ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 20, 2024

நல்லதுக்காக ஏங்கினாலும்… எந்தக் காரணத்தைக் கொண்டும் “வேதனையை வளர்த்து விடக்கூடாது…”

நல்லதுக்காக ஏங்கினாலும்… எந்தக் காரணத்தைக் கொண்டும் “வேதனையை வளர்த்து விடக்கூடாது…”

 

மனிதனான பின் மனிதனின் வாழ்க்கையில் நல்லது செய்யும் போதும் அறியாது எத்தனையோ சிக்கல்கள் வருகிறது…! எப்படி…?

உயர்ந்த குணங்கள் கொண்டோர் பிறருக்குப் பண்பு கொண்டும் பரிவு கொண்டும் உபகாரம் செய்தால் அதன் விளைவாக எதிர் நிலையான உணர்வுகளைச் சந்திக்க நேர்கிறது.

அப்போது… பண்பு கொண்ட அந்த மனிதனுக்குள் விஷத்தன்மைகள் கலக்கப்படும் பொழுது இவனையும் வேதனைப்படச் செய்து… நரகலோகத்திற்கே அவனை அழைத்துச் சென்று விடுகின்றது.

1.நல்ல பண்புகளை அவன் எண்ணி ஏங்குகின்றான்…
2.நான் நல்லதைத் தான் செய்தேன்… எனக்கு இப்படி வந்து விட்டதே…! என்று ஏங்கி அந்த விஷத்தை வளர்த்துக் கொள்ளும் நிலையில்
3.விஷ அணுக்களை உருவாக்கிக் கொண்டு அந்த வேதனை கொண்டு அவன் மடிகின்றான்.

மடியும் பொழுது எதன் மேல்… யார் மேல் வேதனையாக எண்ணி அவன் வெளி வந்தானோ அந்த உணர்வின் நினைவாற்றல் வந்தபின் அந்த உடலுக்குள் புகுந்து
1.அங்கேயும் இந்த விஷத்தைப் பாய்ச்சி அவனையும் வீழ்த்தி விட்டு
2.விஷமான அணுக்களைப் பெருக்கி முழுமை அடைந்து வெளிவந்த பின்
3.விஷப் பூச்சிகளாக விஷப் புழுக்களாக பாம்பினங்களாக உருமாற்றி விடுகின்றது உயிர்.

எத்தனையோ கோடிச் சரீரங்களில் ஒன்றுக்கு இரையாகி… அதிலிருந்து மீண்டிடும் உணர்வை எடுத்துப் பரிணாம வளர்ச்சி அடைந்து… எல்லாவற்றையும் அடக்கிடும் நிலை பெற்றவன் தான் மனிதன்.

ஆகவே… வரும் தீமைகளிலிருந்து மனிதன் எவ்வாறு மீள வேண்டும்…? என்பதனை நான் (ஞானகுரு) அறிய… இரவும் பகலும் ஒவ்வொரு நொடியிலும் காடு மேடுகளில் எம்மை அலையச் செய்தார் குருநாதர்.

அனுபவ வாயிலாகப் பேருண்மைகளை அறியச் செய்து தீமையிலிருந்து உன்னை மீட்டுக் கொள்ளும் நிலையாக நீ எதைத் தேர்ந்தெடுக்கின்றாய்…? அதை நீ எவ்வழியில் பெற வேண்டும்…?

தீமைகளை நீ செய்யவில்லை என்றாலும் தீமை செய்வோனை நீ உற்று நோக்கினால் அந்த உணர்வினை நீ நுகரப்படும் பொழுது… அதை அறியும் தன்மை வந்தாலும்…
1.ஓம் நமச்சிவாய என்று உன் உயிர் உனக்குள் அதை ஜீவ அணுவாக… உடலாக உருவாக்கி விடுகின்றதே…!
2.மீண்டும்… சிவாய நம ஓம் அவன் இப்படித் தவறு செய்கின்றான்…! என்று நீ திரும்பச் சொல்கின்றாய்.

