ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 5, 2012

அருள்ஞானப் பொக்கிஷம்


 சாமி புத்தகம் அருள்ஞானப் பொக்கிஷம்  
 (பக்கம் -12-21)

ஒரு சமயம், நமது குருநாதர் எமக்கு தங்கத்திற்கு எந்த அளவு வலு இருக்கிறது, செம்பிற்கு எவ்வாளவு வலு இருக்கின்றது, ஈயத்திற்கு எவ்வளவு வலு இருக்கிறது என்பதை காண்பித்து உணர்த்துவதற்காக, இரும்புக் கரண்டியைக் கொண்டுவா, என்று எடுத்து வரச்செய்து, எம்மைக் காட்டிற்குள் அழைத்துச்  சென்றார். 

அங்கே சென்றபின், சில குப்பைகளை எடுத்து வரச்சொன்னார். அவர் சொன்ன குப்பைகளை, யாம் எடுத்துவர வேண்டும். யாம், வேறு இடத்திற்கு செல்லக் கூடாது. அந்த குப்பைகளில், சில தாவர சத்துகள் உண்டு. கொண்டு வந்த  குப்பைகளை பொடியாக்கச் சொன்னார்.

பிறகு, சில கட்டைகளை எடுத்துவரச் சொன்னார். கட்டிகளுக்கு நெருப்பு வைத்து, இரும்பு கரண்டியை   வைத்து,  இரும்புக் கரண்டியில் ஈயத்தைப் போட்டோம். ஈயத்தைக் கரண்டியில் போட்டு உருக்கியபின், ஈயம் மென்மையாகின்றது. உருகிய ஈயத்தினுள், யாம் கொண்டுவந்த குப்பைகளை போட்ட சிறிது நேரத்தில், ஈயம் "தக தக" என மின்னியது.

தாவர இனங்களில், ஒவ்வொரு செடிகளிலும், ஒவ்வொரு விதமான பாதரசம் உண்டு. செடிகளை எரிக்கும் பொழுது பார்க்கலாம். செடிகள் எரியப்படும் பொழுது, அதில் சில வகையான எண்ணைகள்   கசிவாகும்.

இதைப்போன்று, அந்த குப்பைகளைப் போட்டு எரிக்கப்படும்போது, கசிந்த உணர்வுகள் ஈயத்துடன் கலந்து, இணைந்து, மின்ன ஆரம்பித்தது. இரும்பு, ஒரு புறம் கரையத் தொடங்கியது. ஆனால், ஈயம் கரையவில்லை, குழம்பாக மாறுகின்றது. அதனுள், குப்பைகளின் உணர்வின் சத்து கலந்தபின், அதனுள், "தூ.. தூ..." என்று  மூன்று முறை துப்பச்   சொன்னார்.

பிறகு, குருநாதர் அதைக் காண்பித்துஎப்படி இருக்கிறது? என்று கேட்டார்.
அதற்கு யாம், “பள… பள…” என்று இருக்கிறது, என்று சொன்னோம்.

பளார்..” என்று இரண்டு உதை கொடுத்தார்மீண்டும் எப்படி இருக்கிறது என்று கேட்டார்.
மீண்டும் “பள… பள…” என்று இருக்கிறது என்று சொன்னோம்.

இன்னும் இரண்டு உதை கொடுத்தார்.
மூன்று, நான்கு தடவை அடிஉதை வாங்கிய பிற்பாடுதான்
யாம் தங்கம்போன்று இருக்கிறது என்று சொன்னதும், “தூ” என்று துப்புடா என்று கூறினார்.


திரும்பவும் குப்பைகளைப் போட்டு மூடச்  சொன்னார். பார்த்தால், தங்கமாக இருக்கின்றது.. அந்த தங்கத்துடன் செம்பைச் சேர்த்தால்தான், நெளிந்து கொடுக்கும் தன்மை வரும். அதைக் கொண்டு போய், விற்றுவா  என்றார்.

குருநாதர் கொடுத்தனுப்பிய, தங்கத்தை எடுத்துக் கொண்டு கடைக்கு விற்கச் சென்றால், அந்தக் கடைக்காரர் எம்மைப் பார்த்து, "நீ ஒரு பைத்தியக்காரன், அதனால்தான், இன்னொரு பைத்தியத்துடன் சேர்ந்து சுற்றுகின்றாய்" என்று நான் நினைத்தேன். ஆனால், பைத்தியத்திடம் ஏதோ விஷயம் இருக்கிறது என்றுதான் நீ சுற்றியிருக்கின்றாய்.

நீ, எவ்வளவு வேண்டுமானாலும் தங்கம் கொண்டுவா. நான் வாங்கிக் கொள்கின்றேன். வேறு யாரிடமும் சொல்லிவிடாதே, என்று கடைக்காரர் கூறினார். ஆசை யாரைவிட்டது. ஆனால், அந்த கடைக்காரர் இப்போது, உயிரோடு இல்லை, இறந்துவிட்டார்.

அடுத்தாற்போன்று, குருநாதர் சொல்லிக் கொடுத்தது போன்று செய்தால், மறுபடியும் தங்கம் கிடைக்கின்றது. தங்கம் செய்து, யாம் விற்றுவிட்டு வரும்போது, குருநாதர் நடுரோட்டில் அமர்ந்து, “தங்கத்தை விற்றுவந்த பணத்தை முழுவதும் கொடுடா, என்னுடைய பிள்ளைகள் காத்துக் கொண்டு இருப்பார்கள், என்று சொல்லி பணம் முழுவதையும் வாங்கிக் கொண்டுவிட்டார்.

“நீ தங்கம் செய்வதற்கு, எத்தனையோ வேலைகள் செய்தாய்.
நீ, உன் மனதைத் தங்கமாக்கினாயா?
நீ உன் ஆசைகளையெல்லாம் கூட்டி, இந்த உடம்பில் சேர்த்து,
இந்த ஆசையின் உணர்வுகளை உன்னுள் வளர்த்துவிட்டால்,
நீ எங்கே செல்வாய்?” என்று குருநாதர் எம்மிடம் கேட்டு,
அதற்கொரு உபதேசம் செய்து
நம் குணத்தை, தங்கமாக்கும் உபாயத்தை போதித்தார், நமது குருநாதர்.

நாம் நினைக்கிறோம், ஒருவனை ஏமாற்றிவிட்டோம். அவனுக்கு தெரியாமல் காரியத்தை சாதித்துவிட்டோம். நம்மை என்ன, ஆண்டவனா பார்த்துக் கொண்டிருக்கிறான்? என்று நினைக்கின்றோம்.

கடவுள் என்று சொன்னால், இன்று இருப்பவர்கள் கடவுளுக்கு அபிஷேகம், ஆராதனை செய்தால், அவன், நாம் செய்யும் தவறுகளைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவான் என்று எண்ணுவார்கள். மேலும், ஒருவனை மோசம் செய்து, கள்ளத்தனமாக சம்பாதித்து, கடைசியில் “என்னைக் காப்பாத்துடா” என்று உண்டியலில் கொஞ்சம் பணம் போட்டால், கடவுள் நம்மை மெச்சிக் கொள்வார் என்றுதான் எண்ணத்தை வளர்த்திருக்கிறார்கள்.

இதை குருநாதர் எமக்கு உணர்த்தி, “நீ சம்பாதித்த பொழுது,   உன்னுடைய மனதைத் தங்கமாக்குவதற்கு பதில், நீ உன்னுள் ஆசைகளை வளர்த்துக் கொண்டால், உன்னுடைய நிலை என்னவாகும்?” நீ சேமித்து வைத்த பணத்தை, உன்னுடைய பணத்தை, நண்பனே கடனாக வாங்கிக் கொண்டு செல்கிறான். கடன் வாங்கிக் கொண்டு போனவன், திரும்பக் கொண்டுவந்து கொடுக்கவில்லை என்றால், “வாங்கிக் கொண்டு போனவன் கொடுக்கவில்லை” என்று வேதனையின் உணர்வைக் கருவாக்கி, அதை நினைவாக்கப்படும் பொழுது, உன்னுள் ஏமாற்றத்தை உருவாக்கும் உணர்வை, கருவாக்கிவிடும்.

வருகிறவர்களிடம் எல்லாம், “என் நண்பன் என்னை ஏமாற்றிவிட்டான், அவன் என்னை ஏமாற்றிவிட்டான்”, என்று சொல்லும்போது, வந்தவனும் இதைக் கேட்டுவிட்டு, “நீங்கள் எல்லோருக்கும் உதவி செய்தீர்கள், ஆனால், அவர்கள் நீங்கள் செய்த உதவிகளையெல்லாம் மறந்துவிட்டார்கள்” என்றும், “ஆஹா.. ஓஹோ…” என்றும் உன்னைப் புகழ்வார்கள்.

இரண்டு மூன்று நாள்கள், புகழ்ந்து தள்ளிவிட்டு, நான்காவது நாள் வந்து “எனக்கு ஒரு ஆயிரம் ரூபாய் கடன் கொடுங்கள்” என்று கேட்பார். அவருக்கு கொடுத்தால், பிறகு அவர் என்ன செய்வார்? போய்விடுவார். அதன் பிறகு, அவர் அந்த பக்கமே வரமாட்டார்.

முதலில் உன்னை புகழ்வார். பத்து நாளில் தருகிறேன், கொடு என்பார். வாங்கினால், அதன் பிறகு வரமாட்டார். ஆக, முதலில் ஏமாற்றியவரைப் பற்றி இவரிடம் சொன்னால், இரண்டாமவரிடமும், இதே உணர்வுகள் வளர்ந்து, அவரும் உன்னை ஏமாற்றத் தான் செய்வார்.

