ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 16, 2018

களி மண்ணால் விநாயகரைச் செய்து கடலில் கரைப்பது போல் நம்மிடம் சேர்ந்த “தீய வினைகளைக் கரைக்கச் சொன்னார்கள்...” ஞானிகள்

நட்சத்திரங்கள் அது அது தான் எடுத்துக் கொண்ட வினைகளுக்கு நாயகனாக...  அதாவது கார்த்திகை நட்சத்திரம் ஒளிச் சுடராக மாறுகின்றது. ரேவதி நட்சத்திரம் இன்னொரு விதமாக மாறுகின்றது.

கோள்கள் அது அது சேர்த்துக் கொண்ட வினைகளுக்குத் தக்கவாறு உருவங்கள் மாறுகின்றது.

இதைப் போன்று தான் ஒவ்வொரு உயிரணுவும் தான் எடுத்துக் கொண்ட வினைகளுக்கு நாயகனாக உடல் அமைப்பு வருகின்றது. இது தான் விநாயகா.

எல்லாவற்றிற்கும் ஓர் உணர்வின் சத்துதான் வினையாகின்றது. அதற்கு நாயகனாக அந்த உணர்வே இயக்கி அது உடலின் தன்மையாகக் காட்டுகின்றது. அன்று அகஸ்தியன் இந்த உணர்வின் இயக்கத்தைப் பற்றித் தெளிவாக எடுத்துக் காட்டினான்.

இதே மாதிரி நாம் ஒவ்வொருவருடன் சேர்ந்து பழகப்படும் போதெல்லாம் நுகர்ந்த உணர்வுகள் இது வினையாகச் சேர்ந்து விடுகின்றது. வினை என்றால் இயக்கம் என்று பொருள்.

அது நாயகனாக நமக்குள் சேர்ந்து என்ன செய்கின்றது?

நாம் சந்தோஷமாக இருப்போம். வீட்டில் பையன் ஏதாவது தப்பாகப் பேசிவிட்டான் என்றால் அதைக் கேட்டுக் கொண்டிருப்போம்.

நாம் அதைச் சுவாசித்தவுடன் உடலுக்குள் போய் இந்த உணர்வின் மணம் என்ன செய்கிறது? எப்போது பார்த்தாலும் நம்மை வேதனைப்படச் செய்து கொண்டு இருக்கும்.

உடல் நன்றாக இருக்கும். பூரிப்பின் தன்மையாக இருந்தாலும் என்னால் நிற்க முடியவில்லையே மூட்டு வலிக்கிறது கை வலிக்கிறது பிடரி வலிக்கின்றது கண் எரிகின்றது என்று நினைப்போம்.

ஏனென்றால் இந்த உணர்வின் தன்மை தன்னை அறியாமலேயே இந்த உடலுக்குள் சேர்த்து அந்த வினைக்கு நாயகனாக நம்மை இயக்குகின்றது. இதை நிறுத்த வேண்டுமல்லவா...?

இந்த வினைகளை நிறுத்த வேண்டும் என்பதற்காக வேண்டித்தான் அதாவது மாதத்திற்கு ஒரு விநாயகர் சதுர்த்தியும் வருடத்தில் ஒரு விநாயகர் சதுர்த்தியும் வைத்தது.

களி மண்ணில் விநாயகரைச் செய்து ஊர்வலமாக எடுத்துக் கொண்டு போய்க் கடலில் கரைக்கின்றோம். அது ஏன் கரைக்க்ச் சொன்னார்கள்...? என்று தெரியாது

சந்தர்ப்பத்தால் நமக்குள் சேர்ந்த தீய வினைகளை வளராது தடுத்து
1.அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும்.
2.எல்லாக் குடும்பங்களும் நலம் பெறவேண்டும்
3.எங்கள் பகைமைகள் அழிய வேண்டும் என்று ஏகோபித்த நிலையில் பிரார்த்திக்கும் பொழுது
4.நம் உடலிலும் நம் பகைவர்களின் உடலிலும் பதிந்த தீய உணர்வுகள் அனைத்தும் கரைந்து விடுகின்றன.

ஏனென்றால் நம் முன் படர்ந்து கொண்டிருக்கும் தீய உணர்வுகள் நமக்குள் ஊடுருவ இடம் கொடுக்காது துருவ நட்சத்திரத்தின் துணை கொண்டு அதனைக் கடலுக்குள் துரத்தியடிக்க வேண்டும். 

ஏனென்றால் தீய உணர்வுகளை ஈர்ப்பதற்கு யாரும் இல்லை என்றால் அது வேறு வழி இல்லாது இறுதியில் கடலின் ஈர்ப்பிற்குச் சென்று மறைந்துவிடும். 

அதற்காகத்தான் களிமண்ணால் செய்து கரைக்கச் சொன்னது.