமகள் வருகிறாள் என்றால், அந்த வீட்டிலிருக்கும் முதியவர்கள், மருமகளாக வந்த பெண்ணிடத்தில் குறைகளைக் கண்டு, குறை கூறும் நிலையில், அங்கே குறையின் உணர்வுகளே வந்துவிடுகின்றது.

முதியவர்களாக இருப்பவர்கள் அனைவரும்,  இந்த உடலை விட்டு செல்லும் பொழுது, எதைக் கொண்டு செல்லுகின்றோம் என்பதை சிந்திக்க வேண்டும்? முதுமை நிலையில் இருக்கும் நாம், நமக்குள் தெளிந்துணர்ந்து வளர்ந்த நாம்,
காலையில் துருவ தியானத்திலிருந்து,
தன் மகன், மருமகளுடன் இருமனமும்
ஒரு மனமாக ஒன்றுபட்டு வாழவேண்டும்,
தெளிந்த மனம் பெறவேண்டும்,
தெளிவான வாழ்க்கை வாழவேண்டும்
என்று முதியவர்கள், இதனின் உணர்வுகளை பாய்ச்சிப்  பழகுதல் வேண்டும்.

ஏனெனில், ஒரு குடும்பத்தில், பெண்கள் வாடிய நிலைகளிலிருந்தால், அவர்கள் எத்தகைய பயிர் செய்தாலும், அது வாடியே போகும். நல்ல பலன் இருக்காது. பெண்கள் வாடிய முகத்துடன் இருக்கும் பொழுது, செய்யும் தொழிலும் சிறப்பாக இருக்காது, அந்தத் தொழிலும் குன்றிவிடும்.

ஆகவே,  அருள்ஞானிகளின் அருள் உணர்வுகளை நமக்குள் சேர்த்து, நமக்குள் ஒன்றுபட்டு வாழும் நிலையும், வீட்டில் மகிழ்ச்சியான உணர்வுகள் பெறவேண்டும் என்ற உணர்வுகளையும், நமக்குள் எடுத்துப் பழகுதல் வேண்டும். 

இது போன்று செய்து வரும் பொழுது, நமது இல்லத்தில் செய்வினைகள் இருந்தாலும் சரி, தோஷங்கள் ஆகிவிட்டது அல்லது நம்மை றியாமலேயே சாப வினைகள் ஆகிவிட்டது, என்பது போன்ற,  எத்தனை பெரிய நிலைகள் இருந்தாலும் சரி, அருள் மகரிஷிகளின் அருள் துணை கொண்டு, இத்தகைய தீய நிலைகளிலிருந்து நாம் விடுபட முடியும்.

குடும்பத்தில் உள்ளோர் அனைவரும், துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் என்ற உணர்வினை தினமும் எடுத்து பழகுதல் வேண்டும். இது உங்களிடத்தில் எத்தனையோ நற்பயன்களை விளைவிக்கும்.
ண்மையான யாகம் எதுவென்றால், அந்தக் குடும்பத்தில் உள்ளோர் அனைவரும்,  துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வைப் பெறவேண்டும்  என்ற உணர்வை, நமது உயிரான நெருப்பினுள் போட்டு, இதனின் உணர்வின் அலைகளை நமது வீடு முழுவதும் பரப்பினால்,  வீட்டினுள் எத்தகைய சாப நிலைகள் இருந்தாலும், எத்தகைய கொடிய நிலைகள் இருந்தாலும் அவையனைத்தும் அகன்றுவிடும்.

கணவன், மனைவிக்கிடையே, எத்தனையோ வேறுபட்ட உணர்வுகளும், மனஸ்தாபங்களும் இருக்கும். ஒவ்வொரு குடும்பத்திலும், பெண்கள் நரக வேதனையைத் தான் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் வெளியிடும் வேதனையின் உணர்வலைகள், இங்கே புவியில் படர்கின்றது. இது போன்ற வேதனையின் உணர்வுகளை, நாம் நுகர்ந்து அறியும் பொழுது, நம்மிடத்தில் இருள் சூழும் நிலைகள் வருகின்றது என்பதை அறிந்த நாம்,  இனியாவது,
நமது குடும்பம்,
நமது குழந்தைகள்,
நமது ஊர்,
நமது நாடு
என்ற நிலைகளில் ஒருங்கிணைந்த நிலை பெறவேண்டும்,  அனைவரும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழவேண்டும் என்ற உணர்வை வளர்த்துக் கொள்ளவேண்டும்.