ஆகவே இந்த உணர்வின் தன்மை வளர்ச்சி பெற அந்த அணுக்களும் உனக்குள் பெருகுகின்றது. மனித இனம் என்ற நிலைகளையே மாற்றி உனக்குள் உணர்வுகள் மாறுகின்றது… உருவங்கள் மாறுகின்றது மனிதன் மீண்டும் தேய்பிறையாகத் தான் போக முடிகின்றது.

1.இதிலிருந்து தேய்பிறை ஆகாது உன்னை நீ எவ்வாறு காத்திட வேண்டும்…?
2.எவ்வழியில் உன்னை நீ வளர்த்துக் கொள்ள வேண்டும்…? என்பதனை
3.பல அனுபவங்களைக் கொடுத்து உண்மைகளை உணரும்படி செய்தார் குருநாதர்.

அதைத்தான் உங்களுக்கும் சிறுகச் சிறுக சொல்லி வருகின்றோம்.

எனக்கு குருநாதர் தொட்டுக் காட்டியது போன்று உங்கள் உணர்வுகளுக்குள்ளும் ஞானிகளின் உணர்வுகளைத் தொட்டு காட்டி அதை இணைத்து… அதன் மூலம் அவர்கள் பெற்ற அரும்பெரும் சக்திகளை நீங்களும் பெறும் தகுதியாக “இதைப் பதிவு செய்கின்றோம்…”

குரு வழியில் நீங்கள் இதைப் பதிவாக்கி வளர்த்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் செய்த நன்மை… அது உங்களுக்குள் என்றுமே நிலைத்திருக்கும் நிலையாக
1.அந்த அருள் ஞானிகள் உணர்வு கொண்டு
2.உங்களை நீங்கள் காத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கே இதை உணர்த்துகின்றோம்.

தீமை செய்யும் (இடும்ப) குணங்களும் அதனால் உடலில் உருவாகும் நோய்களும்

தீமை செய்யும் (இடும்ப) குணங்களும் அதனால் உடலில் உருவாகும் நோய்களும்

 

வாழ்க்கை நடைமுறையில் மனிதன் கொள்கின்ற எண்ணத்தின் குணங்களாக
1.மோகம் (மயக்கம் – மருள்)
2.கோபம் (அவசரம் - ஆத்திரம் - ஆவேசம்)
3.காமம் (அதி ஆசைகள் – ஏக்கம்)
4.வெறி (மதம் – செருக்கு)
5.பொறாமை (வெறுப்பு - விரக்தி - குறுகிய மனம்)
6.அதி பயம் (கலக்கம்) போன்ற இந்த ஆறு குணங்களும் இடும்பச் சித்தன் காட்டிய தீதெண்ண குணங்கள்.

இந்தக் குண எண்ண ஓட்டங்களால் மனிதனின் நினைவுகள் அதிலே சிக்கப்பட்டு அந்தச் சுவாசமே “கனம் கொண்டதாக...” ஈர்க்கப்படுகின்றது.

அந்தக் கனமான சுவாசத்தின் அலைகள் சரீரத்தினுள் இரத்த ஓட்ட நாளங்களில் செயல் கொள்ளும் சுவாச நாடிகளின் வழியே ஓடி சுவாச நாடிகளின் முக்கிய கேந்திரங்களாக அந்தந்த இடங்களில் அமையப் பெற்ற மூலம்... மூலாதாரம்.... நாபி... இருதயம்... கண்டம்... நெற்றி... தலையின் உச்சிப் பகுதி... முதலிய அமைப்புகளிலும் ஓடுகின்றது.

1.சரீரத்தில் ஈர்க்கப்படும் இத்தகைய உணர்வுகள் இடும்ப குண வசமாக மனிதனுக்குள் வந்து
2.அந்தந்த எண்ணத்தின் தொடருக்கு நாடிகளில் ஓடிடும் மூச்சலைகள் இரத்த நாளங்களில் ஓடிடும் செயலில்
3.சரீர அவயங்களில் தன் தன் இயக்கத்தில் (நாடிகளில்) செயல்படும் நிலையே
4.அதி தீவிரச் செயல் நிகழ்வாக சரீர இயக்கத்தில் செயல்பட்டு
5.அந்தத் தீதெண்ண குணங்களின் கனம் மிக்க சுவாச ஓட்டத்தில் ஏற்படுவதே உடல் நோய்கள்.

