ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 17, 2013

மனிதனுடைய எண்ணவலு எப்படிப்பட்டது?

1. மனிதனுடைய எண்ணவலு எப்படிப்பட்டது?
நாம் புழுவிலிருந்து மனிதனாக வருகின்ற வரையிலும் நாம் அறிந்து கொள்வதற்காக, அந்த சந்தர்ப்பத்தில் மிருகங்களுக்கு உடல் பலம் அதிகம். அதே போல மனித உடல் பெற்றபின், எண்ணங்களுக்கு வலு அதிகம். மிருகங்களில் யானை மிகப் பெரியது. அதே போல அதற்கு வலுவும் அதிகம்.

இதைப் போல் நாம் புழுவிலிருந்து மனிதனாக வரக்கூடிய சந்தர்ப்பத்தில், தன்னைக் காத்திடும் எண்ணங்கள் கொண்டு வலுவான நிலைகள் பெற்று, உடல் சிறுத்து, வலுக் கொண்ட எண்ணங்களாக விளைந்தது.

இதற்குத்தான் யானையின் தலையையும், மனிதரின் உடலையும் போட்டு விநாயகரைக் காட்டியது. மிருகங்களில் யானை மிகவும் பெரியது, வலுவானது. அதுபோல, உயிரினங்களிலே மனிதன் எண்ணத்தில் மிகவலிமை பெற்றவன். ஞானத்தின் நிலைகள் வளர்க்கப் பெற்றவன்.

தன் எண்ணத்தின் ஞானத்தின் வலிமை கொண்டு, பெரிய மலையையும், இன்று அவனுடைய சிந்தனையுடைய வலிமை கொண்டு, ஒரு நொடியில் சுக்குநூறாகத் தகர்த்து எறிகின்றான். 
தன்னுடைய சிந்தனை கொண்டு,
இன்று அணுவின் தன்மை தனக்குள் வளர்க்கப்பட்டு,
அந்த ஞானத்தின் தொடர் கொண்டு,
தன் எண்ணத்தின் வலுவால் கண்டறிந்ததைக் கொண்டு,
நூறு மைல் சுற்றளவு கொண்டதையும்
தகர்த்து எறியும் தன்மை பெறுகின்றான்
விஞ்ஞானத்தின் நிலைகொண்டு இவ்வாறு செய்கின்றான்.
2. மெய்ஞானி தனக்குள் வளர்த்த விண்ணின் ஆற்றல்
அதேபோல, தன் எண்ணத்தின் வலுகொண்டு, விண்ணை நோக்கி பல இலட்சக்கணக்கான மைல் தூரத்தில், நமக்கு எட்டாத தூரத்தில் உள்ள நட்சத்திரத்தையும், தன் எண்ண வலு கொண்டு நுகர்ந்தான் மெய்ஞானி.
 
அப்படி அதை நுகர்ந்து, அந்த வலுவினைக் கொண்டு, இந்த மனித வாழ்க்கையில் வரும் வேதனை, வெறுப்பு,
இதைப் போல கடுமையான செயலையும் அடக்கி,
தன் எண்ண வலு கொண்டு,
விண்வெளியில் ஒளி எவ்வாறு இருக்கின்றதோ,
அவ்வாறே அவன் எண்ணங்கள் ஒளி பெற்று,
ஒரு பொருளுக்குள் மறைந்த நிலையை
ஊடுருவிக் கண்டறிகின்றான் மெய்ஞானி.

இன்று விஞ்ஞானி தான் கண்டுபிடித்த “எக்ஸ்ரே”யை, உடலுக்குள் பாய்ச்சும் நிலையில் ஊடுருவிச் சென்று, எலும்புக்குள் உள்ள ஊனையும் காட்டுகின்றது.

நரம்பைக் காட்டுகின்றது, நரம்புக்குள் உள்ள நிலையையும் காட்டுகின்றது. குடலுக்குள் உள்ள பழுதையும் காட்டுகின்றது. இதயத்தையும் எடுக்கின்றது. இதயத்தில் உள்ள பிழையையும் காட்டுகின்றது. இவன் காட்டிய அந்த உணர்வின் ஆற்றல்மிக்க எக்ஸ்ரே,

ஆக ஒன்றைப் பிளந்து, அதற்குள் நுண்ணிய அலைகள் எது இருக்கின்றதோ, அந்தக் கருவியின் துணை கொண்டு, இதை அவன் படமாக எடுத்து, நோயின் தன்மையை அறிகின்றான்.
 