அவருக்குள், அந்த கருவின் தன்மை வளர்ந்து, நீ சொன்ன உணர்வை அவர் நுகர்ந்து, அந்த உணர்வின் தன்மை, கருவிற்குள் இருக்கும் அணுவிற்கு உணவாக அமைந்து, அந்த உணர்வின் தன்மை கொண்டு, அவருடைய வாழ்க்கை அமைகின்றது. நாம் யாருடனாவது பிரிந்திருக்கின்றோமா? இல்லை. எவரும் தனித்து இல்லை என்பதை, எமது குருநாதர், யாம் தெளிவு பெறும் நிலையாக, உபதேசித்தார்.

மேலும் குருநாதர் எம்மிடம், ஒவ்வொருவரின் மனமும், தெளிவாகி, உயரவேண்டும் என்று நீ எண்ணு.  அவர்களுடைய மனம், தங்கமாக வேண்டும் என்ற எண்ணத்தை, உன்னுள் வளர்த்துக் கொள். இப்போது, நீ தங்கம் செய்து கொண்டு போய்க் கொடுத்தாய். “இன்னும் கொண்டுவா” என்று சொல்லி, வாங்கிக் கொள்கிறார்கள். நான் கற்றுக் கொடுத்த உணர்வை, நீ என்னிடமே திருடுகிறாய். தெரியாமல்தான் செய்தாய். ஆசை உன்னையும் விட்டதா? தங்கம் செய்து கொண்டு போய் விற்றால், காசு வரும், ஆனால், நான் சொல்லும் உண்மைகளையெல்லாம், உன்னால் அறிய முடியுமா? முடியாது என்று கூறினார் குருநாதர்.

காசு வரும். அமர்க்களமாக இருப்பாய். ஊரார் உன்னைப் புகழ்வார்கள். காசைக் கொடுத்தால், உனக்காக எல்லாம் செய்கிறேன் என்பார்கள். என்னிடமே சில பேர் வந்து, “தங்கம் செய்யும் வித்தையை சொல்லிக் கொடுங்கள், உங்கள் பேரிலேயே பெரிய கோவில் கட்டுகிறோம்” என்கிறார்கள். அவர்கள் கட்டித் தருவதற்கு பதில், என்னாலேயே கட்டமுடியாதா? என்று குருநாதர் மனிதனுடைய ஆசையின் தன்மைகளை, எடுத்து உபதேசித்தார்.

நாம் நுகர்ந்த உணர்வுகளை, உயிர் உருவாக்குகின்றது.
உணர்வின் தன்மை, நமக்குள் அணுவான பின்,
அதற்கு உணவு தேவை. ஆகையால்,
உருவான அணு உணர்ச்சிகளைத் தூண்டி,
காற்றிலிருக்கும் சத்தைக் கவருகின்றது.
அது வளர்ச்சி அடையும் பொழுது, நமது ஆசைகள், அங்கே தான் செல்லும்.
நமக்குள் அறியாது சேரும் உணர்வுகள்
நமது நல்ல குணங்களான தங்கத்தை, மங்கத்தான் செய்யும்.

தங்கத்தில் நகை செய்யும் பொழுது, செம்பும், வெள்ளியும் கலந்துதான் ஆகவேண்டும். அதுபோன்று, நம்முள் நம்மை அறியாது கலந்துவிட்ட, நஞ்சின் உணர்வுகளை சுத்தமாக்கவில்லை என்றால், நாளுக்கு நாள் ஒவ்வொரு செயலிலும், அதனின் இயக்கச் சக்திகள் சேர்ந்து, நமது நல்ல குணங்களான தங்கம் குறையும்.

நாம் நல்ல குணங்களைக் கொண்டு, ஒருவருக்கு உபகாரம் செய்தாலும், அவர்கள் சொல்லும் வேதனையின் உணர்வுகளை நுகர நேர்ந்து, நமது நல்ல குணத்திற்குள் சேர்ந்துவிடுகின்றது. ஒவ்வொரு நேரத்திலும், ஒவ்வொரு செயலிலும், பிறரின் வேதனையின் உணர்வுகளை, நாம் நுகராமல் இருக்கமுடியாது. நுகர்ந்தபின், நம்மிடத்தில் நல்ல குணங்கள் மங்குகின்றது. அதை மாற்ற வேண்டுமல்லவா?

     நம் வாழ்க்கையில், இதைப் போன்ற தீமைகள் வரும் பொழுது அதை மாற்றியமைக்கும் சக்தியை, நாம் பெறும் நிலையாகத்தான், கோவில்களிலே தெய்வத்திற்கு, தங்க நகைளை அணிவித்துள்ளார்கள். ஆக, அதை உற்றுப் பார்த்தவுடன், அந்த தங்கம் எப்படி மங்காமல் இருக்கின்றதோ,
அந்த தங்கத்தைப் போன்ற "மங்காத மனம்” நாம் பெறவேண்டும்.
எங்கள் குடும்பத்திலுள்ளோர் அனைவரும், "தங்கத்தைப் போன்ற மங்காத மனம்" பெறவேண்டும்,
இந்த கோவிலுக்கு வருவோர் அனைவரும், "தங்கத்தைப் போன்ற மங்காத மனம்" பெறவேண்டும்.,
நாங்கள் பார்க்கும் அனைவரும், அந்த "தங்கத்தைப் போன்ற மங்காத மனம்" பெறவேண்டும்.
என்று எண்ணி எடுத்து, அந்த சக்தியை நமக்குள் சேர்த்து, அறியாது வரும் தீமைகளிலிருந்து, விடுபடும் ஆற்றல்களை பெறும்படி செய்தனர், நமது மெய்ஞானிகள். 

 (பக்கம் 30,31)
நாம் ஒவ்வொரு சமயமும், நம்முள் தீமையின் நிலைகள் உட்புகாதவாறு, விழித்திருக்க வேண்டும் என்பதை நினைவுபடுத்துவதற்காக, “மகா சிவன்ராத்திரி அன்று விழித்திருக்க வேண்டும்” என்று ஞானிகள் உருவாக்கிக் கொடுத்துள்ளனர்.
சிவன்ராத்திரி அன்று, இரவு விழித்திருக்கும் வேளையில்,
விடிய விடிய, எத்தனை பேரை நினைவுக்கு கொண்டு வரமுடியுமோ,
அவர்களை எல்லாம் நினைவுக்கு கொண்டு வந்து,
“அவர்கள் அனைவரும்
மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்” என்று,
எண்ணி ஏங்க வேண்டும்.

அதன்பின், அதிகாலையில் “துருவ மகரிஷிகளின் அருள் உணர்வுகள் நாங்கள் பெறவேண்டும்” என்று இந்த எண்ணத்தை, நம்முள் அதிகமாக செலுத்த வேண்டும். இதுதான், சிவன்ராத்திரி அன்றைக்கு “விழித்திரு” என்பதன் நோக்கங்கள்.
மனிதன் தன்னை பண்படுத்திடவும்,
பண்படுத்தப்பட்ட உணர்வுகளை, அவன் தனக்குள் சேர்த்திடவும்,
தீமைகளின் உணர்வுகளை அடக்கிடவும்,
மகரிஷிகளின் அருளுணர்வுகளை, தனக்குள் சேர்த்திடல் வேண்டும்.
காலையில், துருவ நட்சத்திரத்திலிருந்து புவிக்கு வரும், அருளாற்றல்களை உங்களை பெறச் செய்வதற்கு, அருள் ஞானிகள் உங்களை நல்வழிப்படுத்துகின்றனர்.

எந்த மதமானாலும், காலையில் 4½ மணியிலிருந்து 6 மணிக்குள், ஆலயமணிகளின் ஒலி எழுப்பி, உங்களை ஆலயங்களுக்கு அழைக்கின்றனர். ஆனால், ஆலயங்களுக்குச் சென்றபின், தன் தன் ஆசைகளைத் தான் கூட்டுகின்றனர். ஆண்டவன், எங்கேயோ இருக்கின்றான். அவனை வேண்டினோம் என்றால், அவன் நமக்குக் கொடுப்பான், என்ற இந்த உணர்வைத் தான் வளர்த்திருக்கின்றோம்.

நீங்கள் எந்த ஆலயத்திற்குச் சென்று, ஆண்டவனை வணங்கினாலும், உங்களிடத்திலுள்ள தீமைகளை அகற்றி, அருள் மகரிஷிகளின் உணர்வுகளை உங்களிடத்தில் சேர்க்காது, எந்தவொரு வேண்டுதலும் பயனளிக்காது.

ஆகவே, துருவ தியான நேரத்தில், நல்லுணர்வின் தன்மையை கருவாக்கிக் கொள்ளவேண்டும். ஆலயங்களுக்குச் சென்றால், “மகரிஷிகளின் அருள் சக்தி இந்த ஆலயம் முழுவதும் படரவேண்டும் இந்த ஆலயத்திற்கு வரும் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்” என்று எண்ண வேண்டும்.

 (பக்கம் 32-34)
ஒரு நோயாளியைப் பார்க்கின்றோம். நமக்கு மிகுந்த பழக்கமானவர் என்பதால், அவரை அன்புடன் பார்க்கின்றோம். அவர் உடலில் விளைந்த நோயின் உணர்வலைகள் அவரிடமிருந்து வெளிப்படுகின்றன. நமது கண் அவரை உற்றுப் பார்க்கப்படும்பொழுது, அந்த மனிதரின் உணர்வை, ஊழ்வினை என்ற வித்தாக பதிவாக்குகின்றது.
அவர் மீது அன்பு கொண்டு,
அவருடைய உணர்வுகளை நம்முள் பதிவாக்கி
“அடடா… நல்ல மனிதர் எப்படி இருந்தார்? எப்படி ஆகிவிட்டார்”
என்று எண்ணினால் போதும், T.V. போன்றவைகள்,
ஒளிபரப்பு நிலையங்களிலிருந்து, ஒளி பரப்பும் ஒளி அலைகளைக் கவர்ந்து,
இங்கே உருவங்களைக் காண்பிப்பதைப் போன்று,
நாம் எண்ணும் எண்ணம், இங்கே பரவிக் குவிந்து கிடக்கும் உணர்வை அவருடைய உடலின் உருவமே, காட்சியாக நமக்குத் தெரியும்.

