ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 24, 2014

நமக்கு சில சமயங்களில் விக்கல் வருகிறது, சில சமயங்களில் புரையோடுகிறது ஏன்?

1. நமக்கு சில சமயங்களில் விக்கல் வருகிறது, சில சமயங்களில் புரையோடுகிறது ஏன்?
உதாரணமாக, ஒரு நண்பன் நமக்குத் தீங்கு செய்துவிட்டால், அதை எண்ணி நமக்குள் பதிவு செய்து கொள்கிறோம் என்று வைத்துக் கொள்வோம்.

பாவி எனக்குத் தீங்கு செய்தானே, அவன் உருப்படுவானாஎன்று கோபத்தின் எல்லை கடந்து உணர்ச்சி பொங்கப் பேசுகின்றோம்.

அவ்வாறு நமக்குள் தீங்கு செய்தவனை எண்ணி, அது விளைந்து, அவன் தீங்கு செய்தான் என்று நமக்குள் பதிந்தாலோ, அவனுக்குள்ளும் இந்த பதிவு உண்டு.

ஆக இந்த சாபமிட்ட இந்த உணர்வின் நிலைகள் அங்கே சென்று, அவனுக்குள் புரையோடி, அவனுடைய நற்குணங்களை அழித்துவிடும்.

ஒவ்வொரு முறையும் இவ்வாறு சாபமிடும் நிலைகளில், "பாவி அவன் தொல்லை கொடுக்கிறான்" என்று எண்ணினால்,  இது, அவன் செயலாக்கங்களுக்கே தடையாயிருக்கும்.

இப்பொழுது, நண்பர்களுக்குள் ஒருவருக்கொருவர் வேதனைப் பட்டுப் பிரிந்திருந்தாலும், சில நேரங்களில் புரையோடும். புரையோடும் பொழுது, சாதம் விழுங்கினாலும் விழுங்க முடியாது.  எச்சில் விழுங்கும் பொழுதே புரையோடும். இவையெல்லாம், 
வெறுப்பின் உணர்வுகள் நமக்குள் வரும்பொழுது
நமது உறுப்பின் இயக்கங்களே தனி.

ஆக நண்பனாக இருக்கும் பொழுது, அவன் நன்மை செய்தான் என்று எண்ணப்படும் பொழுது, விக்கல் வருகின்றது. அப்பொழுது உயிரின் தன்மை நமக்குள் ஊட்டி, அது தனித்துக் கொள்ளும். மகிழ்ச்சியின் நிலைகள் நமக்குள் உருவாகின்றது.

இதெல்லாம், இயற்கையின் நிலையின் இயக்கங்கள், மற்றோருடன் ஒன்றி இயக்கும் நிலைகளை இங்கே உருவாக்குகின்றது.
2. பிறருடைய உணர்வுகள் நமக்குள் மாறி வந்துவிடுகிறது - மாரியம்மன்
நாம் நமது வாழ்க்கையில் மற்றோருடன் பழகிய நேரங்களில், தீமையின் உணர்வுகளை நமக்குள் பதிவு செய்யும் பொழுது, நமக்குள் யாருடைய குணங்களைப் பதிவு செய்து கொண்டோமோ அது இங்கே விளையத் தொடங்கி விடுகின்றது.

இதைப் போன்று, பற்றின் தன்மையால் தீமையே விளைகின்றது.
பாசத்தாலோ, பண்பாலோ, அன்பாலோ,
பிறர்படும் துயரங்களைக் கேட்டறிய நேரும்பொழுது,
அந்த உணர்வின் தன்மை நமக்குள் புகுந்து,
அந்த உணர்வின் வித்தாக விளைந்து,
அந்த உடலில் இருந்து எது வெளிப்படுகின்றதோ
அந்த அலைகளைக் கவர்ந்து,
நமக்குள் நோயாக உருவாக்குகின்றது.

சூரியன் தனக்குள் வருவதற்கு முன்பே நஞ்சினைப் பிளந்துவிடுவது போன்று, மனிதன் தன் உணர்வின் செயலால் தீமைகள் தன்னிடத்தில் வரும் பொழுது, அதனைப் பிரித்துத் தனக்குள் ஒளியின் சுடராக, மாற்றும் தன்மை பெற்றவன்.

கோளாக இருந்து  நட்சத்திரமானதைப் போன்று, மனிதன், தனது உணர்வின் துணையால் ஒளியின் சரீரமாக மாறி,  அதனின் செயலாக்கங்களாக நட்சத்திரமாக இருந்து,  தீமையைத்  தன்னிடமிருந்து வெகுதூரத்திலேயே சுட்டுப் பொசுக்கும் ஆற்றல் பெற்றவன்.  

இந்த ஆற்றல், மனித வாழ்க்கையில் தீமைகளை அகற்றும் உணர்வுகளைப் பெற்ற நிலையால் விளைவதுதான்.

இதைத்தான், மாரியம்மன்  கோவிலில் நமக்குக் காண்பிக்கின்றார்கள். ஒருவருடைய தீமையைக் கேட்டறிய நேரும் பொழுதுஅது நமக்குள் மாறி (அவருடைய தீமை நமக்குள் மாறி -- மாரி) தீமை செய்யும் நிலையாக விளைவதைப் போன்று, 
துருவ நட்சத்திரத்தின் பேரருளை பேரொளியை
நாம் பெறவேண்டும் என்று எண்ணும் பொழுது,
அது நமக்குள் மாறி,
தீமைகளை அகற்றும் சக்தியாக உருவெடுக்கின்றது.

3. நமது எல்லை மகரிஷிகளின் அருள்வட்டம் தான்
ஆகவே, நாம் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளைப் பற்றுடன் பற்ற வேண்டும். அந்தப் பற்றினை பற்றுடன் பின்பற்றினால், நம்மை அறியாது சூழும் தீமைகளை அகற்ற முடியும். அறியாமை என்ற இருளை விலக்க முடியும்.

இந்த வாழ்வில் பெறவேண்டிய மெய்யான பொருளாக உயிருடன் ஒன்றும் உணர்வினை, ஒளி பெறச் செய்ய முடியும். ஆகவே, மெய்ஞானிகள் உரைத்த வழி எதுவோ, அதனைப் பின்பற்றி அனைவரும் பெருவீடு பெருநிலைஅடைவதற்கு எமது ஆசிகள்.

எல்லையில்லா இந்த பேரண்டத்தில்,  ஒரு எல்லையோடு நின்றாடும் இப்பரம்பொருளில்,
வந்து உதித்த உயிராத்மாக்கள் நாம் அனைவரும்,
மகரிஷிகளின் அருளாற்றலைப்  பெற்று வாழ்வதே,
நமது எல்லையாக அமைத்திடல் வேண்டும்.