அவ்வளவு ஆற்றல் பெற்ற விஞ்ஞானி, இதைக் கண்டுணர முடிகின்றது. அதைக் கண்டுணர்ந்து அப்புறப்படுத்த முடிகின்றது. அதைச் சரி செய்யவும் முடிகின்றது. எண்ண வலு கொண்டு நோயை நீக்கவும் முடிகின்றது.

ஆனால் இவன் உடலில் விளைவித்த, இந்த உணர்வின் சக்தியை அகற்ற, இவனுக்குச் செயலில்லை. அவன் கண்டுணர்ந்த செயலின் ஆற்றலால், அதை நிவர்த்தி செய்யவும் இயலவில்லை.

அன்று மெய்ஞானி, விண்ணில் எட்டாத தூரத்தில் இருக்கும் ஆற்றலையும் தான் கவர்ந்து,
தன் உடலில் அதைப் பாய்ச்சி,
தன் உணர்வின் நினைவலைகளை ஒன்றுக்குள் பாய்ச்சி,
எக்ஸ்ரே போன்று, ஒரு மனிதனுக்குள் எண்ணங்களைச் செலுத்தி,
எண்ணத்தை ஊடுருவி,
அவனுக்குள் இருக்கும் நோயையும், செயல் சக்தியையும்
தான் நுகர்ந்துணர்ந்து,
அதற்குத் தன் ஒளியாலே, விழியாலே,
தன் எண்ணத்தை வலுக்கூட்டிப் பாய்ச்சி,
அத்தகைய தன்மையை நீக்கினான் மெய்ஞானி.

விண்ணின் ஆற்றலை, எண்ணிலடங்காத தூரத்திலிருந்து வரும் விஷத்தன்மையை தன் ஒளிக் கதிரின் சுழற்சியால் வீழ்த்தி, தன் உணர்வின் சாந்த நிலைகள் கொண்டு, தன் உணர்வின் ஒளிச் சரீரமாக வளர்த்துக் கொண்டார்கள் மெய்ஞானிகள்.
 
அந்த மெய்ஞானிகள் வெளிப்படுத்தும் உணர்வின் எண்ண அலைகள், மனிதனில் தோன்றிய எண்ண அலைகள் போல, அதற்குள் வளர்த்துக் கொண்ட உணர்வின் ஆற்றல்மிக்க இந்த சக்தி விண்ணிலே மிதந்து சென்றாலும், விண்ணிலிருந்து வரக்கூடிய விஷத்தின் ஆற்றலை, தன் அருகிலே வராதபடி அதை வீழ்த்தி, அதைத் தனக்குள் சாதகப்படுத்திக் கொண்டு, விஷத்தை வீழ்த்தும் தன்மை கொண்ட அணுக்களாக, அது படருகின்றது.
3. மெய்ஞானி வளர்த்த விண்ணின் ஆற்றலை நாமும் பெறுவோம்
அந்த மெய்ஞானிகள், தனக்குள் வளர்த்த  விண்ணின் ஆற்றலை நாமும் பெறுவோம்.

விண்ணிலே இருக்கும் மெய்ஞானி, மண்ணிலே தான் இருக்கும் பொழுது, விண்ணின் ஆற்றல்மிக்க சக்தியைத் தனக்குள் வளர்த்துக் கொண்டு, இந்த நிலையை ஆற்றல் மிக்க சக்தியாகத் தனக்குள் மாற்றி, இன்றும் ஒளியின் சரீரமாக இருக்கின்றார்,

ஆனால், அவர் ஒளியின் சிகரமாக அங்கு இருந்து கொண்டிருக்கும், அந்த உணர்வின் ஆற்றல், நம் பூமியில் படர்ந்து கொண்டிருக்கின்றது. அதை நுகர்ந்தறிந்து நாம் எடுப்பதற்கு, நம் எண்ணத்திற்குத் திறன் இல்லை. ஆக, நாம் எண்ணிக் கொண்டிருக்கும் ஆற்றலை, நுகர்ந்தறிவதற்கு அருகே போனாலும், அது நம்முடைய எண்ணத்தை வீழ்த்திவிடும்.