அப்போது, அதிலிருந்து வரக்கூடிய உணர்வின் தன்மையை நுகர்ந்து, நமது உணர்வின் அணுக்களுக்கு உணவாக கொடுக்கின்றது. ஆக, நமது கருவிழி, அந்த மனிதரை பதிவாக்கப்படும்போது, அந்த நினைவே, அந்த ரூபத்தை கூட்டிகொண்டு வரும். ஆகவே, அதனின் உணர்வுகளை நுகரப்படும்பொழுது, நுகர்ந்த உணர்வுகள், நம்மை சோர்வடைய செய்கின்றன.

நாம் துணிகளை நெய்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். வேதனையின் உணர்வுகளைக் கேட்டறிந்து, நெய்யும் தொழிலைச் செய்யும்பொழுது, நமது நல் உணர்வின் வலிமை இழந்து, நாடாவைச் சீராக அமைக்க முடியாத நிலை உருவாகின்றது. நாடா வெடிப்பு ஏற்பட்டு, நூல்கள் அற்றுக் கொண்டே இருக்கும்.

உதாரணமாக, நீங்கள் வேதனையின் உணர்வுடன் குழம்பு வைத்து சாப்பிட்டால், அதில் ருசி இருக்காது. அந்த வேதனைக்குரிய உணர்வுகள் தான், அங்கே உருவாகும். குழம்பில் கலவை சரியில்லாமல் போனால், சுவையே மாறிவிடும். சீரகம் அதிகமாகி விட்டால், உமட்டல் வரும். உப்பை அல்லது காரத்தை குறைத்துவிட்டால், அது தன் உணர்ச்சிகளைத் தூண்டும் நிலை, குறைந்துவிடும். நம்முடைய எண்ணங்கள் எதுவோ, அதன்படிதான் குழம்பே அமையும்.

இதைப் போன்று, குறையின் உணர்வை எடுத்துக் கொண்டு, வியாபாரத்திற்கு செல்கிறீர்கள். அப்பொழுது, ஒரு இடத்திற்கு அவசரமாகச் செல்லவேண்டும் என்று எண்ணுவீர்கள். ஆனால், அதே சமயம், நன்கு தெரிந்த நண்பர் ஒருவர் எதிரே வருகின்றார். போகும்போது வருகின்றாரே, என்ற இந்த உணர்வு கலந்துவிட்டால், சோர்வடைகின்றது.

இந்த உணர்வுடன், நீங்கள் சரக்கு எடுத்துக் கொண்டு போனீர்கள் என்றால், அங்கே தரமான சரக்கைப் பார்த்து, எடுக்க முடியாது. நல்ல சரக்குகளை விட்டு விட்டு, சோர்வுக்குத் தக்கவாறு, தரக்குறைவான சரக்குகளைத் தேர்ந்தெடுப்போம்.

நாம் வியாபாரத்திற்கு, சோர்வுடன் தேர்ந்தெடுத்த சரக்குகளை வைத்திருந்தால், தெளிவாக வரக்கூடியவர்கள் என்ன செய்வார்கள்? பார்த்தவுடனே குறைவாக எண்ணுவார்கள். நாம் சொல்லும்போதே, சோர்வின் உணர்வுகளை கலந்து, அவருடைய செவிகளில் படுகின்றது.

அவர்கள் ஒரு முறை பார்த்தவுடனே, சரக்கு மட்டம் என்று கூறுகின்றனர். நமக்கு அவர் மேல் வெறுப்பு வரும். அந்த வெறுப்பின் உணர்வை நுகர்ந்து, “நான் பார்த்துத்தான் சரக்கை எடுத்து வந்தேன், இது நல்ல சரக்கு” என்று திருப்பிக் கூறினால், வெறுப்பின் உணர்வு தாக்கப்பட்டு, சரக்கைப் பார்த்தபின், சுத்தமாக “மட்டம்” என்று அவர் சொல்லிவிட்டு போய்விடுவார்.

ஆனால், நாம் “நல்லதுக்கு காலமில்லை”, நல்ல பொருளை வாங்கி வைத்திருக்கிறேன், “மட்டம்” என்று சொல்லிவிட்டு போகிறான், அங்கே ஏமாற்றுபவனிடம், கூட்டம் குவிகிறது பார் என்றும், “நேர்மையாகச் சொன்னால், உங்களுக்கு பிடிக்காது. ஏமாற்றுபவனைக் கண்டால்தான் உங்களுக்குப் பிடிக்கும்” என்றும் சரக்கு வாங்க வருபவரிடம் சொல்கிறோம்.
இது, எந்த உணர்வுடன் கலந்து,
இந்த சொல் வருகின்றது
என்பது நமக்குத் தெரியாது.
ஆக, எதிரி வேறு எங்கும் இல்லை,
நம் உடலுக்குள்தான் இருக்கிறான். வெறுப்பின் உணர்வு, நம்முடைய வியாபாரத்தை மந்தமாக்குகின்றது. இப்படி ஒவ்வொருவிதமான வேதனை, வெறுப்பு என்ற உணர்வுகளை நாம் நுகர்கின்ற பொழுது, நம் உயிர் இவைகளையெல்லாம் நமது இரத்த நாளங்களில் அணுக்கருக்களாக மாற்றிக் கொண்டே இருக்கும்.


(பக்கம் 42-45)
நமது கண், காது, மூக்கு, வாய், உடல் இதைத்தான் பஞ்ச பாண்டவர்கள் என்றார்கள். ஆக, நமது கௌரவம் குறைந்து விடுமே என்ற உணர்வு வரப்படும் பொழுது, கௌரவர்களுக்கும், பஞ்ச பாண்டவர்களுக்கும் போராகின்றது. பஞ்ச பாண்டவர்கள் தான், நம்மை ஆளக்கூடியவர்கள் என்றாலும், இந்த உணர்வின் தன்மை கொண்டு நம்மை ஆட்சி புரிவது, கௌரவர்கள்.

ஒருவர் நம்மை தரக்குறைவாகப் பேசி அதை காதால் நாம் கேட்கப்படும்பொழுது நமக்குள் உணர்ச்சியைத் தூண்டுகின்றது. அப்போது கௌரவப் பிரச்சினை வந்து,  இப்படி நம்மை சொல்லிவிட்டானே என்று நமது கௌரவம் குறைந்ததாக எண்ணி வேதனைப்படுகின்றோம்.  இப்படி வேதனை என்ற நிலைகள் வரப்படும்பொழுது, விஷத்தன்மைகள் நமக்குள் வருகின்றன.

நமது கண், காது, மூக்கு, வாய், உடல் இவை ஆட்சி புரிந்தாலும் கௌரவப் பிரச்சினை என்று வரப்படும்பொழுது, கௌரவர்களுக்கும் பஞ்ச பாண்டவர்களுக்கும் போராகிறது என்பதை காவியத் தொகுப்புகள் தெளிவாகக் கூறுகின்றன.

நமக்கு பணம் தர வேண்டியவர், தரவில்லை என்று ஒரு பக்கம் வேதனை; நாம் தருகிறோம் என்று கூறியவருக்கு, தரவில்லை என்றால் கௌரவம் போய்விடுமே என்று ஒரு பக்கம் வேதனை; நமக்கு தரவேண்டியவன் தருகிறேன் என்று சொல்லி தரவில்லையே என்று, கோபமும், ஏமாற்றிவிட்டானே என்ற வேதனையும் சேர்ந்து எலிப்பொறியில் சிக்கியது போன்று ஆகிவிடுகின்றது. இதனின் வேதனைகளாகும் பொழுது, அது நமக்குள் நரகாசுரனாக உருப்பெறுகின்றது.

அதே சமயத்தில் மனிதன் ஒருவன் மற்றொருவனை எண்ணி, அவன் நமக்கு நன்மை செய்தான் என்று எண்ணினால் அவனுக்கு விக்கல் ஏற்படுகின்றது. அவன் நமக்கு தீமைகள் செய்தான் என்று எண்ணினால் அவனுக்கு புரையேற்படுவதைப் போன்று, நாம் நமக்கு தர வேண்டியவனிடம், எனக்கு பணம் தராமல் இருந்துவிட்டானே என்று உற்று நோக்கும்பொழுது, அவனிடத்தில் இதனின் உணர்வுகள் பதிவாகி, நல்ல குணங்கள் செயலற்றதாக மாறுகின்றது. அவனிடத்தில் இனம் புரியாத பதட்டம் வரும். அவருடைய வியாபாரம் குறையும். அவர் சீராக இயங்கும் தன்மையும் குறையும்.

அவரும் எண்ணுவார், அவருக்கு கொடுக்கவேண்டுமே, சரியான காலத்தில் அவருக்கு கொடுக்கவில்லையே என்று நம்மை எண்ணி எண்ணி வேதனைப்படுவார். வேதனையின் உணர்வுகள் அவரிடத்தில் விளைகின்றது. கொடுக்க முடியாத நிலையில், அவருடைய வேதனை அதிகரிக்கும் பொழுது, நம்மைப் பற்றிய நினைவு அவரிடத்தில் அதிகரிக்கின்றது.

இப்படி, நம்மால் அவர் எடுத்துக் கொண்ட வேதனையின் உணர்வுகள் நோயாக மாறுகின்றது. அவர் நோயுடன் இருக்கும்பொழுது, நீ வேண்டும் என்றே, எனக்கு பணம் தரவில்லை, என்று நாம் கடுமையாக பேசும்பொழுது அதனின் உணர்வுகள் வளர்ந்து நரகாசுரனாக உருவாகிவிடுகின்றது.