நமது குடும்பமும், நமது ஊரும் நலம் பெறவேண்டும் என்ற உணர்வைப் பாய்ச்சும் பொழுது, இதனின் உணர்வுகள் ஊர் மக்கள் ஒன்றுபட்டு வாழ உதவும். ஆகவே, நாம் ஒவ்வொரு நாளும்,
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும்
நாங்கள் பெறவேண்டும்,
ங்கள் உடல் முழுவதும் படரவேண்டும்,
ங்கள் ஜீவ ஆன்மா,  ஜீவ அணுக்கள் பெறவேண்டும்,
என் கணவர் பெறவேண்டும்,
ங்கள் குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் பெறவேண்டும்,
ங்கள் ஊரில் உள்ள மக்கள் அனைவரும் பெறவேண்டும்,
ங்கள் நாட்டு மக்கள் அனைவரும் பெறவேண்டும்.
இந்த உலக மக்கள் அனைவரும் பெறவேண்டும்
என்று இதனின் உணர்வுகளை,  நாம் எல்லோரும் பரப்புவோம்.

இதனின் தொடர் கொண்டு, நமது குடும்பத்திலும், நமது ஊரிலும் உள்ள அனைவரும் ஒன்றுபட்டு வாழும் தன்மையும், இருளை அகற்றும் வல்லமையும், மகிழ்ந்து வாழும் தன்மையும் உருவாகும். 

குடும்பமும், ஊரும், நலமாகும் பொழுது நமது உணர்வுகள் அடுத்திருக்கும் ஊரிலும் படர்ந்து, அவர்களையும் பண்படச் செய்து, மகிழ்ச்சியுடன் வாழ செய்கின்றது.

மனிதர்களான நாம், கோடிக்கரை (மனித உடல்) எனும் கடைசி நிலையிலிருக்கிறோம் என்று ணர்ந்து, தனுஸ்கோடி என்னும் கடைசி எண்ணத்தின் நிலைகளாக,   அனைவரும் ஒன்றுபட்டு வாழும் தன்மை கொண்டு, தம் உயிருடன் ஒன்றிய உணர்வினை ஒளியாக்கி, இனிப் பிறவியில்லை என்ற நிலை அடைதல் வேண்டும். இதனின் உணர்வு கொண்டு, மகரிஷிகள் காண்பித்த அருள்வழியில் செயல்படும் அனைவரும்,
அருள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று,
இருளை வென்று, மெய்ப்பொருள் காணும் திறன் பெற்று,
ஒன்றுபட்டு வாழும் நிலை பெற்று,
மகிழ்ந்து வாழும் சக்தி பெற்று,
பிறவியில்லா நிலை என்னும் அருள் சக்தி பெற்று,
பெரு வீடு பெரு நிலை எனும் நிலையைப் பெறும் நிலையாக,
பேரின்பப் பெருவாழ்வாக, வாழ்ந்து வளர்ந்திட எமது அருள் ஆசிகள்.


தொழில்நுட்பம் சம்பந்தமான பாடத்தைப் படிக்கும் பொழுது நீங்கள் எஞ்ஜினியராக ஆகின்றீர்கள். விஞ்ஞானம் சம்பந்தமான பாடத்தைப் படிக்கும் பொழுது நீங்கள் “விஞ்ஞானியாக” ஆகின்றீர்கள்.  மருத்துவம் சம்பந்தமான பாடத்தைப் படிக்கும் பொழுது நீங்கள் டாக்டராக  ஆகின்றீர்கள். 

இதே போன்று,  மெய்ஞானத்தின் உணர்வுகளை உங்களில் வளர்க்கும் பொழுது, நீங்கள் “மெய்ஞானியாகி” மெய்ஞானிகளின் அருள்வட்டத்தில் இணைகின்றீர்கள்.


தன் உடலைக் காக்கும் எண்ணத்தாலே, பரிணாம வளர்ச்சியில் மனித பிறப்பைப் பெற்றோம்.  இந்த மனிதப் பிறப்பில்,  தன் உயிரான்மாவைக் காக்கும் உணர்வை வளர்த்து, ரிஷி நிலை பெறுவோம்.


யாம் உபதேசிக்கும் தத்துவங்களை அறிபவர்கள்,  தங்களால் இந்த தத்துவங்களைக் கடைப்பிடிக்க முடியுமா?  அதன் பலன்களைப் பெற முடியுமா?  என்று தங்களுள் தன்னம்பிக்கையின்றி கேள்வி கேட்டு, சோர்வடைந்துவிட்டால், அதுவே உங்களுக்கு தடைக்கல்லாகிவிடும்.

ஆனால்,  பெறுவோம்முடியும்",  என்ற நம்பிக்கையுடன் கடைப்பிடித்தால், அதன் பலன்கள் உங்களில் நிச்சயம் விளையும்.