ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 30, 2026

குரு பக்தி

குரு பக்தி


நமது வாழ்க்கையில் தீமையான உணர்வுகளை நமக்குள் புகாதபடி தடுக்க  நம் குரு காட்டிய அருள் வழியில் அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நாம் நுகர்ந்தல் வேண்டும்.
 
அதற்கு குரு பக்தி வேண்டும்.
 
1.குரு கவர்ந்த அந்த உணர்வின் சக்தியை
2.குரு பக்தி கொண்டு எவர் கவருகின்றாரோ
3.அவர் நினைக்கும் பொழுதெல்லாம் குருவின் சக்தி எளிதில் கிடைக்கும்.
4.அதன் மூலம் தீமை என்ற நிலைகள் தனக்குள் புகாது தடுத்து நிறுத்த முடியும்.
 
குரு பக்தி குறைந்து எவரொருவர் அதை அலட்சியப்படுத்துகின்றாரோ கிடைத்த சக்தியை உதறி விட்டது போன்று ஆகிவிடும்.
 
நாம் எண்ணும் எண்ணங்களே தெய்வமாகின்றது. கோபத்தின் உணர்வானால் அந்தக் கோபத்தைச் செயல்படுத்தும்  தெய்வமாகின்றது. வேதனையை நுகர்ந்தால் அந்த வேதனையைச் செயல்படுத்தும் தெய்வமாகின்றது.
 
ஆனால் இவை அனைத்தையும் ஒடுக்கித் தீமைகளை அகற்றி அசுர உணர்வுகளைத் தடுத்து உணர்வினை ஒளியாக மாற்றும் மெய் ஒளியின் உணர்வைப் பெருக்கியவர் அகஸ்தியர்.
 
அகஸ்தியர் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமானார்.
1.அதனைப் பின்பற்றி குரு என்ற வழிகளில்நாம் பெற்றோமானால்
2.நமது வாழ்க்கையில் வரும் தீமைகளில் இருந்து விடுபட முடியும்.
3.இந்த உடலுக்குப் பின் பிறவியில்லா நிலைகள் அடைய முடியும்.
 
குரு கொடுத்த உணர்வினைக் கெடுத்துத் தன்னைத் தாழ்த்திக் கொண்டு குருவிற்கு நாம் தவறு செய்தால் அந்தத் தவறின் பலன் முன் பகுதி சந்தோசத்தைக் கொடுக்கலாம். ஆனால் பின் பகுதி அதனின் அனுபவத்தைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.
 
இந்த உடலிலே தான் செய்யும் தவறின் உணர்வை உயிர் உணர்த்திவிடும்.
1.யாரிடத்திலும் பொய் பேசிடலாம்… ஆனால் உயிரிடமிருந்து தப்ப முடியாது.
2.பிறருக்கு நாம் தீங்கு விளைய வைத்து விடலாம்… ஆனால் உயிரிடமிருந்து தப்பவே முடியாது.
3.நாம் தவறு செய்யவில்லை… ஆனால் உயிரிடமிருந்து தப்ப முடியாது.
 
குருவுக்கு விரோதமான நிலைகளில் எவர் நடக்கின்றாரோ அதன் பலன்கள் நிச்சயம் தெரிந்துவிடும்.
1.அவருடைய வாழ்க்கையில் உயிரே அவருக்குள் உணர்த்தி
2.நல்ல பயனைப் பெறும் நிலையைத் தடைப்படுத்திவிடும்.
 
தனக்குத் தவறென்ற உணர்வை உணர்த்தி விட்டால் உணர்வின் அறிவை நிச்சயம் பெற்றே தான் ஆக வேண்டும்.
 
குறுகிய காலமே நாம் வாழ்கின்றோம். இந்த உடலை விட்டு எப்போது சென்றாலும் குரு காட்டிய அருள் வழியில் அருள் மகரிஷிகளுடன் தொடர்பு கொண்டு நாம் அங்கே செல்ல வேண்டும்.
 
ஒருவன் தீங்கு செய்கிறான் என்று அந்தத் தீங்கின் தன்மை பற்று கொண்டால் அதுவே குருவாகின்றது. அந்தத் தீங்கின் விளைவுகள் குருவாக்கப்படும் பொழுது அந்தத் தீங்கின் விளைவே உருவாகின்றது.
 
அதே சமயத்தில்
1.தீமையை அகற்றிடும் நிலைகளை குருவாக ஏற்றுக் கொண்டால்
2.“தீமையை அடக்கிடும் குருஎன்ற நிலைகள் அடைகின்றது.
3.இன்றைய செயல் நாளைய நிலைகளாக அடைகின்றது.
 
ஆகவே நாம் எதனின் நிலைகளை வளர்க்கின்றோமோ அதுவே நமக்குள் குருவாகின்றது.
 
ஒருவரை வேதனைப்படுத்தும் உணர்வினை எடுத்துக் கொண்டால் அந்த வேதனை உணர்வே நமக்குள் உருவாகின்றது. அதுவே குருவாகி நரகலோகத்தைச் சந்திக்கும் நிலையை உருவாக்குகின்றது.
 
திருடன் என்ற நிலைகள் வந்தால் அதுவே குருவாகி திருடன் என்ற நிலைகள் அடைந்து பிறருடைய துன்பங்களை அறியாது தவறு செய்யும் நிலைகளே வருகின்றன. அதுவும் குரு தான்.
 
நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றிய அருள் ஒளி என்ற நிலைகளில்
1.நாம் எந்தக் குருவைப் பின்பற்றுகின்றோமோ அந்த குரு உபதேசித்த உணர்வைத்தனக்குள் எடுத்தால்
2.தீமைகளை அகற்றி அருள் ஒளி என்ற சக்திகளை ஊட்டும்.
 