அதுமட்டுமல்லாமல், நம்மைப்பற்றிய நினைவு கொண்டு, வேதனையின் உணர்வுகளை வளர்த்து, அது அவருள் கடுமையான நோயாக மாறி, அவருடைய உடலை விட்டு உயிராத்மா பிரிந்தால், அவருடைய உயிராத்மா நேராக நம்மிடத்தில் வந்துவிடும். வாங்கிய பணத்தைக் கொடுப்பதற்குப் பதிலாக, அவருடைய உயிராத்மா  நம்முள்  வந்துவிடுகின்றது.

அவர் தமக்குள் சேர்த்துக்கொண்ட நரக வேதனையின் உணர்வுகளை இங்கே உருவாக்கிவிடுகின்றது; இது ஒரு பக்கம். அதே சமயம், இவர் கேட்டாரே, அவருடைய பணத்தைக் கொடுக்க முடியவில்லையே, என்று அவர் எடுத்துக் கொண்ட வீரிய உணர்வுகள் சாப அலைகளாக மாறுகின்றது.

இதைப் போன்ற நிலைகள்தான், மற்றவருக்கு பணம் தர வேண்டிய நிலையில், கொடுக்க முடியாத பொழுதும் உருவாகின்றது. அவருடைய சாப அலைகள், வளர்ச்சி அடைந்தபின், அவருடைய உயிராத்மாவும் நம்முடலில் புகுந்து, பேய்மனம் என்ற நிலையில் நோயின் நிலைகளை, நம்முள் உருவாக்கிவிடுகின்றது. அதன்பின், நாம் இந்த உடலைவிட்டுச் சென்றால், மனிதனல்லாத பிறவியாகப் பிறக்கின்றோம். இதைத்தான், சிவனின் கணக்குப்பிள்ளை நந்தீஸ்வரன் என்று சிவதத்துவத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

வேதனையின் உணர்வை நுகர நுகர, அந்நிலைகள் அவரிடத்தில் அதிகரித்து, யாரை நினைத்து வளர்த்துக் கொண்டாரோ, அதன் நிலைகள் கொண்டு, உடலை விட்டு அகன்றால் இந்த உயிராத்மா அங்கே சென்று, விஷத்தின் தன்மைகளை உருவாக்குகின்றது.

இதுபோன்ற சந்தர்ப்பங்களில், வேதனையின் உணர்வுகளால், நம்மிடத்தில் விஷத்தின் தன்மையான நரகாசுரன்தான் வலிமை பெறுகிறான். அவனை அடக்க வேண்டும். காலை 4 மணிக்கெல்லாம் எழுந்து, ஈஸ்வரா என்று உயிரை எண்ணி, துருவ மகரிஷிகளின் அருள் சக்தி என் உடல் முழுவதும் படர்ந்து, என் உடலில் உள்ள ஜீவான்மாக்கள், ஜீவ அணுக்கள் அனைத்தும், பெறவேண்டும், ஈஸ்வரா என்று எண்ணி ஏங்கி, கண்ணின் நினைவை விண்ணை நோக்கி செலுத்தி, நம் உடலுக்குள் அதனின் உணர்வைப் படரச் செய்தல் வேண்டும்.

அதன்பின், யார் மீது பகைமை கொண்டோமோ, அவர்பால் நினைவைச் செலுத்தி, துருவ மகரிஷிகளின் அருள் சக்தி அவர் பெற வேண்டும், அவருடைய தொழிலில் அதிக வருமானம் வர வேண்டும், அவர் என்னுடைய பணத்தை, எனக்குக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் பெற வேண்டும் என்று எண்ணி, ஏங்கி தியானிக்கும் பொழுது, விஷத்தன்மையான உணர்வுகளிலிருந்து, நம்மை நாம் பாதுகாத்துக் கொள்கின்றோம்.

 (பக்கம் 52-55)
ஒருவன் தீமையை செய்கிறான் என்றால், அவனிடம் உள்ள தீமையின் உணர்வுகளை வீழ்த்துவதற்கு பதில், தீமை செய்தவனின் உடலையே சாய்த்துவிடும் நிலை வருகிறது என்று தெளிவாகக் காண்பித்தருளினார், நமது குருநாதர்.

தீமை தரக்கூடியவைகளாக இருந்தாலும், மனிதன் அவைகளை, தனக்குச் சாதகமாக மாற்றிக் கொள்ளும் வல்லமை வாய்ந்தவன். அதே போன்று, தீமை செய்வோரின் உணர்வுகள் நமது உணர்வில் கலந்துவிட்டால், அந்தத் தீமையை விளைவிக்கும் உணர்வுகள், நமக்குள் விளையாது தடுத்து, சமப்படுத்தும் நிலை பெறவேண்டும்.
மகரிஷிகள், தம்மிடத்தில் தீமையின் உணர்வுகள் வந்து மோதும்பொழுது அவைகளை செயலற்றதாக்கி, தீமையின் உணர்வுகளை ஒடுக்கி,
அவைகளுடைய செயலாக்கங்களை மாற்றி,
தம்முள் நல்லுணர்வினை, வலிமை மிக்கதாக மாற்றியவர்கள்.
அவர்களைப் போன்று,
நாம் நம்முள் தீமையின் உணர்வுகளை ஒடுக்குகின்ற பொழுது, ஒருவன், நமக்கு எத்தகைய தீமைகளை செய்து கொண்டிருந்தாலும், அது நம் உடலுக்குள், தீமை விளைவிக்கும் அணுக்களை உருவாக்குவதில்லை.

மகரிஷிகளின் அருளுணர்வுகள், நமது உடலில் கலக்கப்படும் பொழுது, நமது உடலில் தீமைகளை உருவாக்கும் அணுக்கள் விளைந்திருப்பினும், அவைகளை, நமக்குள் நன்மை பயக்கும் அணுக்களாக மாற்றுகின்றன.

உதாரணமாக, உடலுக்கு ஆரோக்கியம் தரும் நல்ல மருந்துடன்,
சிறிது விஷத்தைக் கலக்கப்படும் பொழுது,
விஷம் நல்ல மருந்திற்கு ஊட்டச்சக்தியாக மாறுகின்றது.
எந்த மருந்தை, சிறிது விஷத்துடன் கலந்து கொடுக்கின்றோமோ,
அந்த விஷம் ஊடுருவி,
இந்த நல்ல மருந்தின் தன்மையை, உடலெங்கும் பரவச் செய்கின்றது.

நோய்வாய்ப்பட்ட மனிதனின் உடலில், மருந்தினை செலுத்தும்பொழுது, மருந்துடன் கலந்துள்ள விஷம், மருந்தினை எடுத்துச் சென்று, உடலில் உள்ள வேதனையை உருவாக்கும் உணர்வின் அணுக்களை உணவாக உட்கொண்டு, தன் இனத்தை உருவாக்கும் தன்மையால், நல்ல மருந்தின் தன்மை அடர்த்தியாகி, வேதனையை உருவாக்கும் அணுக்களை, வளரவிடாமல் தடுக்க செய்கின்றது, மருந்துடன் கலந்துள்ள விஷம்.

ஆக, இதைப் போன்று ஞானிகள் காண்பித்த வழியில்,
அருள்ஞானியின் உணர்வை, நம் எண்ணத்துடன் கலந்து,
நாம், எத்தகைய தீமையின் உணர்வைக் கண்டறிந்தோமோ,
அப்பொழுது, மகரிஷியின் ஆற்றல் மிக்கசக்தி
நாம் பெற வேண்டும், எனும் உணர்வினை இணைத்து,
நமது உடலுக்குள் செலுத்திவிட்டால்
அருள் ஞானியின் உணர்வுகள்
இந்த விஷமான நிலையை ஒடுக்கிவிட்டு,
நமக்குள் வலு கொண்ட நிலையாக, மாறுகின்றது.

இந்த உண்மைகளை, எமது குருநாதர் எமக்கு உணர்த்தி, எம்முள் உணர்ச்சிகளை தூண்ட செய்து, எமக்குள், இதனின் நினைவின் ஆற்றலை பதியச் செய்து, துருவமகரிஷிகளின் ஆற்றலை நீ பருகு என்றார்.

யாம் காட்டினுள் இருந்தபொழுது, “பல உயிரினங்கள் தன் பசியைத் தணிப்பதற்காக மற்ற உயிரினங்களை துரத்துவதும், மற்றவைகள் அஞ்சி ஓடுவதும், சிக்கிக் கொண்டவைகள் ஓலமிடுவதும்” போன்றவைகளைக் கண்டு, யாம் அச்சப் படும் நிலை உண்டானது.

அவைகள் செய்த துயர நிலைகளால், துயரத்தை உருவாக்கும் அணுக்கள் எமக்குள் எப்படி விளைகின்றது என்றும், இதை உடனடியாக மாற்றுவதற்கு யாம் எவ்வாறு செயல்பட வேண்டும்? என்றும், எமக்கு குருநாதர் உபதேசித்தார்.

ஆக, மகரிஷிகள் தமக்குள் வளர்த்துக்கொண்ட உணர்வை, உன்னிடத்தில் வளர்த்துக்கொண்டால், மற்ற ஒன்றைக் கொன்று புசிக்கும் அந்த உயிரினங்கள், உன்னைப் பார்த்தாலும், உன்னுள் வளர்த்துக் கொண்ட உணர்வின் மணம் கண்டு, அது அஞ்சி ஓடும். ஆக, அச்சுறுத்தும் உணர்வுகள் உனக்குள் வந்தாலும், அதை அடக்கி ஒளியாக உனக்குள் மாற்றுகின்றாய்.