(1). இருதய வலி:-
சுவாச ஓட்டம் சரீரத்திற்குள் சென்று வெளி வரும் செயலில் இருதயப் பகுதியில் இருந்து ஓடிடும் தாய் மூச்சு நாடி நாபிப் பகுதியில் நீரமிலச் சக்தியுடன் இணைந்து செயல்படுகின்ற செயலில் கோபத்தின் கனம் மிக்க சுவாச ஓட்டத்தால் என்ன ஆகிறது...?

அந்தத் தாய் மூச்சு தாக்கப்பட்டு அதனுடன் இணைந்த மார்பு நாடியின் செயலுக்கும் தடை ஏற்படுத்தும் பொழுது உண்டாவதே இருதய வலி.

(2). வாயு... பித்தம்... மன நோய்:-
குறுகிய மன நிலை... மருள்... பொறாமை... ஏக்கம்... உள்ளிட்ட கனம் கொண்ட சுவாசத்தின் தன்மையால் நீரமில சக்தி கொண்டிட்ட நாபி நாடியின் செயலுக்குத் தடை ஏற்படுகிறது.

அதே போல் இடுப்பு எலும்பும் கால் எலும்பும் இணையும் இடத்தில் ஓர் சூட்சம வாயு வெளிப்பட்டு மூல அக்கினியில் கலக்கின்றது.

1.மூல அக்கினியில் கலந்த அந்த வாயு
2.மூலத்திலிருந்து கிளம்பி மூல நாடியின் வழி ஓடி நாபி நாடியைத் தாக்கிடும் செயலில்
3.சரீரத்தில் வாயு பித்தம் மற்றும் மன நோய் ஏற்படும் நிலைகளை உண்டாக்கி விடுகிறது.

(3). உடல் உஷ்ணம்... தோல் வியாதி:-
மோகம்... செருக்கு... அதி ஆசைகள்... என்ற எண்ண ஓட்டத்தில் வரும் சுவாசத்தின் மூச்சலைகள் மூலாதாரம் மூலம் இந்த இரு நாடிகளில் தாக்கப்பட்டு அதி உஷ்ணம் தோல் வியாதிகள் மற்றும் உயிர் நிலையை ஜீரணிக்கச் செய்யும் இரத்தம் சிலந்தி நோய்களும் வரக் காரணமாகின்றது.

கண்ட நாடி பாதிக்கப்படும் பொழுது அறிவின் ஆற்றல் செயல்படாதபடி பிரமை பிடித்த நிலையும் ஊமைத் தன்மையும் மற்றும் காதுகேளாச் செயலும் ஏற்படுகிறது.

இந்த நோய்களும் இவைகளின் கிளைகளாகப் பல்கிப் பெருகும் ஏனைய நோய் நொடிகளும்
1.தான் எடுத்துக் கொண்ட குணத்தின் வீரியத் தன்மைகளால்
2.”மனிதன் தனக்குத் தானே விதித்துக் கொள்ளும் தண்டனைகள் தான்...!”

கண்டத்தின் செயலையும் தாண்டிச் சிரசின் பகுதியில் நெற்றியில் ஓடிடும் நாடிகள் பாதிக்கச் செய்யும் அதி தீவிரச் சிந்தனைகளாலும்... திடீரென ஏற்படும் அதிர்ச்சிகளின் செயலினால் உண்டாகும் பயத்தினாலும் மனிதனுடைய சித்தம் கலங்கிப் பித்தனாகவே (பைத்தியம்) மாற்றிவிடும்.

இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

அது மட்டுமல்ல...!
1.நல் எண்ண குணங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து
2.சுவாச நிலையைச் சீராக்கும் முயற்சியில் மகரிஷிகளின் அருள் சக்திகளை ஒவ்வொரு நிமிடமும் எடுத்து
3.உயரிய சுவாசமாக.. அருள் மணங்களாக.. அந்த மூச்சலைகளை நாடிகளின் கேந்திரங்களுக்குள் செலுத்தினால்
4.சரீர சுத்தி கிடைக்கும்... அதே போல் உயிரான்ம சக்தியும் சுயப்பிரகாச நிலை (ஒளி நிலை) அடையும்.