அரும் பெரும் உணர்வை நாம் பெறுவோம். இந்த வாழ்க்கையில் வரும் இருளை அகற்றுவோம். மெய்ப்பொருள் காணும் நிலைகளை உருவாக்குவோம்.
 
1.அனைத்து உலக மக்களின் உயிரையும் ஈசனாக மதிப்போம்.
2.அனைத்து உலக மக்களும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ வேண்டும் என்று தவம் இருப்போம்.

நீங்கள் சந்தோஷப்பட வேண்டும் என்ற நோக்கத்திலே தான் உபதேசிக்கின்றேன்

நீங்கள் சந்தோஷப்பட வேண்டும் என்ற நோக்கத்திலே தான் உபதேசிக்கின்றேன்


நம் உடலில் நல்ல அணுக்களை எப்படி வளர்க்க வேண்டும்…? தீய அணுக்கள் வராதபடி தடுக்கும் சக்தியாக நம் ஆறாவது அறிவின் தன்மை கொண்டு நம் உடலில் உள்ள ஜீவணுக்களை எப்படிப் பெருக்க வேண்டும்…? என்று தான் உங்களுக்குப் பயிற்சி கொடுக்கின்றேன்.
 
பயிற்சி கொடுத்தும் உடல் ஆசை வந்தால் ராவணனாக மாறி விடுகின்றது. ராவணனாக மாறிவிட்டால் நல்ல குணங்களை அது சாப்பிட்டு விடும். அசுர குணங்கள் கொண்ட அடுத்த உடலாக உயிர் மாற்றிவிடும்.
1.ஆனால் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்தால்
2.உயிரைப் போன்றே ஜீவணுக்களை மாற்றி உடலுக்குப் பின் அழியா ஒளிச் சரீரம் பெறுகின்றோம்.
 
இன்று நடக்கும் யுத்தங்களால் எத்தனையோ கடுமையான விஷங்கள் வந்தாலும் உலகமே அழிந்தாலும் இந்த உயிர் அழியாது நெருப்பிலே பட்டாலும் உயிர் அழிவதில்லை…” உடல் கருகுகிறது. கருகிய உணர்வுகளாக மாறுகின்றது.
 
பிறிதொரு உடலுக்குள் சென்றால் கருகிடும் உணர்வின் இயக்கத்தை அங்கே செயல்படுத்துகின்றது. அடுத்து வேதனைப்படும் உடலாக ஈர்த்து அந்த உடலைப் பெறுகின்றது.
 
உடல் பெறும் சந்தர்ப்பம் பெரும்பகுதி புழுவாகவும் பூச்சியாகவும் பாம்பாகவும் வாழக்கூடிய நிலைதான் வருகின்றது. விஷ அணுக்கள் பரவும் பொழுது மனித உடலிலே இது பர்ந்து விட்டால் இந்த உடலுக்குப் பின் கிருமிகள்தான் அதிகமாகும் பூச்சிகளாகத்தான் உருவாகும். மனித நிலைப் பெறுவது கடினமாகிவிடும்.
 
ஆகவே
1.இன்று கவலையும் சஞ்சலத்தையும் சங்கடத்தையும் துரத்தி விடுங்கள்.
2.கவலையும் சஞ்சலமும் சோர்வும் பெரும் பிசாசாக மாறி நல்ல குணங்களை அழித்திடும் அத்தகைய நிலைகளை அப்புறப்படுத்துங்கள்.
 
கவலையும் சோர்வும் வரும் பொழுது தாங்க முடியவில்லை என்றால் கோபமும் பழி தீர்க்கும் உணர்வுகளையும் கூட்டி வெறுப்புணர்வாகி இந்த உடலையே வெறுக்கும் நிலை வருகிறது. வெறுத்து மற்றவர்களைத் தாக்கும் உணர்ச்சிகளையும் கொண்டு வருகின்றது.
 
இதிலிருந்தெல்லாம் நீங்கள் விடுபட வேண்டும்.
1.குரு அருள் உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று தான் உபதேசித்துக் கொண்டு வருகின்றேன்.
2.வீட்டுக் கவலையும் சலிப்பையும் சங்கடத்தையும் விட்டு விடுங்கள்.
3.குருநாதர் காட்டிய வழியில் தியானிப்போம் என்ற நிலைக்கு வாருங்கள்.
4.எல்லோருக்கும் என் மீது நல்ல அன்பு வளரட்டும்.
5.குடும்பத்தில் அனைவரும் நல்லவராக வளரட்டும் ஒன்றுபட்டு வாழும் நிலை பெற வேண்டும்
6.உலக மக்கள் அனைவரும் நல்ல உணர்வு பெற வேண்டும் என்று எண்ணித் தியானித்துப் பாருங்கள்.
 
யாம் உபதேசித்த உணர்வுகள் அனைத்தும் இங்கே இருக்கின்றது அந்தப் பதிவு உங்களிடம் இருக்கின்றது உபதேசித்த உணர்வுகள் அலைகளாகக் காற்றிலே பரவி உள்ளது உலகம் முழுவதும் உள்ளது.
 
1.அதை நீங்கள் எடுத்து வளர்த்துக் கொள்ள வேண்டும் அதற்குண்டான சந்தர்ப்பத்தைத் தான் உருவாக்குகின்றோம்.
2.நீங்கள் அனைவரும் சந்தோஷப்பட வேண்டும் என்ற நோக்கிலே நான் குரு வழியில் இதை உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.