எதனின் உணர்வை உனக்குள் அடக்குகின்றாயோ, அதனின் உணர்வுகள் உனக்குள் வலு பெறும்பொழுது, வெளிப்படும் நுண்ணிய அலைகளை நுகரும் ஆற்றல் மற்ற உயிரினங்களுக்கு உண்டு. இதனை நுகரும் உயிரினம், இவன் நம்மை அடக்கி விடுவான், என்ற உணர்வு கொண்டு அது அஞ்சி ஓடும் என்ற நிலைப்படுத்தி, அதை நிதர்சனமாக காண்பித்தார் குருநாதர்.

ஆகவே, நாம், “மகரிஷிகளின் அருள்சக்தி என் உடல் முழுவதும் படர்ந்து என் உடலில் உள்ள ஜீவான்மா, ஜீவ அணுக்கள் அனைத்தும் பெறவேண்டும் ஈஸ்வரா”, என்று எண்ணி ஏங்கி தியானிக்க வேண்டும். நம்மில் கேட்டுணர்ந்த உணர்வின் தன்மை கொண்டு, மகரிஷிகளின் அருள் உணர்வுகளை எண்ணி, நமக்குள் இருக்கும், துன்புறுத்தும் உணர்வின் அணுக்களுடன், மகரிஷிகளின் அருள்சக்தியை இணைக்கப்படும் பொழுது, அது நம்முள் தீமைகளை கவர்ந்திடும் நிலைகளை மாற்றி, அருள் மகரிஷிகளின் இனங்களை, கவர்ந்திடும் நிலை வருகின்றது.

இப்படி, மகரிஷிகளின் அருளுணர்வுகளை நம்முள் இணைக்கப்படும் பொழுது, நமக்குள், தீமைகளை அடக்கிடும் தன்மை வருகின்றது. நம்முள் அஞ்சிடும் நிலை மாறுகின்றது. தெளிந்த மனதின் தன்மை, நம்மில் உருவாகின்றது.

 (பக்கம் 83-89)
நீங்கள் பார்க்கலாம், கம்ப்யூட்டரின் இயக்கம் எப்படி இருக்கிறது என்று. ஒரு கம்ப்யூட்டரை எலக்ட்ரிக் இயக்குகின்றது. அதே சமயத்தில், அந்த நாடாக்களில் கெமிக்கல் கலந்த உணர்வைப் பதிவாக்குகின்றான். “எலக்ட்ரிக்கல்” இதனுடைய தத்துவத்தில் வரப்படும் பொழுது, “எலக்ட்ரானிக்காக” மாற்றுகின்றது. அழுத்தம் எதுவோ, அதனுடைய நிலைகளில் இயக்குகின்றது.

ஆனால், விஞ்ஞானி எண்ணுகின்றார். அதில், பதிவுசெய்த நிலைகள் கொண்டுதான், அது இயங்குகின்றது என்று. மனிதனின் உயிரின் தன்மை எலக்ட்ரிக். அந்த உணர்வின் தன்மை நுகரப்படும் பொழுது, அது எலக்ட்ரானிக். அந்த உணர்வுகளுக்குத் தக்கவாறு, இவர்களுடைய கைகளும் இயங்குகின்றது. இந்த உணர்வின் தன்மை, அதிலுள்ள காந்தப்புலனுடன் இயங்குகின்றது.

இப்பொழுது, ஒரு செடிக்குள் இருக்கும் காந்தப்புலனறிவு, தன் உணர்வின் சத்தினை ஈர்த்து, தன்னுள் இணைக்கும் பொழுது, அந்த உணர்வுக்கொப்ப தாவர இனங்கள் வளர்வதைப் போன்று, உயிரினங்கள் வளர்வதைப் போன்று, உயிரினங்கள் நுகர்ந்த உணர்வுகள், எண்ணத்தின் தன்மை கொண்டு இயங்குகின்றது.

ஆகவே, முலாமில் பூசப்படும் உணர்வுகள், அதிலுள்ள காந்தப்புலனறிவுடன் இணைக்கப்படும் பொழுது, அந்த அழுத்தத்தின் நிலைகள் வருகின்றன. இவன் அறியாமலே, மனிதனின் உணர்வின் அலைகள் சேர்க்கப்படும். காந்தப்புலனறிவைக் கொண்டுதான், எலக்ட்ரானிக்காக மாற்றுகின்றார்கள். இந்த விஞ்ஞானிக்கே தெரியாது. இப்பொழுது யாம் சொல்வது எதுவோ, அதை இன்னும் சில வருடங்களில், விஞ்ஞானரீதியாக அறிந்து வெளிப்படுத்துவார்கள்.

அதாவது, “மனிதனின் உடலுக்குள் இருக்கக் கூடிய உணர்வுகள்தான், எலக்ட்ரானிக்காக மாற்றுகின்றது” என்ற நிலைகளை, பத்திரிக்கைகளில் விஞ்ஞானக் கண்டுபிடிப்பாக, வெளிப்படுத்துவதைக் காணலாம்.

யாம், இதற்குமுன் சொல்லியிருந்த பல உண்மைகள், பின்னாட்களில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட விஞ்ஞான உண்மைகளாக, செய்தித் தாள்களில் வந்துள்ளன. செவ்வாய்க் கோளில் மட்டும்தான், உயிரணு இருக்கின்றது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஆனால், கோள் என்று எது இருக்கின்றதோ, அவை அனைத்திலும் உயிரணுக்கள் இருக்கின்றன. அதனின் விஷத்தன்மைக்கொப்ப, அதனின் வளர்ச்சி இருக்கும் என்று, யாம் பல காலத்திற்கு முன்பே சொல்லியுள்ளோம்.

மனிதன், செயற்கையில் விளைய வைத்த பல கெமிக்கல் கலந்த உணர்வின் சத்தை, நாடாக்களில் பதிவு செய்யப்படும் பொழுது, அதை முலாமாகப் பூசி, இவன் தட்டெழுத்தால் அடிக்கின்றான். ஆனால் அப்பொழுது, மனிதனின் உணர்வின் நினைவலைகள் அங்கே பாய்கின்றது. அவனுக்கே இது தெரியாது.

இனிமேல், அவன் கண்டுபிடித்துத் தான் சொல்லவேண்டும். அவர்கள் எலக்ட்ரிக், எலக்ட்ரானிக்காக, மாற்றுவதில் மட்டும்தான் இருக்கிறார்கள். இங்கே இருக்கக்கூடிய காந்தப் புலனறிவில், இவனின் நினைவாற்றல்கள் பாய்வதினால், இவன் உடல் நலமின்றி, தட்டெழுத்தைப் பயன்படுத்தினான் என்றால், அங்கேயும், தவறான நிலைதான் ஏற்படும். கம்ப்யூட்டரின் நிலை இதுதான்.

உதாரணமாக, சூரியனின் ஒளிக்கதிர்கள் பூமியில் படரப்படும் பொழுது,
ஒரு செடியின் சத்தை அது கவர்ந்து,
தனக்குள் எலக்ட்ரானிக்காக மாற்றுகின்றது.
ஆனால், செடியின் சத்து எதுவோ, அதை நாம் நுகர்ந்தால்,
அதே உணர்வின் உணர்ச்சியாக, நம்மை இயக்குகின்றது.

அதைப் போன்றுதான், இதே உணர்வின் தன்மை எடுக்கப்படும் பொழுது,
அந்த உணர்வின் அழுத்தமாக, எலக்ட்ரானிக்காக,
ஒவ்வொரு பொருளின், நுண்ணிய பகுதியில் மோதப்படும்பொழுது,
அதன் இயக்கமாக இருக்கின்றது.

நம்முடைய சுவாசத்தின் பொழுது, நம்முடைய பெருமூளை, தீமைகளைத் தடுக்கின்றது. சளியாக மாற்றுகின்றது. உட்புகப்போகும் பொழுது, வடிகட்டி அனுப்புகின்றது. ஆனால் அதே சமயம், கண் புலன்களால், கவரும் உணர்வின் காந்தப் புலனறிவு, அதை தனக்குள் எடுத்துப் பிரிக்கின்றது.

ஆக, பிறர் ஒருவர் சொல்லும் உணர்வின் தன்மையை, நமது காந்தப் புலனறிவு இங்கே கவரப்படும் பொழுது, கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலன் அதை எடுத்து சுவாசிக்கப்பட்டு,
உயிரிலே படும்பொழுது,
சிறுமூளையின் நிலைகளில்
நாம் “காந்த ஊசி” என்று சொல்கின்றோமே,
உயிருக்கும், அதற்கும்
தொடர்பு கொண்ட நிலைகளில், மோதுகின்றன.
அந்த உணர்வுகளை, ஒலிபெருக்கியாக மாற்றி
அந்த உணர்வின் ரூபங்களை, நமக்குள் காட்டுகின்றது.
அதன் அறிவாக மாற்றுகின்றது.

முன்பு, கிராமபோன் பெட்டிகளில் காந்த ஊசிகளை, இணைத்தார்கள். இதைப் போன்று, இன்று ரேடியோக்களிலும், டெலிவிஷன்களிலும், அந்த ஊசிகளின் தன்மை உண்டு. இப்பொழுது, லேசர் என்ற உயர் அழுத்தத்தைக் கூட்டி, இந்த உணர்வை இழுத்து, ஒலியலைகளாக பரப்பும் நிலைகளை, இன்று விஞ்ஞானிகள் கண்டுள்ளனர்.

யாம், இதை எந்த புத்தகத்தையும் படித்து, தெரிந்து கொள்ளவில்லை. விஞ்ஞானிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை, எமது குருநாதர் காட்சியாகக் காண்பித்தார்

மைக்கில் பேசும்பொழுது, ஒலிபெருக்கி, ஒலி அலைகளை பெருக்கி வெளிப்படுத்துகின்றது. அதே சமயம், இங்கு நாடாக்களில் பதிவாக்குகின்றது. இது விஞ்ஞான அறிவு. இதுபோன்று, இப்பொழுது யாம் இங்கு உபதேசிக்கும் உணர்வுகளை நீங்கள் கேட்கப்படும் பொழுது, யாம் உபதேசிக்கும் உணர்வுகள், எலக்ட்ரானிக்காக மாறுகின்றது.