அவர்களின் ஒளியான ஆற்றலை, நாம் நுகர்ந்தறிந்து,
நம் உடலுக்குள் செலுத்திவிட்டாலோ,
நாம் பிறருக்கு உதவி செய்யும் பொழுது அறியாமல் சேர்ந்த
துன்பங்களை, வேதனையான உணர்வின் தன்மைகளை,
அந்த மெய்ஞானியின் உணர்வின் ஆற்றல்
நம் உடலுக்குள் சென்று வீழ்த்திவிடும்.
நம் எண்ணத்தை, பொருளறிந்து செயல்படும்
ஆற்றல்மிக்க சக்தியாக வளர்த்துவிடும்.
4. விண்ணின் ஆற்றலால், நம் ஆன்மா வலுப் பெறும் நிலை
நாம் எண்ணிய நிலைகள் எதுவுமே, தீய உணர்வு கொண்ட நிலைகள் இருந்தாலும், தன்னைப் பாதுகாத்த நிலையில் அந்த மெய்ஞானியின் ஆற்றலை நுகர்ந்து, அதை உடலுக்குள் செலுத்திக் கொண்டபின், நம்முடைய உடலிருந்து வெளிப்படும் “மணம்” சக்திவாய்ந்ததாக மாறும்.

ஏனென்றால், அந்த ஞானியின் ஆற்றல்மிக்க இந்த உணர்வின் சக்தியை, நமக்குள் பதிவு செய்து கொள்ளும் பொழுதுதான், அதைப் பெற முடியும்.

நம் எண்ணத்தால் விண்ணின் நிலையை ஏங்கி, மெய்ஞானியர்களுடன் தொடர்பு கொள்ளும் பொழுது, அந்த மெய்ஞானியின் உணர்வின் அணு நமக்குள் இருப்பதால், அது வீரியம் அடைந்து, உடலிலிருந்து வெளிப்படும் மணம் “நரசிம்ம அவதாரம்” - தீமைகளைப் பிளக்கும் ஆற்றல் என்று கடவுள் அவதாரத்தில் காட்டியுள்ளனர் ஞானிகள்.

தம் உடலுக்குள், தீயவற்றை நுழையாமல் காக்கும் அந்த நிலைகள் பெற்று, விண் சென்றவர்கள்தான் மகா ஞானிகள்.

மற்றவர்கள் செய்யும் தவறான நிலைகளை,
கண் நுகர்ந்து இழுத்தாலும்,
மெய்ஞானிகள் காட்டிய அருள்வழிப்படி,
அதே கண் கொண்டு விண்ணிலே செலுத்தப்படும் பொழுது, அந்த விண்ணின் ஆற்றல் நம்முள் சென்று, உள்ளிருந்து வீசும் அந்த வீரிய சக்தியின் தன்மை நம் உடலிலிருந்து வெளிப்படும்.

அந்த வீரிய சக்தியின் தன்மை வரப்படும் பொழுது, நம்மை அசுத்தப்படுத்தும், வேதனைப்படச் செய்யும், நோய்வாய்ப்படச் செய்யும், சிந்தனையற்றுச் சீர்குலையச் செய்யும், இதே உணர்வினுடைய நிலைகளைப் பிளந்து அதையெல்லாம் நம்முள் அடங்கச் செய்துவிடும்.

நாம் ஒரு கருணைக் கிழங்கை வேகவைத்து, அதன் விஷத்தை மாய்த்து, பின் சுவைபட உணவாக உட்கொள்ளுகின்றோம்.

அதைப் போல, சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வரும் உணர்வின் அலைகளை, நமக்குள் கூட்டப்படும் பொழுது, உடலிலிருந்து வெளிப்படும் மணம்.,
தீய வழியில் நம்மை இட்டுச் செல்லும்
விஷத்தின் தன்மையைப் பிளந்து,
நல்ல சுவாசமாக நம் உடலை மாற்றச் செய்யும்.