ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 28, 2017

கூட்டமைப்பாகத் தியானித்து “அதீத சக்திகளைப் பெறுங்கள்” - சக்தி வாய்ந்தவர்களாக நீங்கள் ஆவீர்கள்

அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் தியானமிருக்கும் அனைவரது குடும்பங்களிலும் படர்ந்து அவர்கள் இரத்தநாளங்களில் கலந்து அவர்கள் உடல்களில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற்றிட அருள்வாய் ஈஸ்வரா.

அவர்கள் வாழ்க்கையில் அறியாது சேர்ந்த தீய வினைகள் சாப வினைகள் பூர்வ ஜென்ம வினைகள் பாப வினைகள் அனைத்தும் அகன்று அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்ந்திட அருள்வாய் ஈஸ்வரா.

தியானமிருக்கும் குடும்பங்களில் அனைவரும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்ந்து மன நோய் நீங்கி மன பலம் பெற்று உடல் நோய் நீங்கி உடல் நலம் பெற்று அருள் வாழ்க்கை வாழ்ந்திட அருள்வாய் ஈஸ்வரா.

தியானமிருக்கும் குடும்பங்களில் வாழ்ந்து வரும் கணவனும் மனைவியும்
1.வசிஷ்டரும் அருந்ததியும் போன்று வாழ்ந்து
2.நளாயினியைப் போன்று கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் மதித்து நடந்து
3.சாவித்திரியைப் போன்று கணவனும் மனைவியும் இரு மனமும் ஒன்றி வாழ்ந்து
4.இரு உயிரும் ஒன்றி வாழ்ந்து
5.இல்லற வாழ்க்கையில் இருளினை அகற்றி
6.நஞ்சினை வென்று பேரருள் பெற்று பேரொளி என ஆகிட அருள்வாய் ஈஸ்வரா

தியானமிருக்கும் குடும்பங்களில் வளர்ந்து வரும் குழந்தைகள் அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் பெற்று அருள் ஞானக் குழந்தைகளாக வளர்ந்து வாழ்ந்திட அருள்வாய் ஈஸ்வரா.

எங்கள் குழந்தைகள் அருள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று
1.கல்வியில் ஞானம் பெற்று
2.கருத்தறிந்து செயல்படும் திறன் பெற்று
3.உலக ஞானம் பெற்று
4.உலகைக் காத்திடும் உத்தம ஞானிகளாக
வளர்ந்து வாழ்ந்திட அருள்வாய் ஈஸ்வரா.

இதை எல்லோரும் ஒன்று போலச் சொல்லி “உணர்வின் ஒலிகளை எழுப்பும் பொழுது..,
1.எல்லோருடைய செவிகளிலும் படுகின்றது.
2.இந்த உணர்ச்சிகள் உயிருக்கு எட்டுகின்றது.
3.கண்களுக்கு வருகின்றது.
4.சொன்ன உணர்வுகள் எல்லாம் இந்த பூமி முழுவதும் படர்கின்றது.
5.நம்முடைய கண்களில் உள்ள கருமணிகள் பதிவாக்குகின்றது.
6.கண்ணுடன் சேர்ந்த காந்தப் புலன் இந்த அருள் உணர்வுகளைக் கவர்ந்து இழுக்கின்றது.
7.நம்மைச் சுவாசிக்கச் செய்கின்றது.
8.நம் உயிரிலே மோதுகின்றது.
9.இந்த உணர்ச்சிகள் இரத்தநாளங்களில் கலக்கின்றது.

இப்படி “எல்லோரும்.., நன்றாக வேண்டும்” என்று நாம் சொல்லும் உணர்வுகள் வலுப்பெறுகின்றது. அடிக்கடி இந்த மாதிரிச் சொன்னோம் என்றால் “நோயுள்ளவர்கள் கேட்டால் கூட.., அந்த நோயெல்லாம் நீங்கிவிடும்”.

மகரிஷிகளின் அருள் சக்தியால் அவர்கள் குடுமபத்தில் உள்ள சிரமங்களெல்லாம் நீங்கள் வேண்டும் என்று நீங்கள் ஒன்று சேர்ந்து கூட்டாகத் தியானித்துப் பரிசுத்தப்படுத்துங்கள்.., நீங்கிவிடும்.

இது ஒரு “பழக்கத்திற்கு..,” வரவேண்டும்.

ஒருவர் மிகக் கொடுமையான நோயால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தாலும் அதனின் வீரியத்தைக் குறைக்க முடியும். ஆனால், அதே சமயத்தில் “இறப்பதை..., யாரும் தடுக்க முடியாது”.

அவர் சேர்த்துக் கொண்ட உணர்வுக்கொப்ப அவர் உயிரான்மா வெளியிலே சென்றாலும்.., இந்தக் கூட்டுத் தியானத்தின் அமைப்பு கொண்டு அவரின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாவைச் சப்தரிஷி மண்டலத்திற்கு உந்தித் தள்ளுதல் வேண்டும்.

அங்கே இணைத்து அவரைப் பிறவியில்லா நிலை அடையச் செய்ய வேண்டும்.

ஆனால், முழுமையாக ஆயுள் காலம் முழுவதும் தியானம் செய்து “தியானத்தால்.., நோயெல்லாம் நீக்கிவிடுவேன்” என்று சொன்னால் யாரும் முழுமையாக இருக்கப் போவதில்லை. “இருக்கவும் முடியாது”.

1.சிறிது காலம் இந்த உடலிலிருந்து “நல்லதை எண்ணுவதற்காக வேண்டியாவது..,” வாழ வைக்கலாம்.
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை “அவரைப் பெறச் செய்வதற்காக வேண்டி” வாழ வைக்கலாம்.

முழுமையாக யாரையும் நாம் காப்பாற்ற முடியாது. நம்மையே.., நாம் காப்பாற்ற முடியாது. பிறகு.., யாரை நாம் காப்பாற்ற முடியும்...!

துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் சேர்த்து முழுமை பெறுவதற்காகத்தான் இதை மீண்டும் மீண்டும் உபதேச வாயிலாகப் பதிவு செய்து கொண்டிருக்கின்றோம்.

எல்லோரும் நல்லதாக வேண்டும் என்று சொல்லும் பொழுது எல்லா உணர்வுகளும் நமக்குள் நல்லதாகின்றது. நாம் கூட்டமைப்பு கொண்டு எல்லோரும் சேர்ந்து சொல்லப்படும் பொழுது மிகவும் சக்தி வாய்ந்ததாக மாறும்.

வெள்ளம் வந்தால் குப்பை கூளங்களை ஒட்டு மொத்தமாக அடித்துச் செல்வது போல் அந்த அருள் சக்தி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று எல்லோரும் சேர்ந்து எண்ணும்போது ஒவ்வொருவருக்குள்ளும் அதீத அளவில் சக்திகள் கூடும்.

தீமைகள் விலகும். வாழ்க்கையில் வேதனையின்றி வாழ முடியும். மன மகிழ்ச்சி கிடைக்கும். ஆகவே, வாரத்தில் ஒரு நாளாவது கூட்டாகத் தியானியுங்கள்.


உங்கள் அனுபவம் பேசும்.