அதே எலக்ட்ரான், உங்களை இயக்குகின்றது. உங்களுடைய உயிர் கரண்டாக இருந்து, உற்பத்தி செய்கின்றது. ஆனால், கண்ணோடு சேர்ந்த காந்தப் புலனோ, இதை மாற்றும் திறன் பெற்றது. பதிவாக்கிய உணர்வின் தன்மையை நினைவாக்கி, அதனுடைய நிலைகளை மாற்றும் திறன் பெற்றது.

இதனின் உண்மைகளை, விஞ்ஞான அறிவுடன் ஒப்பிட்டுக் கூறுவதன் காரணம், சாமிக்கும் விஞ்ஞானம் தெரியும், விஞ்ஞானிகளையும் தெரியும், என்பதை உங்களுக்கு தெரியப்படுத்தவே கூறுகிறோம். ஏனெனில், இன்று  நாம் விஞ்ஞான யுகத்தில், வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆகையால், யாம் நீங்கள் விஞ்ஞான அறிவுடன், மெய்யுணர்வைக் காண்பதற்கு இதை உபதேசிக்கிறோம்.

விளக்கு அருகில் என்ன கலர் இருக்கிறதோ, அது தெரியும். இது போன்றுதான், நமது உயிரும், நாம் எந்தெந்த குணங்களை எடுக்கின்றோமோ, அதனுடைய நிலைகளைக் காட்டும். இந்த உயிர் ஒளியானது போன்று, நமது உணர்வுகளை, என்றும் ஒருநிலை கொண்டு, உணர்வின் ஒளியாக மாற்றுதல் வேண்டும்.

நீங்கள் அனைவரும், உயர்ந்த ஞானிகளாக வேண்டும். அதைக் கண்டு, யாம் மகிழ்ச்சியடைய வேண்டும். தீமைகளை அகற்றும் சக்தி, நீங்கள் பெறவேண்டும். அதைக் கண்டு, யாம் ஆனந்தப்படவேண்டும் என்ற எண்ணத்தை, எமக்குள் எப்பொழுதும் வளர்த்துக் கொண்டே இருக்கிறோம்.

 (பக்கம் 94-98)
குருநாதர், காடு மேடாக எம்மை அழைத்துச் சென்றார். அன்றைய காட்டுவாசிகளான அகத்தியரின் தாய், தந்தையரின் காட்டு வாழ்க்கைகளையும், அங்கே உணர்த்தினார், குருநாதர்.

காட்டுவாசிகளான அகத்தியரின் தாய், தந்தையர் ஆங்காங்கு, எந்த உயிரினங்கள் அதிகமாக அங்கே வசிக்கின்றதோ, அதற்குத்தக்க பச்சிலைகளை அரைத்து, தங்களுடைய உடலில் பூசிக் கொள்வதை பழக்கமாக மேற்கொண்டனர். அவர்களுடைய உடல்களில் இருந்து வெளிப்படக்கூடிய, மூலிகைகளின் மணத்தை முகரும் விஷ ஜந்துக்களோ, கொடிய மிருகங்களோ, அவர்களின் அருகில் வருவதில்லை.

அவர்கள் பூசிய மூலிகைகளின் மணம், தங்களை மிருகங்களிலிருந்தும், விஷ ஜந்துக்களிடமிருந்தும் காப்பதாக எண்ணினார்கள். ஆனால், அவர்களுடைய உடல்களில் பூசிக் கொண்ட மூலிகைகளின் மணம், அவர்களிடம் வரும் விஷத்தை அடக்கும் சக்தியாக இருந்தது.

இந்த நிலையில், அவர்கள் காலையில் சூரியனை உற்றுப் பார்த்து, சூரியனின் காந்த புலன்களை, தங்களுக்குள் கவரும் சந்தர்ப்பம் அவர்களுக்கு கிடைத்தது. காரணம், அக்கால மக்கள், சூரியனை தங்களுடைய கடவுளாக வணங்கினார்கள். மற்ற உயிரினங்களுக்கு, வெளிச்சம் ஆகாது. ஏனென்றால், பெரும்பாலும் உயிரினங்கள் இரவில்தான், தங்களுடைய இரையைத் தேடும். சூரியனின் ஒளியைக் கண்டதும், தங்களுடைய இருப்பிடங்களுக்குத் திரும்பிவிடும். ஆகையால், அந்தக்கால மக்களுக்கு, சூரியன் தங்களுக்கு பாதுகாப்பு தருவதாக கருதி, சூரியனைக் கடவுளாக வணங்கினார்கள்.

ஆக, அந்த காட்டுவாசிகள், தங்களுடைய உடலில் பூசிக் கொண்ட, மூலிகை முலாம்களால், இவர்கள் சூரியனை, நேரடியாகப் பார்க்கும் தன்மை பெற்றார்கள். நேரடியாக சூரியனைப் பார்க்கும் பொழுது, அவர்களுக்கு கண்கள் கூசுவதில்லை. 

இதன்வழி கொண்டு, பிரபஞ்சத்தில் உருவாகின்ற உணர்வுகளையும், கோள்கள் நஞ்சின் தன்மைகளை வெளிப்படுத்துவதையும், நட்சத்திரங்கள் நஞ்சின் தன்மைகளை உமிழ்வதையும், இவர்கள் உடலில் உள்ள, விஷத்தன்மையால், அறியும் ஆற்றல் பெறுகின்றார்கள், என்னும் நிலையை குருநாதர் தெளிவாக காண்பித்தார்.

காட்டுவாசிகளின் நிலையில், பெண்கள் தாம் கர்ப்பமாக இருக்கும்பொழுது, கரு உருவானபின், தொண்ணூறு நாட்களுக்குள், இத்தகைய முலாம்களை பூசிக் கொள்ளும் பொழுது, அவர்கள் விஷத் தன்மையை அடக்கும் வாசனையை நுகர்கிறார்கள் அப்படி, பெண்கள் விஷத்தன்மையை அடக்கும் வாசனையை நுகர்வதால், அந்த பெண்களின் கருவில் விளையும் சிசுக்களிடத்தில், விஷத்தன்மையை அடக்கும் சக்தி விளைகின்றது.
உதாரணமாக,
ஒரு பெண் கர்ப்பம் உருவாகி, தொண்ணூறு நாட்களுக்குள்,
கர்ப்பமான பெண்ணை ஒரு தேள் கொட்டிவிட்டால், அந்த தேளின் விஷம்,
பெண்ணின் கருவிலிருக்கும் சிசுவினிடத்தில் இணைந்துவிடும்.
அந்த குழந்தை பிறந்தபின், தேளைக் கையில் எடுத்தால்,
தேள், அந்த குழந்தையை ஒன்றும் செய்யாது. கொட்டாது,
கொட்டினாலும் தேளின் விஷத்தின் தன்மை குழந்தையைப் பாதிக்காது.

இது போன்ற நிலைகள் கொண்டு, அகத்தியரின் தாய் தந்தையர் பெற்ற உணர்வுகள், தாயின் கருவிலிருந்த சிசுவினிடத்தில் பதிவானது. தாய் தந்தையர், கொஞ்சம்தான் கண்டார்கள். ஆனால், கருவிலிருந்த சிசுவினிடத்தில், வீரிய சத்தாக உருவானது.

அகத்தியரின் தாய் தந்தையர், தங்களிடத்தில் பெற்ற விஷத்தன்மை அடக்கும் சக்தியைக் கொண்டு, சூரியனிலிருந்து வெளிப்படும், விஷத்தன்மைகளை, அவர்கள் உற்றுப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.
ஒரு விஷம், எவ்வளவு தூரம் வேகமாக ஊடுருவி செல்கின்றதோ,
அதைப் போன்று, அவர்களுடைய உடலில்,
விஷத்தை அடக்கும் சக்தி பெற்றதால்,
எண்ணங்களை, விண்ணை நோக்கி செலுத்தி,
கண்ணால் ஈர்த்து, வெகு தொலைவில் இருப்பதை,
அறியும் ஆற்றல் பெற்றார்கள்.

இதன்வழி கொண்டு அகத்தியரின் தாய் தந்தையர், நட்சத்திரங்கள் எவ்வாறு இயங்குகின்றது?

நட்சத்திரங்கள் எப்படி, பிற மண்டலங்களிலிருந்து, தன் உணவை எடுத்துக் கொள்கின்றது? தன் உணர்வை, பிரபஞ்சத்தில் எப்படி பரப்புகின்றது?

அதை கோள்கள், தனக்குள் எப்படி எடுத்து, தங்களை வளர்த்துக் கொள்கின்றன?

அதை சூரியன் எவ்வாறு கவர்கின்றது? என்ற பேருண்மையை கண்டுணர்ந்தார்கள்.

இப்படி அகஸ்தியனின், தாய் தந்தையர் பெற்ற உணர்வுகள், தாயின் கர்ப்பத்தில் இருக்கும் சிசுவினிடத்தில் பதிவானது. அகஸ்தியரின் தாய் தந்தையர், சிறிதுதான் கண்டார்கள், ஆனால், கருவிலிருந்த சிசுவிற்கு, வீரிய சத்தாக உருவானது.

அகஸ்தியரின் தாய் தந்தையர், விஷத்தை அடக்கும் மூலிகைகளை தங்களது உடலில், முலாமாக பூசிக் கொண்டதால், அந்த விஷத் தன்மைகள், இவர்களது உடலிலுள்ள நல்ல அணுக்களை, சிறிது சிறிதாக கொல்லத் தொடங்கியது. ஆனால், கருவிலே இருக்கும் சிசுவினிடத்தில், விஷத்தை அடக்கும் ஆற்றலாக வளர்ந்தது.

