ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 26, 2016

துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்கள் உயிரிலே மோதச் செய்தால் “கிரியை”

யாம் உபதேசிக்கும் அருள் உணர்வுகள் உங்கள் வாழ்க்கையைச் சீர்படுத்தவும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெருக்கவும் இந்த உடலில் பிறவியில்லா நிலை அடையவும் உங்களுக்கு உதவும்.

ஆகவே, யாம் பதிவு செய்யும் அருள் ஞானிகளின் அருள் வித்துக்களுக்கு ஆக்கச் சக்தியாக அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை ஏங்கிப் பெற ஏங்கித் தியானியுங்கள்.

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான அதனின்று வரும் பேரருள் பேரொளியினை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறவேண்டும் என்று உயிரான ஈசனிடம் வேண்டி ஏங்கித் தியானியுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களைத் திறந்து விண்ணை நோக்கி ஏங்கித் தியானியுங்கள்.

எதை நாம் பெறவேண்டும் என்றாலும் அதற்கு முழுமையான ஆசை வேண்டும். அதாவது, "இச்சா சக்தி..., கிரியா சக்தி".

ஒரு மனிதனின் வேதனையை அறியச் செய்யும் பொழுது இச்சை. நம் உயிரிலே மோதும்போது கிரியை. வேதனை உணர்ச்சிகளை நாம் அறிகின்றோம். வேதனை உணர்வு நம்மை இயக்கி நம்மையும் வேதனைப்படச் செய்கின்றது.

ஆனால், உங்களுக்குள் வேதனையை நீக்கிய உணர்வினை இப்பொழுது பதிவு செய்கின்றோம். வேதனையை நீக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியினைப் பெறவேண்டும் என்ற இச்சை, அந்த ஆசை உங்களுக்கு வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்கள் உயிரிலே மோதச் செய்யும் போது கிரியை. அந்த உணர்வின் தன்மை அதன் ஞானத்தின் வழியில் உங்களுக்குள் அது சேர்ப்பிக்கும்.

ஆகவே, நீங்கள் இச்சைப்படுவது எதுவாக இருக்க வேண்டும்?

நஞ்சினை வென்றிடும் இருளினை நீக்கிப் பொருளினைக் காணச் செய்யும் அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருளைப் பெறவேண்டும் என்ற இச்சைப்படுங்கள்.

அந்த உணர்வின் தன்மை உங்கள் உயிரிலே மோதச் செய்யுங்கள். இந்த உணர்ச்சிகளை உங்கள் உடல் முழுவதும் படரச் செய்யுங்கள். உங்கள் உடலிலுள்ள நல்ல அணுக்களுக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியி்னைச் சேர்ப்பியுங்கள்.

தீமையைப் பிளக்கும் ஆற்றல் பெறுவீர்கள். சிந்தித்துச் செயல்படும் ஆற்றல் பெறுவீர்கள். உணர்வை ஒளியாக மாற்றும் திறன் நீங்கள் பெறுவீர்கள்.

உங்கள் பார்வையால் மூச்சால் மற்றவர்களுடைய தீமைகளும் வேதனைகளும் அகற்ற முடியும். 

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளால் அந்தத் துருவ நட்சத்திரத்துடன் நீங்கள் தொடர்பு கொள்ள முடியும். மகரிஷிகளின் உணர்வலைகளை எளிதில் பெற முடியும். அவர்களின் ஆற்றலும் உங்களுக்குள் பெருகும்.

ஆகவே, துருவ நட்சத்திரத்துடன் ஒன்றி வாழும் நிலை பெறுங்கள்.