பத்து மாதங்களான பின், குழந்தை பிறந்தது. எப்பொழுதும், குழந்தைகள் பிறந்தவுடன், மேல் நோக்கிதான் பார்க்கும். அப்படி,
அந்த காட்டில், குழந்தையை படுக்க வைக்கப்படும் பொழுது, அந்த குழந்தை, வானில் தாய் தந்தையர், எதனின் உணர்வுகளைப் பார்த்தனரோ,
எதனின் உணர்வுகள், கருவில் சிசுவாக இருந்தபோது பதிந்ததோ,
அதனின் நினைவாற்றல்
அந்த குழந்தையை, விண்ணையே பார்க்க வைக்கின்றது.

ஆனால், நட்சத்திரங்களையும், பிறமண்டலங்களிலிருந்து வரக்கூடிய நிலைகள், பால்வெளி மண்டலங்களாக மாறுவதும், துகள்களாக மாறுவதையும், கோள்கள் அதை கவர்வதையும், காண்கின்றது, அந்த குழந்தை.. ஆனால், உணரும் தன்மை இல்லை. காட்சிகளை, உணர்வுகளாக உணரும் தன்மை, சிறிது சிறிதாக, வருகின்றது. 

இவ்வாறு, அந்தக் குழந்தை வளர்ச்சி பெற்று வரும் வேளையில், அவருடைய தாய் தந்தையர், தங்களுடைய உடலில் சேர்த்துக் கொண்ட விஷத்தை அடக்கும் ஆற்றல்கள், அவர்களை மனிதனாக உருவாக்கிய அணுக்களை, முழுமையாகக் கொன்றுவிடுகின்றன.

ஆகையால், இந்த குழந்தை பிறந்ததிலிருந்து தானாக வளரத் தொடங்குகிறது. குழந்தை ஐந்து வயது வரப்படும்பொழுது, விண்ணுலக ஆற்றலை, சொல்லாக சொல்லும் தன்மை பெறுகின்றது. அதன் தொடர்பு கொண்டு, விண்ணுலக ஆற்றல்களை கண்டுணர்ந்து, தமக்குள் பெற்று, உலகுக்கு வெளிப்படுத்திய முதல் மனிதராக, அகஸ்தியர் உருவானார்.

 (பக்கம் 98-99)
பிரபஞ்சத்தில் இயங்கும் நிலைகளையும், பிற மண்டலங்களிலிருந்து வரக்கூடிய உணர்வுகளையும், அவைகளின் இயக்கம் எத்தகையது என்பதையும், ஐந்து வயது அடைவதற்கு முன்னரே, அகஸ்தியர் காணும் நிலை பெற்றார்.

ஐந்து வயது ஆகும் முன்னரே, தன்னையும் அறிந்தார், தன்னுள் நடைபெறும் இயக்கத்தையும் அறிந்தார். விண்ணை அறிந்தார், விண்ணின் ஆற்றல்களையும் அறிந்தார். இவ்வாறு, வளர்ந்து வரும் நிலைகளில், ஐந்து வயது அடையப்படும் பொழுது, துருவன் என்ற நிலை வருகின்றது. பிரபஞ்சத் தத்துவத்தை, முதன் முதலில் கண்டவர் அகஸ்தியர்.
நட்சத்திரங்களும், கோள்களும் எவ்வாறு உருவாகின்றது?
கோள்களில் உருவாவதை, சூரியன் எப்படி கவர்கின்றது?
நட்சத்திரங்கள், பிறமண்டலங்களிலிருந்து தன்னுடைய சக்திகளை எப்படி எடுக்கின்றது? என்ற நிலைகளையும்,
விண்ணின் ஆற்றல்களை, நமது பூமி எப்படி தன் துருவப் பகுதியில் கவர்கின்றது? என்றும்,
விண்ணின் ஆற்றலை, புவி தனக்குள் கவர்ந்து கொண்டபின்,. புவியில் ஏற்படும் மாற்றங்களையும்,
புவியில் தாவர இனங்களின் வளர்ச்சிகளையும், தாவர இனங்கள் வளர்ச்சியானபின், விண்ணிலே தோன்றிய உயிரணு. புவியின் ஈர்ப்பிற்குள் வந்து,    
தாவர இனங்களின் மீது விழுந்து, தாவர இன சத்தை நுகர்ந்து, நுகர்ந்த சத்தை, உயிரணு தன்னில் ஜீவ அணுவாக மாற்றியபின்,
ஜீவ அணுவின் மலம், அங்கே உடலாக எப்படி உருவாகின்றது? என்றும்,
நுகர்ந்த உணர்வின் தன்மை, எண்ணங்களாக எப்படி இயக்குகின்றது? என்றும் அகஸ்தியர் கண்டுணர்ந்தார்.

புவி, விண்ணின் ஆற்றலை,
தனது துருவத்தின் வழியாக நுகர்ந்து,
தன்னை வளர்த்துக் கொள்வதை உற்றுப் பார்த்து,
அதே துருவத்தின் வழி,
விண்ணின் ஆற்றலை, தமக்குள் பெற்று,
நஞ்சை அடக்கும் நிலைகொண்டு,
விண்ணின் ஆற்றலை, தமக்குள் விளைய வைத்தும்,
எதனைக் கண்டு, எதனை நுகர்ந்து, எதனின் நிலைகளை தமக்குள் பெற்றாரோ, அதனை எல்லையாக வகுத்து, துருவன் என்ற நிலை பெற்றார்.

(பக்கம் 108-114)
அகஸ்தியர், தமக்குள் கண்ட பேருண்மையின் தன்மைகளை, தன் மனைவிக்கு எடுத்துரைக்கும் பொழுது, அதனின் உணர்வுகளை அவள் நுகர்கின்றாள். அவள் நுகர்ந்த உணர்வுகள், அவளுடைய உடலில் உள்ள, இரத்த நாளங்களில் கலக்கின்றது. அவளுடைய உடல் முழுவதும் படர்கின்றது.

இதனால், அவள் பேருண்மையின் உணர்வுகளை அறிந்தாள். இவை அனைத்தும், தன் கணவர் மூலமே அறிய நேர்ந்தது, என்ற நிலையை உணர்ந்தபின், தன் கணவனை எண்ணி, அவர் உயர்ந்த வாழ்க்கை எனக்குக் கொடுத்தார். மேலும், அவர் உயர்ந்த நிலை பெறவேண்டும் என்று, எண்ணினாள்.

அதே சமயத்தில், தன் மனைவிக்கு போதித்த உணர்வு, அது உயர்ந்து பெருகுகிறது என்ற நிலையை ஊட்டி, அவள் உயரவேண்டும். எங்கள் இரு மனமும் ஒன்றிட வேண்டும். இரு மனமும் ஒன்றி, எங்களுக்குள் மகிழ்ச்சி பெறும் உணர்வினை உருவாக்க வேண்டும், என்று அகஸ்தியர் எண்ணினார்.

இப்படி, இருவரும் சேர்ந்து, தாங்கள் கண்டுணர்ந்த உணர்வின் துணைகொண்டு, துருவத்திலிருந்து கவர்ந்த உணர்வுகளை, தங்களிடத்தில், ஒளியின் தன்மையாக மாற்றினார்கள். ஆக இவ்வாறு, “துருவ மகரிஷி” என்ற, உருவாக்கும் ஆற்றல் கொண்ட நிலை, அவர்களிடத்தில் உருவானது.

இவ்வாறு அவர்கள், தங்கள் வாழ்க்கையில் ஒளியின் உணர்வை வளர்த்து, நஞ்சினை வென்று, நஞ்சை வெல்லும் உணர்வுகளை வளர்த்து, வினைக்கு நாயகனாகவும், கணங்களுக்கு அதிபதியாகவும், உயர்ந்த உணர்வின் சக்தியை பெற்றார்கள்.

அருள் ஒளியின் உணர்வைப் பெறவேண்டும் என்றும், அவளில் வளரவேண்டும் என்றும், மனைவி உயர்ந்த சக்தி பெறவேண்டும் என்றும், இரு உணர்வும் ஒன்றியபின், உணர்வின் அணுக்களை, ஒளியின் சரீரமாக மாற்றிடும் திறன் பெற்றனர்.

எதனை, கூர்மையாக உற்றுப் பார்த்து வளர்த்துக் கொண்டனரோ, அதன் நிலை கொண்டு, இந்த உடலை விட்டு அகன்றபின், துருவ நட்சத்திரமாக ஆனார்கள். துருவ நட்சத்திரத்தை, நாம் கண்ணால் காணமுடியும்.

அகஸ்தியர் அவரது மனைவி, ஆக இருவரும் தங்களுக்குள் சிருஷ்டித்து, துருவ நட்சத்திரமான நாள்தான், விநாயக சதுர்த்தி. இருவரும் ஒன்றி, உணர்வின் ஒளியாக
என்றும் பிறவியில்லா நிலையாக மரணமில்லா பெருவாழ்வை அடைந்தனர்.
பிறப்பும் இல்லை, இனி மரணமும் இல்லை
என்ற நிலையாக, மனிதர்களாக தோன்றி, இந்த வாழ்க்கையில் வரும் தீய வினைகளை நீக்கி, அருள் ஒளியை தங்களிடத்தில் வளர்த்துக் கொண்ட நன்னாள்தான், விநயாக சதுர்த்தி.

துருவ மகரிஷி, துருவ நட்சத்திரமாகி, அதனிலிருந்து வெளிப்படும் அருள் உணர்வுகளை நாம் நுகர்ந்து, நம்முள் இணைத்துக் கொண்டால், அது நமக்குள் அறியாது உருவாகிவிட்ட, தீய அணுக்களுக்கு, உணவு கிடைக்க விடாமல் தடுக்கின்றது, துருவ மகரிஷிகளின் அருள் உணர்வுகளை, நமக்குள் வலுவாக சேர்த்துக் கொண்டால், காற்றில் பரவியிருக்கும் நஞ்சுகள் நம்மை நெருங்குவதில்லை.

இத்தகைய ஆற்றல்வாய்ந்த, துருவ மகரிஷிகளின் அருள் சக்திகளை, அதிகாலை 4.00 மணியிலிருந்து 6.00 மணி வரை சூரியனின் காந்த புலனறிவு கவர்ந்து, வான வீதியில் பரவச் செய்கின்றது. அப்பொழுது, அதை நமது பூமி, தனது துருவ பகுதியின் வழியாக கவர்ந்து, இந்த காற்று மண்டலத்தில் பரவச் செய்கின்றது. அந்த நேரத்தில், “துருவ மகரிஷிகளின் அருள் சக்தி நாம் பெறவேண்டும்” என்று தியானிக்கும் பொழுது, துருவ மகரிஷிகளின் அருள் உணர்வுகளை, நாம் கவரக்கூடிய தகுதியைப் பெறுகின்றோம்.

இவ்வாறு, துருவ மகரிஷிகளின் அருளாற்றலின் உணர்வின் அலைகளை, உங்களுக்குள் இணைத்து, துருவ மகரிஷிகளின் அருளாற்றலின் துணை கொண்டு, நீங்கள் அனைவரும்,
உங்களுடைய வாழ்க்கையில், வைரத்தைப் போன்று ஜொலித்திடவும்,
உங்களுடைய பேச்சும் பார்வையும், வைரத்தைப் போன்று ஜொலித்திடவும்,
உங்களுடைய பேச்சும் பார்வையும், நீங்கள் பார்ப்பவரிடத்தில் வைரத்தைப் போன்ற ஜொலிப்பை உருவாக்கிடவும்,
பிறவியில்லா பெரு நிலையான, “அழியா ஒளிச்சரீர வாழ்வை” பெறும் நிலையாகவும், பேரின்ப பெருவாழ்வாகவும், நீங்கள் அனைவரும் வாழ்ந்து வளர்ந்திட, எமது பரிபூரண அருளாசிகள்.

(பக்கம் 117-122)
அகஸ்திய மாமகரிஷி அவர்கள், தம்முள் உள்ள நஞ்சினை அடக்கி, புவியின் துருவத்தின் வழியாக, விண்ணின் ஆற்றலை தம்முள் நுகர்ந்து, எதை எல்லையாக வைத்து எதனை நுகர்ந்தாரோ, அதனின் ஆற்றலை தம்முள் பெற்றவர். அகஸ்தியர், இந்த புவியில் வாழ்ந்த காலத்தில், ஒவ்வொன்றின் உணர்வையும் நுகர்ந்தறிந்து, அதனை தம்முள் விளையவைத்து, அதனின் ஆற்றலை தம்முள் பெருக்கிக்கொண்டவர்.

 அகஸ்தியர், தம்முள் விளையவைத்து வளர்த்துக்  கொண்ட பேராற்றல்களை, தம் மனைவியின்பால் பாய்ச்சி, தமது மனைவியும் மெய்யுணர்வின் தன்மை பெறவேண்டும், அதன் வழிகொண்டு, இருளைப் போக்கி பொருள்காணும் திறன் பெறவேண்டும் என்றும், தம் மனைவி தம்முள் அறியாது சேர்ந்த நஞ்சை அடக்கி, தம்முள் சேர்த்த உணர்வுகளை, ஒளியின் உணர்வின் தன்மையாக மாற்றவேண்டும் என்றும், அகஸ்தியர் தம் அருள் உணர்வுகளை, தன் மனைவிக்கு ஊட்டினார்.

 அகஸ்தியரின் மனைவி, தமது கணவர் தமக்கு ஊட்டிய அருள் உணர்வின் தன்மைகளை தமக்குள் இணைத்து, வளர்த்து, அதன் நிலைகொண்டு பேரானந்தத்தின் உணர்வின் தன்மைகளை அறிந்து, இவைகளை தாம், தன் கணவராலேயே பெற்றோம் என்று உணர்ந்து; தாம் பெற்ற பேரானந்தத்தின் உணர்வின் தன்மைகள், தமது கணவரிடத்தில் மென்மேலும் வளரவேண்டும்; அவர் உயர்ந்த ஆற்றல்களைப் பெறவேண்டும்; அவருடைய அருள் துணை கொண்டு, தம்முள் அருள் ஆற்றல்கள் பெருகவேண்டும் என்ற உணர்வை வளர்த்து, தமது கணவரின் உணர்வுகளுடன், தமது உணர்வுகளை இரண்டற இணைத்து, இரு உணர்வுகளையும், ஒரு உணர்வாக ஒன்றிணைத்து, துருவத்தின் ஆற்றல்களை தம்முள் வளர்த்துக் கொண்டார்கள்.

அகஸ்தியரும் அவரும் மனைவியும் தங்களுடைய உணர்வுகளை ஒரு உணர்வாக்கி, விஷத்தை அடக்கி, நல் ஒளியின் உணர்வினை தங்களுக்குள் வளர்த்து இரு உயிரையும் ஒரு உயிராக்கி, துருவத்தின் ஆற்றலை நுகர்ந்து, தங்களுக்குள் விளையவைத்து, துருவ நட்சத்திரமாக எதையும் அடக்கிடும், உருவாக்கிடும் நிலையாக உருவானார்கள். அவர்கள்,  இன்றும் விண்ணில், புவியின் துருவப் பகுதியில், துருவ நட்சத்திரமாக. என்றும் பதினாறாக, அழியா ஒளிச்சரீரமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்.

பொதுவாக, ஆண்பால் என்பது ஆதிக்க உணர்வும், பெண்பால் என்பது அரவணைத்து இயக்கும் நிலையும், கொண்டது. இதில்,
தனித்து இயங்கும் நிலையானால்,
”முனி” யாகத்தான் ஆகமுடியும் என்ற உண்மையின் தன்மைகளை, உணர்த்தியவர்கள் மெய்ஞானிகள்.

மெய்ஞானிகள் உணர்த்திய அருள்வழி கொண்டு, ஒவ்வொரு குடும்பத்திலும் கணவனும் மனைவியும், இரு உணர்வும் ஒரு உணர்வாக ஒன்றுபட்டு, ஒருவர் மற்றவரை எண்ணி, அவர் “துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும், உயர்ந்த ஆற்றல்களை பெறவேண்டும்” என்று எண்ண வேண்டும். இப்படி, கணவனும் மனைவியும் ஒன்றிணைக்கும் பொழுது, வலுவாகின்றது. துருவ மகரிஷிகளின் அருளுணர்வுகளை, எளிதில் ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கின்றது.

வாழ்க்கையில், சந்தர்ப்பத்தால் வரும் தீமைகளை நீக்கும் நிலையாக,
கணவனும், மனைவியும் தங்களுடைய உணர்வுகளை ஒன்றிணைத்து,
துருவ மகரிஷிகளின் அருள் உணர்வுகளை, எண்ணி ஏங்கி தியானித்து,
அதனின் உணர்வுகளை
தங்களுடைய இல்லம் முழுவதும் படரச்செய்யும் பொழுது,
அந்த இல்லத்தில் வசிப்பவர்களிடத்திலும்,
அந்த இல்லத்திற்கு வருகை புரிபவர்களிடத்திலும்,
அங்கே பதிந்துள்ள, மகரிஷிகளின் அருள் உணர்வுகள் இணைந்து, அவர்களிடத்தில், தீமைகளைப் போக்கும் நிலையாக, மலரைப் போன்று நறுமணமும், மகிழ்ச்சியும் பெறும் நிலையாக விளைகின்றது.

ஆகவே, கணவன் மனைவி இருவரும், அதிகாலை 4.30 மணியிலிருந்து, 6.00 மணிக்குள் துருவ தியானத்தில் ஒன்றாக அமர்ந்து, துருவ மகரிஷிகளின் அருள் ஆற்றலின் உணர்வுகளை, எண்ணி ஏங்கி தியானித்து, தங்களுக்குள் இணைத்து, சந்தர்ப்பங்களால் வந்து சேரும் தீமைகளை நீக்கி, பொருள் காணும் திறன் பெற்று, நஞ்சை அடக்கி, ஒளியின் உணர்வுகளாக வளர்க்கும் நிலை பெறுதல் வேண்டும். அது போன்று, நீங்கள் பார்ப்பவர்களும், உங்களைப் பார்க்கின்றவர்களும், மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்து, தெளிந்த சிந்தனையுடன், மலரைப் போன்ற மணத்துடன், மகிழ்ந்து வாழ்ந்திடும் அருள் சக்தியும் பெறுதல் வேண்டும்.

கரண்ட்டில், பாசிடிவ் நெகடிவ் என்ற
இரு இணைப்பையும் கொடுக்கப்படும்பொழுது,
எப்படி, விளக்கு ஒளி பெறுகின்றதோ
அதே போன்று, கணவன், மனைவி இருவரும்
தங்களுடைய உணர்வுகளை ஒருங்கிணைத்து,
புவியில் படரும், துருவ மகரிஷிகளின் அருள் உணர்வுகளை, தங்களிடத்தில் இணைத்து, பெருக்கி, தங்களிடத்தில் நஞ்சான தீமைகளுக்கு இடமில்லாது செய்து, அருள் உணர்வின் அணுக்களைப் பெருக்கி, மகரிஷிகளின் அருள்வட்டத்தில் இணைந்து, பிறவியில்லாத நிலையான அழியா ஒளிசரீர வாழ்வை பெறும் நிலையாக, இரு உயிரையும் ஒரு உயிராக்கி, பேரின்ப பெருவாழ்வாக வாழ்ந்து, நாளும், அருள் ஆற்றலை தங்களிடத்தில் வளர்த்துக் கொள்ளுதல் வேண்டும். எமது அருளாசிகள்.